Pages

Sunday 21 July 2013

மவுன சாட்சிகள்...!



அது ஒரு இருட்டு கிராமம்....
வெளிச்சமிருக்கிறது, ஆனால் பச்சையம் இல்லை...!

நாசி நுழையும் காற்றோ... புழுதியோடு
கருகல் வாசத்தையும் சேர்ந்தே சுமக்கிறது...!
குழந்தைகள் இருக்கிறார்கள்,
பெண்கள் இருக்கிறார்கள்,
வாலிபர்களும் வயோதிகர்களும் கூடவே இருக்கிறார்கள்...!
ஆனால்... உடலிலோ உயிர் மட்டுமில்லை...!
அவர்களோ நடப்பவை யாவும் அறியா மவுனமாய்
கருகல் ஆடை பூண்டு கட்டையாய் கிடக்கிறார்கள்...!
ச்சே, என்ன வாடை இது?
மூக்கை பொத்தியவாறு ஒவ்வொரு அடியாய்
கவனமாய், விரைந்து கடக்கிறார்கள் பத்திரிகை வியாபாரிகள்...!

என் மதுகோப்பைகளில்...
உன் ரெத்தம் நிரம்பி வழியட்டும்...
மவுனமாய் நீயும்
எதிர்ப்பில்லாமல் மரணித்துப் போ...! வென
நெற்றிப்பொட்டை குறிவைக்கிறான் ஒருவன்...

காட்சி மாற்றம்...! அழகியல் மாறுகிறது...
மெல்லிசையும் இடையின உரசல்களோடும்...
அது ஒரு வெற்றி அறிவிப்பு விழா...!
எதிர்த்தடிக்க ஆட்களே இல்லாமல்...
இனம் அழித்து இனம் பெருக்கும்
இராஜதந்திரிகளின் அரசாங்க கோட்டையது...!
ஒவ்வொருவரின் முகத்தில் தான் என்ன ஒரு தேஜஸ்...!
அவர்களின் வெற்றிகளில் பங்கெடுத்து
கொக்கரித்து குதூகலிகின்றனர் மனித வேட்டையாடும்
அரசாங்க சுகவாசிகள்...!

இதோ இங்கே....
தொலைக்காட்சி பெட்டிகளும் இணைய தளங்களும்
அலறிக்கொண்டிருக்கின்றன...!
சும்மாவா? நாட்டை ஆளும் அதிபரின் ஜலதோஷம் அல்லவா?
பலியாகிக் கொண்டிருக்கும் கருவறைக் குழந்தைகளின்
சாம்பல்கள் மேல் ஆங்காங்கே எழுப்படுகின்றன
அவர் ஆயுள் நீட்டிப்பிற்கான பிரார்த்தனை கூட்டங்கள்...!
கோடிக்கணக்கில் அவர் உயிருக்காய்
உயிர்விட்டுக் கொண்டிருக்கும் மெழுகுவர்த்திகளோடு
கண்ணீர் உருகி தொழுகின்றனர் மக்களின் பெரும்தொகையினர்...!

திடீரென பொழியும் குண்டு மழை...
அய்யோ, அங்கே எரிந்து கொண்டிருப்பது என் சகோதரியா?
என் தாயெங்கே? தந்தையங்கே?
தனியாய் தவித்துக் கொண்டிருந்தது தனயனின் இதயக்கூடு...!
தெருவோரம் கூறுகளாக சிதறிக் கிடக்கின்றனர்...
முந்தைய நொடி வரை கூட்டமாய் உறவாடிய உறவுகள்...!
யாராவது கைகொடுங்களேன்...!
யாராவது காப்பாற்றுங்களேன்...!
கதறும் வாய்களுக்குள் அமிலம் வார்த்துச் செல்லும்
குரூர மனித நேயம்(?)...
வால் மிதித்தால் கோபம் கொண்டு சீறிபொங்கும்
பூனையின் அதிகாரம் கூட உன்னிடத்தில் இருக்கலாகாது...
என்று கொக்கரிக்கிறான் நரவேட்டை நடத்தும் வேட்டைக்காரன்...!

ஹப்பா... என்ன ஒரு பயங்கரமான கனவு அது...
கலைந்திருக்கும் கூந்தல் அள்ளி முடித்து,
இன்றைய சமையலுக்கான கோழியை அறுக்கிறேன்...
அங்கே என் கனவு கதாபாத்திரங்கள்
அடுக்கடுக்காய் சதையிழந்து கொண்டிருக்கிறார்கள்...!

No comments:

Post a Comment