Pages

Thursday 24 December 2015

பசங்க - 1




இப்பவெல்லாம் பசங்கள கூட்டிகிட்டு அடிக்கடி ஊர் சுத்துறது. அப்படி நாலு மாசத்துக்கு முன்னாடி சுத்தினப்ப விளையாட்டா ஒரு ஊர்ல உள்ள பசங்க, பாட்டின்னு அவங்க அனுமதியோட போட்டோ எடுத்தோம்.

திடீர்னு இன்னிக்கு அந்த போட்டோஸ்ல நல்லதா தேர்ந்தெடுத்து பிரிண்ட் போட்டு அவங்களுக்கு குடுத்தா என்னன்னு எண்ணம் தோணிச்சு.

அதுவும் காலைலயே பையன் பசங்க-2 படத்துக்கு போகணும்னு சொல்லியிருந்தான். அவன் பேச்சை மீற முடியாம, வரமாட்டேன்னு அடம்பிடிச்ச பொண்ணையும் தாஜா பண்ணி, ரிலீஸ் ஆன முதல் நாளுமா படத்துக்கு போயிட்டு, அப்படியே போட்டோஸ் எல்லாம் ஒரு ஸ்டுடியோ போய் பிரிண்ட் எடுத்துட்டு அந்த ஊருக்கு போனோம்.

முதல்ல ஒரு இடத்துல போய் நின்னுட்டு யார் கிட்ட குடுக்கன்னு தெரியாம முழிச்சோம். அங்க கொஞ்சம் கும்பலா பெண்கள் எல்லாம் உக்காந்து பேசிட்டு இருந்தாங்க.

பொண்ணை கார் விட்டு இறங்கிப் போய் விசாரிக்க சொன்னேன். போட்டோவை காட்டி விசாரிச்சதும் அத்தனை பேருக்கும் ரொம்ப சந்தோசம். இந்த பையன் விருந்துக்கு வந்த பையன், அவன் கிட்ட அப்புறமா குடுக்குறோம்னு ஒரு போட்டோவ காட்டி சொன்னாங்க. இன்னொரு பொண்ணு வீட்ல ஆள் இல்ல, நாங்க குடுத்துடுறோம்னு சொல்லிட்டே, ஒரு பாட்டி போட்டோவ பாத்து, அது பக்கத்து வீட்டு பாட்டி, அதுவும் நாங்க குடுத்துடுறோம்னு சொல்லிட்டே, உங்களுக்கு எந்த ஊருன்னு விசாரிச்சாங்க.


இங்க தான் பக்கத்துலன்னு சொன்னேன். வீட்டுக்கு வாங்க. கொஞ்ச நேரம் பேசிட்டு போகலாம். எங்களையும் போட்டோ எடுங்கன்னு கூப்ட்டு போட்டோ எடுக்க வச்சாங்க. அங்க இருந்து கிளம்பி அடுத்த ஊருக்கு போனோம்.


அங்க இருந்தது நாலு குட்டி பசங்க. நாங்க போனதுமே வாங்கன்னு வரவேற்றாங்க. அங்க இருந்த பாட்டி, காப்பி குடிங்கமான்னு கட்டாயப்படுத்தி காப்பி குடிக்க வச்சாங்க. பசங்க நாலு பேருக்கும் அவங்க போட்டோவ பாத்து ரொம்ப சந்தோசம்.

போட்டோ பாருங்க, போட்டோ பாருங்கன்னு எல்லார்கிட்டயும் காமிச்சு சந்தோசப்பட்டாங்க.

பொண்ணு பாத்துட்டு, அப்படினா, இனி இவங்க எல்லாரும் நமக்கு பிரெண்ட்ஸ்சா அம்மான்னு கேட்டா. ஆமாடா, நாம மத்தவங்கள சந்தோசப்படுத்தினா, அவங்க நம்மள சந்தோசப்படுத்துவாங்க, இவ்வளவு தான் வாழ்க்கையோட ரகசியம்னு சொல்லிட்டே காரை வீட்டுக்கு திருப்பினேன்.

ஒரு சின்ன புன்னகைல நம்மள சுத்தி இருக்குற உலகம் அழகாகிடுது.

Tuesday 27 May 2014

கழுமரக் கதறல்...!


காற்றின் சுழற்சியோ,
இல்லை விதியின் சதியோ,
திசைமாறி போய் விட்ட
கட்டுமரத்தின் நுனியொன்றில்
படபடத்துக் கொண்டிருக்கிறது
அந்த வெள்ளைக் கொடி...!

இன்றாவது ரட்சிக்கப்பட்டுவிட
மாட்டோமாவென தகித்த
அந்த ஆத்மாக்களின் கண்களுக்குள்
குளுமையாய் தென்பட்டன
மூங்கில் காடுகள்...!

இதோ கரை தட்டுப்படுகிறதென
சற்றே ஆசுவாசப்படுத்திய
நேரத்திலே தான்
சமாதானத்தின் தூதுவன்
கழுமரத்தின் உச்சியிலிருந்து
கொடிப் பற்ற கை நீட்டுகிறான்...!

இது அலங்கரிக்கப்பட்ட
கொலைக்களமென்றறியாத
ஆத்மாக்களின் கூக்குரல்
தூரத்தே தேயத் துவங்கியது...!

கொஞ்சம் கொஞ்சமாய்
இடம் விட்டு
நழுவிக் கொண்டிருக்கிறது கட்டுமரம்.
வீசியெறியப்படும்
செங்குருதிகளின் வழித்தடத்தோடு...! 

Monday 28 October 2013

போலியோ என்னும் இளம்பிள்ளைவாதம்...!

போலியோ என்பது சிறு குழந்தைகளை தாக்கும் ஒருவகை வாத நோய் ஆகும். போலியோமைலிட்டிஸ் எனப்படும் இந்த இளம்பிள்ளைவாத நோய் மிக கடுமையான தொற்றுநோய் ஆகும். இது “போலியோ வைரஸ்” எனப்படும் வைரஸினால் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு வாய் வழியாக பரப்பப்படுகிறது. குறிப்பாக இந்த வைரஸ், பாதிக்கப்பட்டவரின் மலம் மூலமாக வெளியேறி, மாசுபடுத்தப்பட்ட நீர்நிலைகள், சுகாதாரமற்ற வாழ்வாதார இடங்களில் கலந்து பின் மற்றொருவரை தாக்குகிறது. 

போலியோ எவ்வாறு நம் உடலை பாதிக்கிறது?

சுகாதாரமற்ற உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் குழந்தைகள் அவ்விடத்தில் புழங்கும் முறைகளினால் மிக சுலபமாக இந்த வைரஸ் அவர்களின் குடல் பகுதியை சென்றடைந்து விடுகிறது. குடல் பகுதியில் இந்த வைரஸ் பல்லாயிரக்கணக்கில் பல்கி பெருகுகிறது. பின் படிப்படியாக இரத்த ஓட்டத்தில் கலக்க ஆரம்பிக்கிறது.

இந்த போலியோ வைரஸ் நம் உடலின் எந்த பாகத்தை தாக்குகிறது? அல்லது எத்தகைய அறிகுறிகளை உருவாக்குகிறது?

அறிகுறிகள்:

பெரும்பான்மையான போலியோ வைரஸ் தாக்குதலில் அறிகுறிகள் சுலபமாக வெளிப்படுவதில்லை. ஆனாலும் சிறிய அளவுகளிலிருந்து பெரிய அளவிலான பல்வேறு அறிகுறிகளை இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படுத்துகிறது.

1. பெரும்பாலும் குடற்பகுதியில் பெருகும் தருணங்களில் தொண்டை கரகரப்பு, காய்ச்சல், வாந்தி, வயிற்று வலி, மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கை உண்டாகுகிறது.

2. இந்த வைரஸ், மத்திய நரம்பு மண்டலத்துக்குள் நுழைந்து விட்டால் தலைவலி, கழுத்து மற்றும் முதுகுவலி, வயிற்று வலி, காய்ச்சல், எரிச்சல், வாந்தி ஆகிய அறிகுறிகள் தோன்றுகின்றன.

இதன் தாக்கம் தான் என்ன?

இதில் பாதிக்கப்படும் நரம்புகள் பொறுத்து தாக்கங்கள் மாறுபடுகின்றன.

1. சுமார் ஒரு சதவித மக்களிடையில், இந்த வைரஸ், மத்திய நரம்பு தொகுதியை (Central Nervous System - CNS) தாக்கி, இயக்குத்தசைகளை பாதித்து, பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது.

2. இந்த வைரஸ்கள் தண்டுவடத்தை பாதித்து உறுப்புகளை செயலிழக்கச் செய்கின்றன. குறிப்பாக இவை ஒருவரின் கால்களை முடக்குகின்றன.

3. அல்லது சதைப்பகுதிகளில் ஊடுருவி, அவற்றை மிருதுவாக்கி சதைப்பகுதியை சீரழிக்கின்றன.

4. மிகவும் அரிதாக, இவை மூளை செல்களை தாக்கி தலைவலி, மனநிலை பாதிப்பு, மற்றும் மூளை வாதத்தை ஏற்படுத்துகிறது.

இவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்று பார்த்தால் உடல்நிலை சார்ந்த பாதிப்புகள் மற்றும் மனநிலை சார்ந்த பாதிப்புகளோடு சமுதாய பாதிப்புகள் அதிக அளவில் இருக்கும்.

1. நரம்பியல் இயக்க பாதிப்பினால் நடப்பதில் சிரமம்
2. மூளை செல்கள் பாதிப்பினால் சுய சிந்தனை இழத்தல்
3. தசை நார்களின் பாதிப்பினால் உடல் நிலை தளர்வு
என இவர்கள் வளர வளர பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகுகிறார்கள்.

இத்தகைய போலியோ வைரஸ் தாக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்வியல் முறை முற்றிலுமாக மாறி விடுகிறது.

1. இவர்கள் சராசரி வாழ்க்கை முறையை இழக்கிறார்கள்.
2. மற்றவர்களின் கேலி கிண்டல்களுக்கு ஆளாகிறார்கள்.
3. ஒரே இடத்தில் முடக்கப்பட்டு தன்னம்பிக்கையை தொலைக்கிறார்கள்.
4. சுய இரக்கம், சுய பச்சாதாபம் கொண்டு அடுத்தவர்களை நம்பி வாழ்கையை நகர்த்தும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.


சரி, இவர்களுக்கான தீர்வு தான் என்ன?

இந்த நோயை முற்றிலும் குணப்படுத்த முடியுமா என்று கேட்டால் முடியாது என்பது தான் பெரும்பாலான பதிலாக இருக்கிறது. நோயின் வீரியத்தை வேண்டுமென்றால் மிகவும் சிரமப்பட்டு குறைத்துக்கொள்ள முடியும்.

எவ்வாறு அதன் வீரியத்தை குறைக்கலாம்?

இது பாதிப்பின் தன்மையை பொறுத்தது.

1. வலுவிழந்த தசைகளில் நோய் தொற்றை தடுக்க மருந்து/ ஆன்டிபையாட்டிக்ஸ் (antibiotics) கொடுப்பது.
2. மிகுதியான வலிகளுக்கு வலி நிவாரணி கொடுத்தல்.
3. மிதமான உடற்பயிற்சி.
4. சத்தான உணவு பழக்க வழக்கங்கள்.
5. செயற்கை உறுப்பு மாட்டுதல்.
6. தேவைபட்டால் அறுவைசிகிச்சை.

இவற்றின் ஏதாவது ஒன்றின் மூலமாகவோ, இல்லை தேவைக்கேற்ற சிகிட்சை மூலமாகவோ குறைந்தபட்ச மீட்சியை காணலாம்.

இத்தனை சிரமங்கள் கொடுக்கும் இந்த இளம்பிள்ளை வாதத்தை வராமலே தடுத்து விட்டால் தான் என்ன? அப்படி நம்மால் தடுக்க முடியுமா?

ஆம், கண்டிப்பாக நம்மால் தடுக்க முடியும். எப்படி?

1. சுகாதாரம் பேணுதல் – நம்மை சுற்றி இருக்கும் சூழலை சுகாதாரமாக வைத்துக்கொள்வோம்.

2. ஆரோக்கியம் காத்தல் – நல்ல சத்தான உணவுகள் கொடுத்து குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம்.

3. நோய் தடுப்பு முறை – தடுப்பூசி அல்லது தடுப்பு சொட்டு மருந்து போடுவது.

நோய் தடுப்பு முறை:

இந்த நோய் தடுப்பு முறை பற்றி நாம் கொஞ்சம் விரிவாக காணலாம்.

வருமுன் காப்பதே இதன் தாரகமந்திரமாகும். போலியோ பற்றி இங்கு குறிப்பிடுவோமானால் நம் குழந்தைகளை இந்த கொடிய வைரஸ் தாக்கும் முன்பே அதே வைரஸ் கொண்டு தற்காத்துக்கொள்ளலாம்.

எப்படி?

இளம்பிள்ளைவாதம் உருவாக்கும் இந்த போலியோ வைரஸின், நோய் உருவாகும் காரணியை நீக்கி விட்டு அதன் எதிரான எதிர்பாற்றலை அதிகபடுத்தும் முறையே இந்த நோய் தடுப்பு முறை. இதனை ஊசி மூலமாகவோ இல்லை சொட்டு மருந்து மூலமாகவோ குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

வகைகள்:
1. பலகீனப்படுத்தப்பட்ட வைரஸ்
2. செயலிக்க செய்யப்பட்ட வைரஸ்

இப்படி நோயினை உருவாக்க முடியாத வைரஸை குழந்தைகளின் உடலுக்குள் செலுத்தி, அவற்றிக்கு எதிரான நோய் தடுப்பாற்றலை தூண்டுவதன் மூலம் வீரியமிக்க போலியோ வைரஸ்கள் அவர்களை அணுக விடாது தடுத்து விடலாம்.

இப்பொழுது மிகவும் பிரபலமான முறையாக Oral Polio Vaccine (OPV) அதாவது வாய்வழி சொட்டு மருந்து உள்ளது.

1. இதனை அறிமுகபடுத்தியவர் யார்?
2. இதனை எப்படி கொடுக்க வேண்டும்?
3. யாருக்கு கொடுக்க வேண்டும்?

1961-ம் ஆண்டு இந்த போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் முறையை முதன்முதலில் அறிமுகபடுத்தியவர் ஆல்பர்ட் சாபின் (Albert Sabin). இதில் போலியோவை ஏற்படுத்தும் மூன்று வகையான வைரஸ்களும் சரியான விகிதத்தில் பலகீனப்படுத்தப்பட்டு குழந்தைகளுக்கு வாய் வழி சொட்டு மருந்தாக கொடுக்கப்படுகிறது.

இதில் அப்படி என்ன விசேசம்?

இப்படி கொடுக்கப்படும் இந்த பலகீனப்படுத்தபட்ட வைரஸ், குழந்தைகளின் வாய்வழியாக குடல் பகுதியை சென்றடைகிறது. அங்கு இது நான்கில் இருந்து ஆறு வாரம் வரை உயிர்த்திருந்து குழந்தைகளின் நோய் எதிர்ப்பாற்றலை தூண்டுகிறது. இதனால் மூன்று விதமான போலியோ வைரஸ்களுக்கு எதிரான பிறப்பொருள் எதிரியை (antibodies) நோய் தடுப்பு மண்டலம் (immune system) உற்பத்தி செய்கிறது. இதனால் போலியோவிற்கு எதிரான நோய்தடுப்பாற்றல் வலுபடுத்தப்படுகிறது. அதன் பின் வீரியமிக்க வைரசுகள் உடலில் நுழைந்தால் அவை நுழைந்த வேகத்திலேயே அழிக்கப்படுகின்றன. போலியோ வராமல் மனித உயிர்களும் பாதுகாக்கப்படுகின்றன.

இவற்றின் மற்றைய விசேஷமாக:

1. கொடுப்பது சுலபம் – வாய் வழியாக சுலபமாக கொடுக்கலாம்
2. திறமையான மருத்துவர் துணை தேவையில்லை – செவிலி தாயோ இல்லை சுகாதாரத்துறை பணியாளரோ போதும்.
3. சுத்திகரிக்கப்பட்ட ஊசிகளின் தேவைகள் இல்லை
4. வலிகள் இல்லாத உட்புகுத்தல் முறை
5. மிக மிக மலிவானது.
6. பாதுகாப்பானது
7. நீண்ட நாள் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்க வல்லது.
8. மிக மிக பாதுகாப்பானது என்று உலக சுகாதார மையத்தால் சான்று அளிக்கப் பட்டது.

போலியோ சொட்டு மருந்து முகாம்:

இந்தியாவில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ நோய் வராமல் தடுப்பதற்கான சொட்டு மருந்து அளிக்கும் திட்டம் அனைத்து மாநிலங்களிலும், இந்திய ஆட்சிப்பகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இலவச சொட்டு மருந்து அளிக்கும் திட்டத்தை குறிப்பிட்ட நாளில் மாநில அரசுகள் அல்லது ஆட்சிப் பகுதி நிர்வாகங்கள் செயல்படுத்துகின்றன. மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், பேருந்து நிலையம், தொடருந்து நிலையம், விமான நிலையம், வழிபாட்டுத் தலம், பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்கள் போன்ற பகுதிகளில் இதற்கான சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து அளிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்தப் போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழ்நாட்டில் 40 ஆயிரத்து 399 மையங்களில், சுமார் 2 லட்சம் ஊழியர் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. இந்த மையங்கள் மற்றும் பணியாளர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் மாறுபடக்கூடும்.

இதனை எத்தனை தடவை யாருக்கு கொடுக்கலாம்?

பெரும்பாலும் இதனால் பக்க விளைவுகள் இல்லையென்பதால் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் யாருக்கு வேண்டுமென்றாலும் (சில மருத்துவ ஆலோசனைகள் தவிர்த்து) எத்தனை தடவை வேண்டுமென்றாலும் கொடுக்கலாம்.

கிளம்பி விட்டீர்களா?

போலியோவை பற்றி இத்தனை தெரிந்து கொண்டோம். இதனை நீங்கள் மட்டும் அறிந்து கொண்டால் போதுமா? முடிந்தவரை மற்றவர்களுக்கும் இதனை சொல்லிக் கொடுங்கள். உங்கள் குழந்தைகளை அருகில் உள்ள போலியோ தடுப்பு முகாமுக்கு எடுத்து சென்று சொட்டு மருந்து கொடுத்து அவர்களின் ஆரோக்கியமான பிரகாசமான வாழ்க்கைக்கு வழி செய்யுங்கள்.

ஒரு நிமிடம் கவனியுங்கள்:

ஏற்கனவே இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களை ஒரு நோயாளியாக பார்க்காமல் சக மனிதராக பார்க்கும் பக்குவம் நம் அனைவருக்கும் வேண்டும். இதன் மூலம் போலியோ என்னும் கொடிய நோயை இந்த உலகத்தை விட்டு விரட்டுவோம் என்று உறுதி எடுப்போம். வாழ்க மனிதம்.

Friday 18 October 2013

வேண்டாமே விபரீதம்...!


இன்றைய காலகட்டத்தில், குடும்பம் என்றால் ஒரு தந்தை, ஒரு தாய், அவர்களின் குழந்தை என மூன்று பேர் என்று சொல்லும் அளவு மிகவும் சுருங்கி விட்டது. ஒரு குழந்தையை பெற்று வளர்த்து அவனை/ அவளை ஆளாக்கி அவர்கள் நல்ல நிலையில் உயர்வதை பார்த்து பூரித்து போவதற்குள் பெற்றோர் எத்தனையோ தடைகளை தாண்டி வர வேண்டி இருக்கிறது.

அந்த தடைகள் எளிதான தடைகளாக இருப்பதில்லை. நான் இங்கு கல்விமுறை பற்றி எதுவும் குறிப்பிட போவதாகவும் இல்லை. என்னுடைய இன்றைய அலசல் அவர்கள் ஆரோக்கியம் சம்மந்தப் பட்டது. அன்றைய காலக்கட்டங்களில் பெற்றோர் என்றால் அவர்களுக்கு கிட்டத்தட்ட ஆறில் இருந்து பனிரெண்டு குழந்தைகள் வரையோ அதற்கும் மேற்பட்டோ இருக்கும். என் தாத்தா பாட்டிக்கு பனிரெண்டு குழந்தைகள். எனவே ஒரு பயம் இல்லாமல் குழந்தைகளை அவர்கள் போக்கில் விட்டு பிடித்து வளர்க்க முடிந்தது. கொள்ளை நோய்களினாலும் இயற்கை சீற்றங்களாலும் பெரும்பான்மையான மக்கள் தொகை குறைக்கப்பட்டு கொண்டிருந்தாலும் மக்கள் பேரில்லாத வீடுகள் மிக குறைவாகவே இருக்கும்.


ஆனால் இன்றோ கொள்ளை நோய்களின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டு விட்டாலும் எமன் வேறு பல ரூபங்களின் கொத்துக்கொத்தாக உயிர்களை பறித்துக்கொண்டு தான் இருக்கிறான், வீட்டுக்கு ஓன்று அல்லது இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு அவர்களை வெளியே அனுப்பி விட்டு இங்கு பெற்றோர் வயிற்றில் நெருப்பை கட்டி வைத்த நிலையில் தவித்துக் கொண்டிருக்கின்றனர். பார்த்து பார்த்து வளர்த்த குழந்தையை எமனுக்கு வாரி கொடுக்க யாருக்கு தான் மனம் வரும்?

பூகம்பம், எரிமலை, நிலநடுக்கம், கடல் கொந்தளிப்பு, சூறாவளி என்று இயற்கை சீற்றங்களை தடுக்க முடியாது போனாலும் நம்மால் தடுக்க முடிந்த விபத்து உண்டு. அவை தான் சாலை விபத்துகள்.

ஆம், இங்கு காலை நேரங்களில் வீட்டை விட்டு வெளி வந்து சாலையை கொஞ்ச நேரம் உற்று நோக்குங்கள். அனைவரும் எதோ ஒரு பரபரப்பில் தான் விரைந்து கொண்டிருப்பார். அது பரவாயில்லை, மற்றவர் செல்லும் வழி தடங்களை தடுத்துக்கொண்டும், இடையில் புகுந்துக் கொண்டும் விரைந்து கொண்டிருப்பார்கள். அதிலும் வயது வந்த குழந்தைகள் மூன்று நான்கு பேர் ஒரே மோட்டார் வாகனத்தில் சர் சர் என்று பேருந்துகள் இடையிலும் மற்ற வாகனங்கள் இடையிலும் வலமும் இடமுமாக வளைந்தும் நெளிந்தும் சென்றுக் கொண்டிருப்பார்கள். ஒரு நொடி அவர்கள் கணிப்பில் தவறு நேர்ந்து விட்டால் மொத்தமாய் பறிகுடுக்கவும் நேர்ந்து விடுகிறது.

நான் பணிபுரியும் கல்லூரியில் இணைந்து ஏழு வருடங்கள் ஆகிறது. இந்த ஏழு வருடங்களில் எத்தனை எத்தனையோ விதமான விபத்துக்களால் உயிரிழந்த மாணவர்கள் ஏராளம். அதிலும் மிக கோரமான விபத்து இரண்டு வருடங்களுக்கு முன் எங்கள் கல்லூரி வரும் வழியில் நடந்தது. அது காலை எட்டே முக்கால் மணி. கல்லூரிக்கு வரும் அனைவரும் வேக வேகமாக கல்லூரி நோக்கி விரையும் நேரம். கல்லூரி வகுப்பு செல்ல பிடிக்காமல் மாணவன் ஒருவன் அவன் நண்பனோடு கல்லூரி எதிர் சாலையில் விரைந்து கொண்டிருந்தான். அது மிகவும் உயரமான பகுதி. கிட்டத்தட்ட ஒரு மலை மேல் ஏறுவதை போல் தான் ஏற வேண்டும். அதில் மிகவும் கஷ்டப்பட்டு ஏறிக் கொண்டிருந்தது மணல் லாரி ஓன்று. மாணவர்களோ தங்களை ஆசிரியர்கள் யாரும் பார்த்து விட கூடாது என வேகமாக மேலேறிக் கொண்டிருந்தனர். திடீரென மணல் லாரி அருகில் வந்ததும் எதிரே வந்த வாகனத்தில் மோதாமல் இருக்க திடீரென வண்டியை திருப்ப, வண்டி நிலைதடுமாறி மணல் லாரியின் சக்கரங்கள் அடியில் சிக்கியது. அதே வேகத்தில் மணல் லாரி இருவரின் தலை மேல் ஏற, அருகில் சென்று விரைந்து கொண்டிருந்த அத்தனை வாகனங்களிலும் இவர்களின் சதை துணுக்குகள். எத்தகைய கோரம் அது. முகங்கள் சிதைக்கப்பட்ட நிலையில் என்று சொல்வதை விட வெறும் சதைகூழ் கண்டு அன்று பதறி துடித்தனர் பலர். அவர்களின் பெற்றோர் நிலைமையை யோசித்துப் பாருங்கள். இதற்காகவா தங்கள் தூக்கம் மறந்து, அன்பை பொழிந்து உழைப்பை கொட்டி இவர்களை வளர்த்தார்கள்?

கல்லூரிக்கு நான் எனது காரில் தான் பயணம் செய்வேன். எங்கள் கல்லூரி வளாகம் எனபது பல்வேறு வகை கல்லூரிகளை உள்ளடக்கியது. ஒரே இடத்தில், கலை மற்றும் இலக்கியம், ஒரு இஞ்சினியரிங், இரண்டு பாலிடெக்னிக், ஒரு ஆசிரியர் பயிற்சி பள்ளியென அத்தனையும் உள்ளடக்கியது. இதில் இரண்டு மாணவர்கள் ஒன்றாக பயணம் செய்தனர். இருசக்கர வாகனத்தில் வேகமாக செல்லும் அவர்கள் எப்பொழுது கார், பேருந்து, பைக் என்று எந்த வாகனம் முன் சென்றுக் கொண்டிருந்தாலும் அவர்களின் வலப்புறமாக சென்று திடீரென குறுக்கே பாய்ந்து இடப்புறம் செல்பவர்கள். அவர்களால் ரோட்டில் செல்லும் அத்தனை வாகன ஒட்டிகளுக்கும் சிரமம் தான். அவர்களை எச்சரிக்க நினைத்தாலும் கண்ணிமைக்கும் நேரத்துக்குள் பறந்து விடுவர். பின் அவர்கள் கல்லூரியில் முறையிடலாம் என்று நினைத்த போது ஏற்கனவே அவர்கள் கல்லூரி நிர்வாகத்தினரால் கண்டிக்கப்பட்டிருந்தனர். இந்த இளம் ரெத்தங்களுக்கு ஏன் தெரிவதில்லை, தங்கள் உயிரின் அருமையும், பெற்றவர்களின் பதபதைப்பும்?

மற்றுமொரு சம்பவம். சமீபத்தில் சில அரசியல்வாதிகள் தொடர்ந்து கொலை செய்யப்படுவதால் தமிழகமெங்கும் பந்த் நடைபெற்றது. அன்று கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும், விடுமுறை இல்லை என்றும் பல்வேறு குழப்ப நிலை. பேருந்துகள் வழக்கமாக ஓடும் என்று அறிவிக்கபட்டிருந்ததால் சில கல்லூரிகள் மாணவர்களை அரசு பேருந்தில் கல்லூரி வருமாறு வலியுறுத்தி இருந்தனர். எங்கள் கல்லூரியிலும் எங்களை வர சொல்லி விட்டதால் நான் காரில் கொஞ்சம் தாமதமாகவே கிளம்பினேன். வரும் வழியில் தான் பார்த்தேன், ஒரு இளைஞன், தலை நசுங்கி அங்கேயே மாண்டு கிடந்தான். வழக்கமாக கல்லூரி பஸ்ஸில் செல்லும் தங்கையை அன்று கட்டாயத்தின் பெயரால் பைக்கில் விட சென்றவன் ஒரு மினி பஸ் மீது மோதி கீழே விழுந்து மற்றொரு மினி பஸ் அவன் தலையில் ஏறி இருக்கிறது. நேரில் பார்த்தவர்கள் எல்லாம், அவன் வேகமாக வந்தான் என்றே சொல்லிக் கொண்டிருந்தனர். என்ன சொல்லி என்ன பலன்? போன உயிரை திரும்ப பெற முடியுமா?

தினமும் வேகமாக கண்மண் தெரியாமல் விரைந்து கொண்டிருக்கும் சின்னஞ்சிறுசுகளை பார்க்கும் போதெல்லாம் என் மனம் பதைக்கிறது. உயிரின் மதிப்பே தெரியாமல் எப்படி இவர்கள் இவ்வாறு தற்கொலை விபத்துகளை வரவேற்றுக் கொள்கின்றனர்?

விபத்துகள் தவிர்க்கமுடியாதது அல்லவே. நாம் எச்சரிக்கையாக இருந்தால் பாதியளவு விபத்துக்களை கண்டிப்பாக தடுத்து விடலாம். இந்த கட்டுரையை எழுதி கொண்டிருக்கும் சமயம், குடி போதையில் மூன்று இளைஞர்கள் என் வீட்டு வாசலை வேகமாக கடக்கிறார்கள். ஒருவன் மயங்கிய நிலையிலும், மற்றொருவன் பாதி மயக்க நிலையிலும், ஓட்டுபவன் தடுமாறி வண்டி ஓட்டியும் செல்கின்றனர்.

இளைஞர்கள் கொஞ்சமாவது சிந்திக்கலாம். பெற்றோரின் நிலைமைகளை கொஞ்சமாவது புரிந்து கொள்ள முயற்சிக்கலாமே...


Monday 30 September 2013

கருப்பை வீக்கமும் (எண்டோமெட்ரோசிஸ்) மாதவிடாய் கோளாறுகளும்...

பெண்ணாய் பிறந்து விட்டாலே அவள் வாழ்வில் ஒருகட்டத்தில் அவளோடு இணைந்து பின் குறிப்பிட்ட காலம் வரை அவள் சந்திக்கும் ஒரு மாதாந்திர நிகழ்வு என்றால் அது மாதவிடாய் தான். எல்லா பெண்கள் வாழ்விலும் இதற்கான காலகட்டங்கள் உண்டு என்றாலும் இன்று பெரும்பான்மையானோர் இதனால் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.

சரி, முதலில் மாதவிடாய் என்றால் என்னவென்று பார்ப்போம்

ஒரு பெண் பூப்பெய்திய நாளிலிருந்து அவளின் மாதாந்திர சுழற்சியில் மூன்றிலிருந்து ஏழு நாட்கள் வரை உதிரப்போக்கு இருந்தால் அது முறையான அல்லது ஒழுங்கான மாதவிடாய் எனப்படுகிறது. ஒரு பெண் கருத்தரிக்க அவசியமாக அவள் இனபெருக்க சுழற்சியின் ஒரு அங்கமாகவே இந்த மாதவிடாய் நிகழ்கிறது.

பொதுவாக மாதவிடாய் காலமாக 24-29 நாட்களை சொன்னாலும் 23-35 நாட்களுக்குள் வரும் மாதவிடாயை சாதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.

உதிரப்போக்கை பொருத்தவரை அது பெண்களுக்கு பெண்கள் மாறுபடுகிறது. இதில் வலிகளும் உதிரப்போக்கும் தாங்கிக்கொள்ளத்தக்க வகையில் இருந்தால் அதில் பிரச்சனை இல்லை.

ஆனால் இன்றோ பெரும்பாலான பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னையை சந்திக்கின்றனர். அவர்களுக்கு ஒரு மாதத்திற்குள்ளாகவே இரண்டிலிருந்து மூன்று முறை மாதவிடாய் வருகிறது. அல்லது வருடத்திற்கு நான்கு அல்லது ஐந்து மாதவிடாய் சுழற்சியை மட்டுமே சந்திக்கின்றனர்.

இதற்கான காரணங்கள் என்னவாய் இருக்கின்றன? 
  1. அதிகபடியான உடல் பருமன் / உடல் இளைப்பு 
  2. நீண்ட நேர உடற்பயிற்சி 
  3. சத்துணவு குறைவு (அல்லது) மாவு சத்து அதிகமுள்ள உணவு உட்கொள்ளுதல் 
  4. மது பழக்கம் 
  5. புகைப் பழக்கம் 
  6. போதை மருந்து பழக்கம் 
  7. அதிகப்படியான மன அழுத்தம் 
  8. சீதோசன நிலை மாற்றங்கள் 
  9. ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோஜெஸ்ட்டிரான் ஹார்மோன்களின் அளவு மாறுபடுதல் 
  10. ஒன்றுக்கும் மேற்பட்ட சூலக கட்டிகள் (பாலி சிஸ்ரானிக் ஓவரி) 
  11. கர்ப்பப்பை கோளாறுகள் (கர்ப்பப்பை கட்டிகள் (fibroids/cysts/polyps), கருப்பை வீக்கம் (endometriosis) 
  12. பிற நோய்களுக்கான மருந்துண்ணல் 
  13. புற்றுநோயாளிகளுக்கான கீமோதெரபி 
  14. குழந்தை பெற்ற சில மாதங்கள், கருகலைப்பு, தவறான இடத்தில் கருத்தங்கல் 
  15. குழந்தைகளுக்கு பாலூட்டல் 
இவற்றில் ஏதாவது ஒரு காரணத்தால் இந்த ஒழுங்கற்ற மாதவிடாய் வருகிறது. இவற்றில் கர்ப்பம் சார்ந்த காரணங்களால் மாதவிடாய் தள்ளிப்போனாலோ இல்லை ஒழுங்கற்று இருந்தாலோ சில மாதங்களில் சரி ஆகி விடும், அதே போலத்தான் பிற நோய்களுக்காக மருந்து உட்கொள்வதால் வரும் ஒழுங்கீன்மை சில மாதங்களில் சரியாகி விடும்.

மன அழுத்தம் ஒரு பெண்ணின் உடலின் ஹார்மோன் சுரத்தலை ஓன்று அதிகரிக்கிறது இல்லை மட்டுப்படுத்துகிறது. மேலும் கார்டிசால் என்னும் ஹார்மோன் அதிகம் சுரக்கிறது. இந்த கார்டிசால் செக்ஸ் ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜனையும் ப்ரோஜெஸ்ட்டிரானையும் சரி விகிதத்தில் சுரக்க விடாமல் தடுக்கிறது. எனவே தான் ஒழுங்கற்ற மாதவிடாய் வருகிறது.

அடுத்து பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது பாலி சிஸ்ரானிக் ஓவரி (Polycystic ovary syndrome ) எனப்படும் சூலக கட்டிகள். இவை ஒரு பெண்ணின் கருமுட்டை உருவாவதில் பிரச்னையை உண்டு பண்ணுகின்றன. இதனால் அவளின் சராசரி மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படுகிறது. இதனால் அப்பெண் பொடுகு, அதிகபட்ச உடல் பருமன், முகம் மற்றும் உடலில் அதிக முடி வளர்த்தல், மற்றும் மலட்டுதன்மையால் பாதிக்கப்படுகிறாள். மேலும் இந்நிலை நீடிக்கும் போது கர்ப்பப்பை வீக்கம், கர்பப்பை புற்றுநோய், இதய நோய் போன்றவையும் ஏற்பட வாய்ப்புள்ளது.

சில பெண்களுக்கு இந்த பாலி சிஸ்ரானிக் ஓவரி எனப்படும் சூலக கட்டிகள் தோன்றாமலே கர்ப்பபை வீக்கம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனை நாம் இடமகல் கருப்பை அல்லது எண்டோமெட்ரோசிஸ் (endometriosis) என்கிறோம்.

பொதுவாக எண்டோமெட்ரோசிஸ் இருந்தால் அறிகுறிகள் எதைவும் தோன்றுவதில்லை. மாதவிடாய் நேரங்களில் வலிகளும் வருவதில்லை. அதிகபடியான உதிரப்போக்கே இதன் அறிகுறியாக உள்ளது. அதையும் தாண்டி சிலருக்கு இது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.

இந்த எண்டோமெட்ரோசிஸ் என்றால் என்ன?

எண்டோமெட்ரியம் (endometrium) எனபது கர்ப்பப்பையின் உள்ளே வளரும் ஜவ்வு போன்ற தசை செல்களாகும். இது மாதாந்திர சுழற்சியின் போது கருவுறும்
வாய்ப்புற்றால் கருவை தாங்கி பிடிக்கும் சக்திக்காக கர்ப்பப்பையின் உட்புறம் உருவாகுகின்றன. அவ்வாறு உருவாகும் போது கர்ப்பப்பையின் சுவர் திண்ணமாகிறது. கரு உருவாகாது போகும் பட்சத்தில் இவை சிதைந்து உதிரப்போக்கோடு வெளியேறுகின்றன. இந்த எண்டோமெட்ரியம் சில நேரங்களில் எதிர்பாராவிதமாக கருப்பையின் வெளிசுவரிலும் வளரத் துவங்குகின்றன. இத்தகைய நிலையை தான் நாம் எண்டோமெட்ரோசிஸ் என்கிறோம்.

இந்த எண்டோமெட்ரோசிஸ் ஏற்பட என்ன காரணமாக இருக்கும்? 

எண்டோமெட்ரியம் கருப்பையின் வெளிச்சுவர்களிலும் இடுப்பு மற்றும் அடிவயிற்றிலும் சில சமயங்களில் மூளையை சுற்றியும் வளர்வதற்கு இது தான் காரணம் என்று இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனாலும் சில காரணங்களை கூறலாம்
  1. மாதவிடாய் நேரங்களில் வெளிப்படும் உதிரம், கருக்குழாய் வழியாக பின்னோக்கி பாய்வதால் எண்டோமெட்ரியம் செல்கள் கர்ப்பப்பை விட்டு வெளித்தள்ளப்படுகின்றன. அப்படி வெளியேற்றப்பட்ட செல்கள் கர்ப்பப்பையின் வெளியே வளர்கின்றன. 
  2. இடுப்பை சுற்றியுள்ள மரபியல் செல்கள் (primitive cells) ஒரு கட்டத்தில் எண்டோமெட்ரியம் செல்களாக வளர்ச்சியடைகின்றன 
  3. அறுவை சிகிச்சை செய்யும் போது எண்டோமெட்ரியம் செல்கள் வெளியாகி அறுவை சிகிச்சை நடந்த இடத்தை சுற்றி வளரலாம் 
  4. எலும்பு மஜ்ஜையிலிருந்தும் வெளியேறி இவை தனியாக வளரலாம் 
இறுதியாக இந்த எண்டோமெட்ரியம் செல்கள் பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தியினையே மாற்றி அமைக்கவும் செய்யலாம். இதனால் தவறுதலாய் இடமாறி வெளித்தங்கும் எண்டோமெட்ரியம் செல்கள் அழிக்கப்படாமல் உறைந்து போகவும் வாய்ப்புள்ளது.

கருப்பை வீக்கம் இருக்கும் பெண்களுக்கு வரும் பிரச்சனைகள்: 
  1. அதிகப்படியான வயிற்றுப்போக்கு 
  2. முதுகு வலி 
  3. சிறுநீரில் ரெத்தம் 
  4. கருமுட்டை வெளிப்படும் போதும் மாதவிடாய் நாட்களிலும் தாங்க முடியாத வயிற்று வலி (இதில் பலருக்கு மாதாந்திர வலியின் வீரியம் மாதத்திற்கு மாதம் வேறுபடவும் செய்யும்) 
  5. ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி 
  6. அதிக உதிரப்போக்கு 
  7. அவ்வபோது அடி வயிற்றில் வலி (கை பட்டாலே சிலருக்கு அதிக வலி இருக்கும்) 
  8. குழந்தையின்மை 
  9. அபூர்வமாக நெஞ்சு வலி, இருமும் போது ரத்தம், தலைவலி, உடல் சோர்வு போன்றவையும் ஏற்படும் 
சில பெண்களுக்கு மாதவிடாய் நேரம் நடக்கவே இயலாமல் கால்கள் இழுத்து வைத்துக் கொள்ளுவதும், இன்ன இடத்தில் தான் வலிக்கிறது என்றே சொல்ல முடியாத படி உடல் முழுவதுமாக அதிகபட்ச வலியும் வந்து துடித்துடித்து போவார்கள். இன்னும் சிலருக்கோ மேற்புற கருப்பை புற்றுநோய் அல்லது கருக்குழாய் புற்றுநோய் வரவும் வாய்ப்புள்ளது.

இந்த எண்டோமெட்ரோசிஸ்சை கண்டறியும் வழி என்ன?

பெரும்பாலான நேரங்களின் அதிகப்படியான உதிரப்போக்கும், தாங்க முடியாத வயிற்று வலியும் இருந்தால் மருத்துவருக்கு எண்டோமெட்ரோசிஸ் கருப்பை இருக்குமோ என்ற சந்தேகத்தை கொடுக்கிறது. அல்ட்ராசவுண்ட் இமேஜிங் ஆய்வுகள் மூலம் இதனை கண்டறிந்தாலும் இடுப்பு மற்றும் வயிற்று பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திசு ஆய்வு செய்து எண்டோமெட்ரியம் செல்கள் இருக்கிறதா என்று பார்கின்றனர். ஆனாலும் லாப்ரோஸ்கோப்பி மூலம் நேரடி ஆய்வு செய்தே இதனை உறுதி செய்ய முடியும்.

எண்டோமெட்ரோசிஸ் கருப்பைக்கான சிகிச்சை முறைகள் 

பொதுவாக எண்டோமெட்ரோசிஸ் முற்றிலும் குணப்படுத்த முடியாதென்றாலும் மருந்துக்கள் மூலமாக சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். இந்த சிகிச்சை நோயாளியின் தேவை பொருத்து மாறுபடுகிறது. அதாவது வலி மட்டும் குறைய வேறு விதமாகவும் கருவுற்றல் நிகழ வேறு முறையிலும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பலதரப்பட்ட சிகிச்சை முறைகள் இருந்தாலும் முக்கியமானவற்றை மட்டும் இங்கு காண்போம்

1. வீக்கத்துக்கு எதிரான ஸ்டீராய்டு அல்லாத மருந்துகள் (Nonsteroidal anti-inflammatory drugs) 

பொதுவாக இவை எண்டோமெட்ரியம் செல்கள் மேலான எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. மாறாக ப்ராஸ்டாகிளான்ட்டின் (prostaglandin) உற்பத்தியை மட்டுபடுத்தி வலியின் வீரியத்தை குறைக்கின்றன. வலிகளை தூண்டி விடுவதில் இந்த ப்ராஸ்டாகிளான்ட்டினுக்கு பெரும்பங்கு உண்டு. பொதுவாக நாப்ரோசென் அல்லது இபுப்ரோபன் (naproxen or ibuprofen) வலிநிவாரணியாக அளிக்கப்படுகிறது.

2. கோனாடோட்ரோபின் வெளியீட்டு நொதி ஒப்புமைகள் (Gonadotropin-releasing hormone analogs (GnRH analogs))
இவை நிவாரணியாக மட்டும் செயல் படாமல் எண்டோமெட்ரியம் செல்களை கட்டுபடுத்தவும் செய்கின்றன. இவை ஈஸ்ட்ரோஜன் சுரப்பை நிறுத்தி மாதவிடாயை தடுக்கிறது. இதனை உட்கொள்வதால் சிலருக்கு பக்க விளைவுகளாக ஒழுங்கற்ற ரெத்தப்போக்கு, மனநிலை மாற்றங்கள், சோர்வு போன்றவை ஏற்படலாம். ஆனாலும் சிறிதளவு ஈஸ்ட்ரோஜன், ப்ரோஜெஸ்டிரோன் கலவைகளை மாத்திரையாக உட்கொண்டால் இந்த பக்க விளைவுகள் சரி செய்யப்படும்.

3. வாய்வழி கருத்தடை மாத்திரைகள் (ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன்)

இவை மாதவிடாய் சுழற்சியை கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்ட கருத்தடை மாத்திரைகளாகும். இவற்றை குறிப்பிட்ட கால அளவு (21 நாட்கள்) எடுத்து சிறிது இடைவெளி விட்டால், நான்காம் நாளிலிருந்து மாதவிடாய் வரும். பின் மாதவிடாய் வந்த ஐந்தாம் நாளிலிருந்து மீண்டும் தொடர்ச்சியாக 21 நாட்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். எண்டோமெட்ரோசிஸ்க்கான மிக சிறந்த சிகிச்சையாக இது இருக்கிறது. ஆனால் இது கருத்தரித்தலை தடுக்கும். சிலருக்கு இதனால் உடல் பருமன், உடல் சோர்வு, தலைசுற்றல், வாந்தி போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

4. அறுவை சிகிச்சை

எண்டோமெட்ரோசிஸ்க்கான மருந்து சிகிச்சைகள் பலனளிக்காமல் போனாலோ அல்லது அதன் பாதிப்பின் தாக்கம் அதிகமாக இருந்தாலோ கர்ப்பப்பையில் அறுவை சிட்சை செய்யலாம். இது இரண்டு விதமானது. ஒன்று, கருப்பையையும் அது சார்ந்த சூல் பைகளையும் எந்தவிதத்திலும் பாதித்து விடாமல் எண்டோமெட்ரியம் செல்களை நீக்குவது. இரண்டாவது, சூல் பைகளோடவோ அல்லாமலோ கருப்பையை முற்றிலுமாக அகற்றுவது. குழந்தை பேறு வேண்டும் பெண்களுக்கு முதலில் குறிப்பிட்ட அறுவை சிகிச்சை சாலச் சிறந்தது.


எது எப்படியாக இருந்தாலும் எண்டோமெட்ரியம் செல்கள் ஒரு பெண்ணின் தாய்மை பேறு நிறைவேற மிகப்பெரிய உதவியாக இருகின்றன. அவை இருக்கும் இடத்துக்குள் இருந்து விட்டால் எப்பொழுதும் கவலையில்லை. அப்படியே எண்டோமெட்ரோசிஸ் கருப்பை வந்துவிட்டாலும் சிகிச்சை முறைகளும் நிறையவே வந்துவிட்டன. இளம் வயதிலேயே இதனால் அவதியுறும் பெண்கள் முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் தாய்மை அடைவதிலும் வெற்றிபெற முடியும்.

Saturday 24 August 2013

தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியா


பாக்டீரியாக்களால் தங்கம் உருவாக்க முடியுமா???? இது நமக்கு வேண்டுமென்றால் புதுமையான கேள்வியாக இருக்கலாம், ஆனால் மேக்குயரி பல்கலைகழகத்தின் (Macquarie University) விஞ்ஞானிகள் வெனின்சுலாவில் காணப்படும் தங்க படிமானங்கள் பெரும்பாலும் பாக்டீரியாக்களால் உருவாக்கப்பட்டவை என்கின்றனர்... அதுமட்டுமில்லை இதற்கான ஆதாரத்தை ஜான்.ஆர்.வாட்டர்சன் தலைமையிலான அமெரிக்க நில ஆய்வு குழு (US Geological Survey) அலாஸ்கா மாநிலத்தில் உறுதிப் படுத்தியுள்ளது. ஜான்.ஆர்.வாட்டர்சன் அலாஸ்க்காவில் கிடைத்த தங்க துகள்களை நுண்ணோக்கியில் (scanning electron microscope) பார்க்கும் போது அது தட்டையான உருளை வடிவத்தை கொண்டிருந்தது. இத்தகைய வடிவம் பிடோமைக்ரோப்பியம் பாக்டீரியாவை (Pedomicrobium bacteria ) ஒத்திருந்தது.


அறிவியல் கூற்றின் படி தங்கம் பாக்டீரியாவின் செல் சுவரில் உள்ள நுண்துளைகளை அடைத்து அதன் உணவு சுழற்சியையும் கழிவு வெளியேறுதலையும் தடுத்து அதனை மரணமடைய செய்கிறது. பெரும்பாலான பாக்டீரியாக்கள் இரண்டாக பிரிந்தே தன் இனத்தை விருத்தி செய்கின்றன.

ஆனால் பிடோமைக்ரோப்பியம் அரும்புதல் (budding ) முறையில் இனவிருத்தி செய்கிறது. அது தன் செல்லில் இருந்து ஒரு நெடிய காம்பை உருவாக்கி, தாய் பாக்டீரியாவிலிருந்து தொலைவில் தனது புதிய பாக்டீரியாவை உருவாக்குகிறது. இந்த புதிய உயிர், இறந்து போன தாய் பாக்டீரியாவிற்கு வெளியே புதிதாக உதிக்கிறது. இத்தகைய வளர்ச்சி மிக மெதுவாகவே நடை பெறுகிறது. நமது தலைமுடியின் திண்ணம் அளவு ( சராசரி 0.1 mm) தங்கம் வளர வேண்டுமென்றால் ஒரு வருடம் ஆகிறது. (இத்தகைய வளர்ச்சியை ஜெனிடிக் இஞ்சிநியரிங் மூலம் துரித படுத்த இயலும்).

கனடாவை சார்ந்த அறிவியலாளர்கள் சிலர் உலோக தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியாவை கண்டுப்பிடித்துள்ளனர். அவர்களின் கூற்றுப்படி அவை தங்க அணுக்களை துகள்களாய் உறைய வைத்து தங்க பாளமாக மாற்றுகின்றன. டெல்ப்டியாஅசிடோவோரன்ஸ் (Delftia acidovorans) விஷத்தன்மை வாய்ந்த கரையும் தங்கத்திடம் (soluble gold) இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள தன்னை சுற்றி உலோக தங்கத்தை உருவாக்கி கொள்கிறதாம். உலோகத் தங்கம் பொதுவாக ஒப்பீட்டளவில் மந்த தன்மை வாய்ந்தது. அவற்றை நாம் ஆபரணமாக அணிந்து கொள்ளலாம். அவற்றை உரசி பருகியும் கொள்ளலாம். அதே நேரம் தங்க அயனிகள் விஷத்தன்மை ஆனவை.  தங்க அயனிகளை உலோகமாக மாற்ற காரணமான டெல்ப்ட்டிபேக்டின் (delftibactin) ஜீன்களை
  கனட அறிவியலாளர்கள் இந்த பாக்டீரியத்தில் இருந்து கண்டறிந்துள்ளனர்.




இதே மாதிரியான பழமையான தங்க பாளங்களை தென் ஆப்பிரிக்காவிலும் (2.8 பில்லியன் வருட பழமை), சீனாவிலும் (220 மில்லியன் பழமை) கண்டெடுக்கப் பட்டுள்ளது. ஆம், இத்தகைய தங்க பாளங்களை உருக்கினால் பாக்டீரியாவில் இருந்து கார்பன், கார்பன்-டை-ஆக்சைட்டாக மாறி, தூய தங்கத்தை நமக்கு விட்டுச் செல்கிறது.

சிலர், பாக்டீரியா தங்கத்தை உருவாக்குவதில்லை, மாறாக நிலத்தடி நீரில் உள்ள தங்கத்தை ஈர்த்துக் கொள்கிறது என்கின்றனர். இத்தகைய கண்டுபிடிப்புகள் தங்கச் சுரங்கங்களின் கழிவிலிருந்து மேலும் தங்கத்தை பிரித்தெடுக்க உதவும்.

நமக்கெல்லாம் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் எப்படி இந்த பாக்டீரியாக்களால் தங்கத்தை 24 காரட் அளவு தூய்மை படுத்த முடிகிறது?  இத்தகைய பாக்டீரியாக்களை அறிவியல் கூடங்களில் வளர்க்க ஆரம்பித்து விட்டால், ஒரே இரவில் பெரும்பணக்காரர் ஆகி விடலாம். இப்பொழுது நமக்கு கிரேக்க பேராசைக்காரன் மைதாஸ் தான் நினைவுக்கு வருகிறான். ஒருவேளை அவன் இந்த பிடோமைக்ரோபியமால் பீடிக்கப் பட்டிருப்பானோ? எது எப்படியோ, தங்கம் என்றாலே கலகம் தானோ? அதுவும் அளவுக்கு மீறினால்???

Sunday 4 August 2013

அக்றிணையில் ஒரு நேசம்...!


அக்றிணையில் ஒரு நேசமென
தலைப்பிட்டு காத்திருந்தேன்
கவியொன்று படைக்க...!

கண்முன் வந்து சென்றது
நேற்று தெருவோரம்
பார்த்த பூனைக்குட்டி...!
மியாவ்வென மிழற்றியபடியும்
அகதியாய் இருப்பிடம் தேடியபடியும்...!

ஆசையாய் அணைத்துக் கொண்டே
அதற்கோர் ஆதரவை
வேண்டிய ஆசை மகள்
மனம் கலங்கலாகாதென
தலையசைத்திருந்தேன் நானும்...!

கண்டெடுத்த பூனைக்குட்டி
காணாமல் போனதென
காலை முதல் அரற்ற துவங்கியிருந்தாள்
என் உதிரத்தில் உதித்தவள்...!

கண்கள் குளமாகி அழுதுதழுது
தேம்பிய அவள் முகம் பார்த்து
எனக்குள் எதுவோ பிசைய துவங்கியது...!

அட! திடீரென அவள் கையில்
தொலைந்து போன பூனைக் குட்டி...!

“ஏண்டா விட்டுட்டு போன?”
வண்டியில அடிபட்டா நசுங்கி
போய் செத்திருப்ப...
நாயும் கடிச்சிருந்தா
நார் நாரா கிளிஞ்சிருப்ப...

வாய் புலம்பல் தொடர்ந்த படி
ஒரு கையால் பிடித்துக் கொண்டு
மறுகையால் அது மிரள
தலை மேலே ஒரு குட்டு...!
மறுநிமிடம் வலிக்குமென பதறி
அடித்த இடம் தடவியபடி
தொடர்ந்து கொண்டிருந்தது அவள் புலம்பல்...!

ஏன் அழுகிறாள்? எதற்கு அடிக்கிறாள்?
புரியாமலே அவள் மடி சுருண்டது
பூனைக் குட்டி, அடைக்கலம் தேடி...!
கண்டுகொண்டேன் நானும்
அக்ரிணையில் ஒரு நேசத்தை...!