Pages

Sunday 21 July 2013

ஊவா நாளாய் மனம்...!



மூலக்கூற்று முகில்களால் பிரசவிக்கப்பட்ட
விண்மீன் கூட்டங்கள்...

பரந்து விரிந்த பால்வெளியில்
மின்மப்பந்துகளாய் கண்சிமிட்டுகின்றன...

ஒளிகள் அடக்கி... ராட்சச கரம் விரிக்கும்
கருந்துளை நோக்கி பயணப்படுகிறது...
உள்ளிருப்பு விசைக்குள் உணர்வுகள் அடக்கி
வெடித்துச் சிதற காத்திருக்கும்
அழுத்தமான மனம் ஒன்று...

ஈரம் தேடி அலையும் நெஞ்சுக்குள்
வெற்றிடங்கள் ஈர்த்துக்கொள்ள...
கருமை சூழ்ந்து, விரக்தி ஒன்று
மொத்தமாய் குத்தகை கொள்ளத் துடிக்கிறது...

எரிகல் ஒன்று வலுவிழந்து வீழ்கிறது,
புவியிருப்பு விசைநோக்கி...
காற்றில் கரையும் அதன் கார்பன் துகள்கள்
கண்காணாமல் மறைந்து போகின்றன...

திசைகள் மறைக்கும் அமானுஷ்ய இருட்டுக்குள்
பளிச்சென வெளிச்சம் உதிர்க்கிறது,
நேர்வடக்கில் உறைந்திருக்கும்
ஒற்றை துருவ நட்சத்திரம்...

சிறுக சிறுக தேய்ந்து ஊவா நாள் காண்தல்
நிலவுக்கு மட்டுமே சொந்தமுமில்லை...
பின் பிறைவிட்டு பவுர்ணமி காண்தல்
சொற்பக்கால மனித வாழ்விலும் புதியதல்ல...

கொதிக்கும் ஆழ்மனம் அடங்கத் துவங்க
அடுத்த நிலைக்கு பயணிக்கிறது உள்ளுணர்வு...
பீடிக்க துவங்கிய கிரகணம் ஒன்றோ
விடியலை கொஞ்சம் கொஞ்சமாய்
விடுவித்துக் கொண்டிருக்கிறது...

No comments:

Post a Comment