Pages

Monday 12 November 2012

புற்று நோய்...!



புற்றுநோய்  என்பது கட்டுப்பாடற்று உடலின் செல்கள் பிரிந்து பெருகுவதால் ஏற்படும் நோய் ஆகும். இந்தக் கலங்கள் பிரிந்து பரவி மற்ற தசைகளையும் தாக்குகின்றன.  பிற நோய்களை போலல்லாமல் நமது செல்களே நமக்கு எதிரியாக உருமாறும் ஒரு கொடுமை தான் இந்த புற்றுநோய். புற்று நோய் எந்த வயதினரையும் தாக்கும் எனினும் வயது கூடக்கூட புற்றுநோய் தாக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.

இந்த புற்றுநோய் செல்களை அழிப்பது சற்று சிரமமான காரியம் தான். 

ஏன்?

ஏனெனில் இவை நமது செல்கள். இவற்றை அழிக்க முற்படுவது நம்மை நாமே அழிக்க முற்படுவதற்கு சமம். சிகிட்சையின் போது சேர்ந்தே அழிக்கப்படும் நமது உடலின் நல்ல செல்களையும் கணக்கில் கொண்டே மிகவும் ஜாக்கிரதையாக சிகிட்சை செய்ய வேண்டும்.

புற்றுநோயின் வகைகள்:
உடலின் இந்த பகுதியில் தான் வரும் என்று நிச்சயித்து சொல்ல முடியாதது இந்த புற்றுநோய். இவற்றில் பல வகைகள்.
1. மூளை புற்றுநோய்
2. மார்பக புற்றுநோய்
3. சரும புற்றுநோய்
4. ரெத்த புற்றுநோய்
5. குடல் புற்றுநோய்
6. சிறுநீரக புற்றுநோய்
7. வாய் புற்றுநோய்
இன்னும் இன்னும், உடலில் இவை தோன்றாத இடங்களே இல்லையென்று சொல்லலாம்.

சிகிட்சை முறைகள்
சரி, இனி இவர்களுக்கு கொடுக்கப்படும் சிகிட்சை முறை பற்றி சிறிது பார்ப்போம்.
மூன்று விதமான சிகிட்சை முறைகளை இதற்காக கையாளுகிறார்கள்.
1. அறுவை சிகிட்சை
2. கதிரியக்க சிகிட்சை
3. மருந்து மாத்திரைகள் மூலம் சிகிட்சை

மூளை புற்றுநோய்:
புற்றுநோய் வகைகளிலே நான் மூளை புற்றுநோய் பற்றி இங்கு கொஞ்சம் விளக்கலாம் என்று நினைக்கிறேன், காரணம், மற்ற புற்றுநோய் வகைகளை விட இது கொஞ்சம் ஆபத்தானது.

மூளை புற்றுநோயின் அறிகுறிகள்:
1. தலை வலி
2. வாந்தி
3. சமன் படுத்தி நடப்பதில் சிரமம்
4. மனநிலை குழப்பங்கள்
5. நியாபக மறதி
6. வார்த்தைகளில் தடுமாற்றம்
7. பார்வை மற்றும் கேட்கும் திறனில் குறைபாடு.


இத்தகைய அறிகுறிகள் இருந்தால் நிச்சயம் நீங்கள் உங்கள் குடும்பநல மருத்துவரை அணுகி உடலை பொது ஆய்வு செய்து கொள்ளுதல் அவசியம்.

சரி, இதற்கான காரண காரியங்கள், இதன் பூர்வீகம் என்று அலசாமல் புற்றுநோய் வந்தால் செய்ய வேண்டியது என்னவென்று பார்ப்போம்.
ஆரம்பநிலை புற்றுநோயைப் பற்றி இங்கு விளக்கவும் தேவையில்லை, நல்லவிதமான ஒரு மருத்துவ சிகிட்சையினால் அவர்களில் பெரும்பான்மையோர் காப்பாற்றப்பட்டு விடுகிறார்கள்.

புற்றுநோயை பற்றிய தகவல்களை எங்கு தேடினாலும் விலாவாரியாக அதனைப் பற்றி விவரித்து விட்டு முற்றிய நிலையில் குணப்படுத்துவது கடினம் என முடித்து விடுகின்றனர். அல்லது, முடிவு பற்றி சொல்லி விட்டு தொடக்க காலங்களை அலச ஆரம்பித்து விடுகின்றனர்.

இவ்வாறாக கைவிடப்பட்ட (மருத்துவர்களால்) புற்று நோயாளிகளுக்கு என்னதான் வழி?

இவர்களை குணப்படுத்த முடியுமா?

இதற்கான பதிலை ஆம் என்றோ இல்லை என்றோ ஒற்றை சொல்லில் முடித்து விட நான் விரும்பவில்லை.

புற்றுநோய் தாக்கப்பட்டவரின் பிரச்சனைகள்:
புற்றுநோய் தாக்கப்பட்ட செல்களை மருந்துக்களால் அழிக்க முற்படும் போது கூடவே பக்கவிளைவுகளும் சேர்ந்தே ஒட்டிக்கொள்கின்றன.

இவர்களுக்கு ஏற்படும் பிரச்சனை தான் என்ன?
இவற்றை நாம் உடல்நிலை சார்ந்த பக்க விளைவுகள், மனநிலை சார்ந்த பக்கவிளைவுகள் என பிரித்துக் கொள்ளலாம்.

உடல்நிலை சார்ந்த பக்கவிளைவுகள்:
1. உடலின் வலி
2. அசாதாரண சூழ்நிலைகளில் புறவெளி ரெத்த போக்கு
3. சோர்வு
4. மயக்கம்
5. எந்த நோய்கிருமி தாக்குதலுக்கும் சுலபமாக இலக்காகுதல்
6. மற்ற நோய்களுக்கான சிகிட்சை முறைகள் பயனளிப்பதில் தாமதம்
7. இன்னும் பிற

மனநிலை சார்ந்த பக்கவிளைவுகள்:
1. அலட்சியம்
2. ஒரு வித படபடப்பு
3. சொன்னதையே திரும்ப கூறுதல்
4. அழுகை
5. கோபம்
6. அடம்
7. சுயபட்சாதாபம்
8. இன்னும் பல

சில மருத்துவ சிகிட்சை முறை இல்லாமல் நம்மால் எதுவும் செய்ய முடியாது என்பது உண்மை தான், ஆனால் அந்த மருந்துக்களின் வீரியம் நம்மை சோர்வடைய வைக்கும் போதெல்லாம் நம்மின் உற்சாகம் அதனை வென்றெடுக்கட்டும்.

இத்தகைய நிலையில் இருப்பவர்களுக்கு முதலில் நான் சில விஷயங்கள் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
1. முதலில் நீங்கள் உங்களை நேசியுங்கள்.
2. நான் ஒரு நோயாளி என்ற எண்ணத்தை மனதில் இருந்து நீக்குங்கள்.
3. நோய் என்பது உடலில் தான், மனதில் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
4. மனதினை ஒருநிலை படுத்துங்கள்.
5. உங்களுக்கு தேவை எதுவென நீங்களே முடிவு செய்யுங்கள்.
6. மனதிற்கு பிடித்தமான விசயங்களில் கவனத்தை செலுத்துங்கள்.

மனநிலை சார்ந்த பக்கவிளைவுகளால் அவதி படுபவர்களுக்கு:
1. மனமே மருந்து என்பதை மறந்து விட வேண்டாம்.
2. மறதி உங்களை அடிக்கடி தொல்லை படுத்தினால் அதனை மறக்க முயற்சி பண்ணுங்கள். எந்த காரணம் கொண்டும் அதை நினைத்து வருத்தப்பட வேண்டாம்.
3. அமிலத் தன்மை நிறைந்த உணவை தவிர்த்திடுங்கள்.
4. புற்றுநோய் என்பது மனம், உடல், ஆன்மா சாந்த ஒரு நோய். எனவே மனதை எப்பொழுதும் உற்சாகமாக வைத்திடுங்கள். அது புற்றுநோய்க்கு எதிரான உங்கள் உடலின் யுத்தத்தை விழிப்போடு வைத்திருக்கும்.
5. கோபம், மன்னிக்கும் குணம் இல்லா வன்மம், சுயபச்சாதாபம் போன்றவை உங்கள் உடலை பிராண வாயுவற்ற அமில தன்மைக்கு இழுத்துச் செல்லும். எனவே மனதை அன்பால் நிறைத்திடுங்கள்.
6. ஆழ்ந்த அமைதியும் மகிழ்ச்சியும் கலந்த வாழ்வை அனுபவியுங்கள்.
7. புற்றுநோய் செல்களால் பிராணவாயு இருக்குமிடத்தில் வாழ முடியாது, எனவே அடிக்கடி மூச்சை நன்கு இழுத்து விட்டுக்கொள்ளுங்கள்.
8. வாழ்க்கையின் ஏதேனும் ஒரு லெட்சியத்தை மனதில் நிறுத்தி அதனை அடைய தீவிரமாக போராடுங்கள். உங்கள் லட்சியம் நோக்கி நீங்கள் பயணிக்கும் வேகத்தில் புற்றுநோய் புறம் தள்ளப்பட்டு வேடிக்கை மட்டுமே பாக்க வேண்டும்.

புற்றுநோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர், சுற்றம் மற்றும் நண்பர்கள் கவனத்திற்கு:
1. அவர்களை ஒரு நோயாளியாய் பார்ப்பதை தவிருங்கள்
2. சோகம் அவர்களை மட்டுமல்ல, உங்களையும் தாக்காது இருக்கட்டும்
3. அவர்களை சூழ்ந்த சுற்றுபுறத்தை உற்சாகமாக வைத்திருங்கள்
4. அவர்களின் திறமைகளை ஊக்கப்படுத்துங்கள்
5. அச்சம் உண்டு பண்ணும் தன்னம்பிக்கை இழக்கச் செய்யும் கதைகளை பேசுவதை தவிர்த்திடுங்கள்
6. குடும்ப பொறுப்புகளை பகிர்ந்தளியுங்கள்
7. அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆலோசனைகள் கேளுங்கள்

எல்லாவற்றிலும் மேலாக:
மரணம் எந்த நேரத்திலும் வரலாம் என்ற நிலையில் அதனை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்க தயாராகவே இருக்க வேண்டும். மரணம் நிச்சயம் என்று மனம் உணரத்துவங்கி விட்டால் மனதை ஒருநிலை படுத்துங்கள்.
1. இத்தனை நாள் வாழ வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி கூறுங்கள்
2. வலிகள் இல்லாத மரணத்தை எதிர்நோக்க தயாராகுங்கள்
3. ஒரு வேளை அந்த தருணம் வலிகள் நிறைந்ததாய் இருந்தால் வலிகள் தாங்கும் பக்குவம் பெறுங்கள்
4. பிரியமானவர்களின் (தாய், தந்தை, கணவன், மனைவி, மகன், மகள் இப்படி யார் வேண்டுமென்றாலும்) அருகாமை உங்களுக்கு தைரியத்தை கொடுக்கும், அவர்களோடு உங்கள் நிமிடங்களை செலவிடுங்கள்.
5. புன்னகையோடு மரணத்தை எதிர்நோக்கும் வலிமையை மனதிற்குள் உருவாக்குங்கள்... மற்றபடி நீங்களும் வாழ்க்கையை வாழப்பிறந்தவர் என்பதை ஒருபோதும் மறந்துவிட வேண்டாம்...!

Saturday 10 November 2012

கிறுக்கிய தத்துவங்கள்.... (பகுதி 2)

51. வீண் பிடிவாதங்களும் வறட்டு கவுரவங்களும் வாழ்வின் நிம்மதியை குலைத்து விடும்....

52. நம்பிக்கை என்னும் படகில் தான் வாழ்க்கை பயணம் ஆரம்பிக்கிறது. பயணம் வெற்றி பெறுவதற்கும் தோல்வி அடைவதற்கும் அதுவே காரணமாகிறது....

53. வெற்றி என்பது லட்சியத்தை படிப்படியாக புரிந்து கொள்வது....

54. நம் அன்பானவர்களின் மேல் அன்பு இருந்தால் மட்டும் போதாது, அதை வெளிக்காட்டவும் தெரிந்திருக்க வேண்டும்...

55. உரிமைகளும் அதிகாரங்களும் எடுத்துக் கொள்ளப்படும் போதுதான் காதலின் வலிமை புரியப்படுகிறது ....

56. அன்பும் கருணையும் நட்பை பெருக செய்யும் காரணிகளாகும்.....

57. ஒருவரின் மேல் நம்பிக்கை வரும் வரை காத்திருக்கலாம், ஆனால் நம்பிக்கை வந்தபின் அதை எக்காரணம் கொண்டும் இழக்க கூடாது....

58. நேர்மையும் அன்புமே தலைமை பண்பை கட்டிக்காக்கும் காவலர்கள்....

59. கற்று கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், சாதிக்க வேண்டும் என்ற துடிப்பும் அடைய வேண்டும் என்ற முயற்சியும் தான் ஒருவனை வெற்றி படிகளில் ஏற வைக்கும்...

60. தவறாக புரிந்து கொள்ளல் நம்மையறியாமல் தவறான முடிவுகளை எடுக்க வைக்கும்...

61. பொறுமையும் சகிப்பு தன்மையும் ஒருவன் மனதில் அமைதியை கொண்டு வருகிறது...

62. சுயசிந்தனை, திட்டமிடல், நேரம் தவறாமை - ஒருவரின் முன்னேற்றதிற்கு முக்கிய காரணிகள்....

63. விடாமுயர்சியும் தன்னம்பிக்கையும் வாழ்வின் வெற்றியின் இரகசியங்கள்...

64. ஒரு நோயாளியின் உற்ற நண்பன் மன தைரியம், உயிருக்கு உலை வைக்கும் எதிரி பயம்...

65. வாழ்வில் எதிர்மறையான விசயங்களையும் நேசிக்க கற்றுக்கொண்டு விட்டால் விரக்தி என்ற வார்த்தை பயனில்லாமல் போய் விடும்...

66. ஒருவரை நம்பும் முன் எவ்வளவு வேண்டுமென்றாலும் சந்தேகப்படலாம், நம்பிய பின் எக்காலத்திலும் சந்தேகம் வேண்டாம், அது அந்த நம்பிக்கைக்கு இழுக்கு...

67. சுகமும் துக்கமும் நிறைந்த வாழ்க்கையில் சுகத்தை மட்டுமே எதிர்பார்த்திருந்தால் துக்கம் மட்டுமே மிஞ்சும்....

68. வாழ்வில் வரும் சோதனைகளை புன்னகையோடு எதிர்கொள்வதே அவற்றை வெற்றிகொள்ள நாம் எடுத்து வைக்கும் முதல் படி...

69. ஒரு ஆணின் கல்வி செல்வத்தை பெருக்கும், ஒரு பெண்ணின் கல்வி கல்வியை பெருக்கும்....

70. மகிழ்வாய் சிரித்திருக்கும் மனிதரிடம் அவர் எதிரியேயானாலும் அவரெதிரில் குறை கூறல் கூறுபவருக்கு இழுக்கு....

71. நமது குறிக்கோளை நோக்கி நேர்கொண்ட பார்வையோடு அதற்கான செயலிலும் இறங்கி விட்டால் வெற்றி நம்மை அரவணைத்துக் கொள்ளும்....

72. உடலில் ஏற்படும் காயத்தை விட மனதில் ஏற்படும் காயம் நீண்ட நாள் ஆறா ரணமாய் வலிக்கும்... அந்த ரணம் வேண்டாம் என்றில்லாமல் ரணத்தை தாங்கி கொள்ளும் துணிச்சலை கொடு என்ற பிரார்த்தனை ரணத்தின் தன்மையை குறைக்கும்....

73. தவறுகள் செய்பவன் மனிதன், அவனை மன்னிப்பது மனிதம்.....

74. முக்கியத்துவம் என்பது அறிவு சார்ந்து, அன்பு சார்ந்து, உறவு சார்ந்து, நட்பு சார்ந்து இருக்க வேண்டுமே தவிர தனம் சார்ந்து இருக்க கூடாது....

75. அன்பு என்பது ஒரு வழி பாதையாக மட்டுமேயில்லாமல் இருவழி பாதையாக இருக்க வேண்டும்... கொடுக்கலும் வாங்கலும் சரி சமமாக இருந்தால் என்றும் அன்புக்கு குறைவில்லை...

76. வாழ்வின் வளர்ச்சி நம் உள்ளத்தின் மகிழ்ச்சியை பொறுத்தே அமைகிறது. புத்துணர்ச்சியோடு கூடிய காலை நாள் முழுவதும் மலர்ச்சியாய் இருக்க உதவுகிறது.

77. அலைபாயும் மனதும், சட்டென முடிவெடுக்கும் அவசரமும் எப்பொழுதும் நல்ல முடிவை தருவதில்லை.

78. மாறும் சூழ்நிலைகளுக்கேற்ப வளையும் நாணலாய் இசைந்து கொடுப்பது வாழ்வின் கட்டாயமாக்கப்படுகிறது. புரிந்து கொண்டு தனித்தன்மை மாறாமல் வாழ்வை ரசிக்க பழக வேண்டும்.

79. தீர்க்கவே முடியாத பிரச்சனை என்று தெரிந்து விட்டால் அதனை புறம தள்ளி வைத்துவிட்டு வாழ்வை தொடர்வதே சாலச்சிறந்தது.

80. ஏமாற்றம் என்பது வாழ்வில் ஒரு மாற்றத்தை உருவாக்குவதற்கே... பக்குவமாக அதிலிருந்து மீண்டு விட்டால் வாழ்வை கற்று விடலாம்.

81. அழகியல் என்பது அன்பால் உணரப்படுவது. அது ஆத்மாவின் தூய்மையை வெளிப்படுத்தும்.

82. மனதின் எண்ணங்களே வார்த்தைகளாக வெளிப்பட்டு விட்டால் குற்ற உணர்வு குறைவதுடன் நல்ல எண்ணங்களை மனம் எண்ணத் துவங்கும்.

83. மனம் என்பது நம்மை ஆளும் கருவி. சரியான முறையில் இயக்கப்பட்டால் மட்டுமே சரியான விகிதாசாரத்தில் அது இயங்கும்.

84. அளவுக்கு அதிகமான அன்பு கூட பல நேர துன்பங்களுக்கு காரணக்கர்த்தாவாக இருக்கிறது.

85. வாழ்க்கை என்பது நீர்நிலை போல, சில சமயம் சலனமற்ற நதியாய் அமைதி காட்டும் அது பல நேரங்களில் காட்டாற்று வெள்ளமாய் ஆக்ரோஷம் காட்டும்.

87. அளவான தேவையான தூக்கம் உடலை பேணுவதுப் போல் அளவான தேவையான அன்பு நட்பை பலப்படுத்தும்.

88. பிறர் நிம்மதி கெடுத்து தன் நிம்மதி தேடும் மனிதர்களுக்கு மிருகம் என்ற அடைமொழி கூட ஏற்புடையதல்ல.

89. காயங்களை ஆற்றும் தகுதி மறதிக்கு உண்டென்றாலும் அன்புக்குரியவர்களின் நினைவு என்றும் மறக்கலாகாது.

90. காரணங்களே வேண்டாமல் அன்பை கொடுக்க வல்ல வலிமை நட்புக்கு மட்டுமே உண்டு.

91. அன்பானவர்களின் உணர்வுகள் அன்புக்குரியவரால் உணர்ந்துக் கொள்ளப்பட்டால் அதை விட பெரிய மகிழ்ச்சி வேறு இல்லை.

92. கடந்துப் போன காயங்களை மறக்கச் செய்தலும், பசுமை நினைவுகளை அசைபோட வைத்தலும் காலத்தின் முக்கிய பணிகள்.... புரிந்துக் கொண்டு செயல்பட்டோமானால் என்றும் காலம் நம்மோடு கடந்து வரும்.

93. ஆவேசமும் அவசரமும் என்றும் அறிவுக்கு சத்ரு... இவை இரண்டையும் சற்று நேரத்துக்கு ஒத்தி வைத்தால் தானே வலிமையிழந்து நம்மை வலுப்படுத்தும்.

94. அன்பும் அறிவும் என்றும் அழியா பொக்கிசங்கள்... பாதுகாத்தல் நமது கடமை.

95. அன்பு - அது ஆழ்ந்த புன்னகையை மனதில் படர விடும் அற்புத ஆயுதம் .

96. எவ்வளவு பெரிய கோபத்தையும் அடக்கியாளும் சக்தி, ஒரு சிறிய புன்னகைக்கு உண்டு.

97. நிதானமும் தெளிவான சிந்தனையும் மனதிற்கு ஆத்ம திருப்தியை தரும்.

98. சில நேரங்களில் சுயநலமில்லா முடிவுகள் பயனற்று போய் விடுகின்றன... விவேகமும் சற்றே சுயநலம் சார்ந்த முடிவுகளே என்றும் வாழ்வின் மகிழ்ச்சியை நீடிக்க வைக்கும் காரணிகளாகும்.

99. நீர் இருக்கும் வரைதான் நீரூற்றுக்கு மதிப்பு. அதை போல் அன்பு இருக்கும் வரை தான் மனிதனுக்கு மதிப்பு.... அன்பில்லாத மனிதன் விலங்கினத்தில் கூட சேர்க்க தகுதியில்லாதவன்.

100. வாழ்க்கையின் மிகப்பெரிய அடிப்படை தேவை அன்பு... பிற உயிர்களின் மீது அன்பு செலுத்த தெரியாத மனிதன் வாழ்க்கையின் பெரும்பகுதி நிம்மதியை இழக்கிறான்.


வாழ்வியல் ரகசியங்கள்


சமீபத்தில் எனக்கு நண்பர் ஒரு கதையை ஈ.மெயில் வழி அனுப்பி வைத்திருந்தார். கதையின் கரு என்னை மிகவும் பாதித்து விட்டதாலும் கதையின் நீளம் அதிகம் என்பதாலும் அதை சுருக்கி தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டுமென்று கருதி கொண்டேன். இதோ அந்த கதை உங்கள் பார்வைக்கு............

வாழ்வியல் ரகசியங்கள்:

அன்று இரவு என் மனைவி உணவு பரிமாறி கொண்டிருக்கும் பொழுது மெதுவாக அவள் கைப்பற்றி எனக்கு அவளிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்பதை தெரியப்படுத்தினேன். அந்த இரவு அவள் மவுனமாக அழுதுகொண்டே எங்கள் திருமணத்திற்கு என்ன ஆயிற்று என்று விடை தேடி கொண்டிருந்தாள். தன் வாழ்நாளின் பத்து வருடங்களை என்னுடன் கழித்தவள் இப்பொழுது எனக்கு அன்னியமாகி போனாள். என்னால் வீணாய் கடந்து போன அவள் வாழ்க்கைக்காக நான் பரிதாபம் மட்டுமே பட முடிந்தது, காரணம் நான் ஜேன்ஐ உயிரினும் மேலாக காதலிக்கிறேன்.

காலையில் என் மனைவி தனது விவாகரத்து நிபந்தனைகளை சமர்ப்பித்தாள். அவளுக்கு என்னிடத்தில் எதுவும் தேவையில்லை ஆனால் விவாகரத்திற்கு ஒரு மாத கால அவகாசம் வேண்டும், மேலும் எங்கள் திருமணத்தின் போது நான் அவளை தூக்கிக்கொண்டு மணவறையை விட்டு வெளியே வந்தது போல் இந்த ஒரு மாதமும் அவளை நான் படுக்கையறையிலிருந்து வாசல் வரை தினமும் தூக்கிக் கொண்டு வரவேண்டும். நாங்கள் கழிக்கப் போகும் மீதி நாட்களை அமைதியாக செலவிட வேண்டியிருந்ததால் அவள் அர்த்தமில்லா கோரிக்கையை ஏற்றுக்கொண்டேன்.

என் விவாகரத்து உறுதியாய் வெளிப்பட்ட பிறகு முதல் நாள் அவளை நான் சுமந்த போது இருவருமே அசவுக்கியமாய் உணர்ந்தோம். ஆனால் எங்களை பின்தொடர்ந்து வந்த மகனோ கைத்தட்டியப்படி அப்பா அம்மாவை தன் கைகளில் சுமக்கிறார் என்று மகிழ்ந்தான். இது எனக்கு சற்று மன வலியை கொடுத்தது.

இரண்டாம் நாள் இருவருக்கும் சற்று சவுகரியமாக இருந்தது. அவள் என் மார்பில் சாய்ந்து கொண்ட போது அவள் உடையின் வாசம் என்னை தாக்கியது. இவளை நான் பலநாள் பத்திரமாக பார்க்கவில்லை என்ற எண்ணம் எழுந்தது. இவள் தன் இளமையை தொலைத்து விட்டிருக்கிறாள். அவள் முகத்தில் சுருக்கங்கள் விழ ஆரம்பித்து விட்டன. முடிகள் நரைத்து விட்டன. எங்கள் திருமணம் அவள் மேல் ஒரு பெரும்சுமையை ஏற்றி வைத்து விட்டது. ஒரு நிமிடம், நான் இவளுக்காக என்ன செய்து விட்டேன் என்று எண்ணிக்கொண்டேன்.

நான்காம் நாள், எங்களுக்குள் நெருக்கம் மீண்டும் மலர்வதை உணர்ந்தேன். இந்த பெண்மணி தன் பத்து வருட வாழ்க்கையை எனக்காக செலவிட்டிருக்கிறாள். ஐந்து மற்றும் ஆறாம் நாட்களில் எங்கள் மேலும் நெருக்கம் அதிகமாவதை அறிந்தேன். இப்பொழுது அவளை சுமப்பது சுலபமாயிற்று. ஒரு மாதம் சென்றதே தெரியவில்லை.

கடைசி நாளன்று அவளை தூக்கி கொண்டு ஒரு அடி கூட என்னால் நகர முடியவில்லை. அந்நேரத்தில் உள்ளே வந்த எங்கள் மகன், தந்தையே நீங்கள் அம்மாவை சுமக்கும் நேரம் வந்து விட்டது என்றான். அவனை பொருத்தவரை அவன் தந்தை அவன் தாயை தூக்கி சுமப்பதை பார்ப்பது அவன் வாழ்வின் இன்றியமையான பகுதியாகி விட்டது. எங்கள் மகன் பள்ளிக்கு சென்று விட்டான். அவளை இறுக்கமாக அணைத்தபடியே நம் வாழ்க்கை நெருக்கத்தை இழந்து விட்டதை நான் கவனிக்க தவறி விட்டேன் என்றேன்.

அலுவலகம் விரைந்த நான் காரின் கதவை பூட்டாமலே அவசர அவசரமாக மாடிப்படிகளில் ஏறினேன். கதவை திறந்த ஜேனிடம் என்னை மன்னித்து விடு ஜேன், எனக்கு விவாகரத்து தேவையில்லை என்றேன். எங்கள் வாழ்க்கை கடினமாக மாறியதற்கு காரணம் நாங்கள் ஒருவரை ஒருவர் விரும்பவில்லை என்பதல்ல, நங்கள் எங்கள் வாழ்வின் பொன்னான தருணங்களை மதிக்கவில்லை என்பதுதான் உண்மை என்றேன். அவள் விழித்துக் கொண்டவளாய் என்னை பார்த்தாள். என் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டு விட்டு அறைக்குள் சென்று விம்ம ஆரம்பித்தாள். நான் படியிறங்கி காரை எடுத்தேன்.

வரும் வழியில் என் மனைவிக்காக பூங்கொத்து ஒன்றை வாங்கினேன். விற்பனை பெண்மணி அட்டையில் என்ன எழுத வேண்டும் என்று கேட்டாள். நான் புன்னகைத்துக் கொண்டே “மரணம் நம்மை பிரிக்கும் வரை தினமும் உன்னை காலையில் தூக்கி சுமப்பேன்” என்று எழுதினேன். அன்று மாலை, கையில் பூங்கொத்தோடும் முகத்தில் புன்னகையோடும் மாடிப்படிகளில் ஏறித்துவங்கினேன்.

..................................கதை இத்துடன் நிறைவு பெறவில்லையென்றாலும் இதற்கு மேலும் அதை தொடர்தல் அவசியமற்றது என்று கருதுகிறேன். 

நம் வாழ்வில் நடக்கும் சின்ன சின்ன வாழ்வியல் விசயங்களே உறவுகளை பலப்படுத்தும் மிகப்பெரிய ஆயுதமாய் இருக்கிறதேயன்றி வீடோ, காரோ, சொத்துக்களோ, வங்கியில் பணமோ அல்ல. வாழ்க்கையில் விட்டுக்கொடுத்தலால் வரும் வெற்றியை அறியாதவர்களே பெரும்பாலும் தோற்றுப் போகிறார்கள். நம்மில் எத்தனை பேர் இன்று நம் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கிறோம் என்று எண்ணிப் பார்த்தால் பெரும்பான்மையோர் அந்த நிலையிலேயே தான் இன்றும் உழன்று கொண்டிருக்கிறோம் என்பது தான் உண்மை. கனத்த இதயத்தோடு ஒரு பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது என்னால்...


Wednesday 7 November 2012

உங்கள் வாழ்க்கையின் முக்கியமான நபர் என்று யாரை கருதுகிறீர்கள்?

பொழுதுபோக்குக்காக நான் முகநூலை பயன்படுத்த ஆரம்பித்து இருந்தாலும் சில நேரங்களில் கருத்துக்களை பகிர்வதற்கும், பலரின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்கும் அது உதவியாக இருக்கிறது என்றால் அது மிகையல்ல. 

இப்படி தான் சமீபத்தில் முகநூலில் "உங்கள் வாழ்க்கையின் முக்கியமான நபர் என்று யாரை கருதுகிறீர்கள்?? ஏன்??? எதனால்????" என்ற கேள்வி Gayathri Devi யால் நண்பர்கள் மத்தியில் வைக்கப்பட்டது.

இதற்கு பலர் பலவிதமான பதிலை கூறி இருந்தனர். சிலர், தான் தான் தனக்கு முக்கியமான நபர் என்றும், மேலும் சிலர், தாய் தந்தையர் தான் என்றும் தங்கள் கருத்தினை பதிவு செய்திருந்தனர். ஒரு பதிவாளரோ ஒரு படி மேலே போய் தன் காதலி தான் தன் வாழ்வின் முக்கியமான நபர் என்று வாதிட்டிருந்தார். அவருடைய கருத்து அவர் வழியில் முக்கியமானதாகவே இருந்தது. மேலும் ஒருவர் தன்னை செதுக்கிய இந்த சமூகம் தான் தனக்கு முக்கியமானது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

பலரும் பலவிதமான விடைகள் கூறி இருந்தாலும் சிலர் கூறிய முக்கியமான சில பதில்களை மட்டும் இங்கு பார்க்கலாம்.

Vasanthakumar Graphicdesigner  என் வாழ்வில் முக்கியமான நபர் என்று நான் கருதுவது என்னை எதிரியாய் நினைக்கும் சிலர், ஏன் என்றால் என்னை எதிரியாய் கருதி எனக்கெதிராய் அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியங்களையும் நான் முறியடிக்க வேண்டும் என்று என்னை நானே செம்மை படுத்தி கொள்ள உதவுகிறார்கள், என்னை வீழ்த்த நினைக்க நினைக்க நான் என்னை மென் மேலும் உயர்த்த மறைமுகமாக அவர்களே எனக்கு உதவுகிறார்கள்....

ஆம்...! அது உண்மை தானே... எதிரிகள் இருக்கும் வரை தானே  நாம் விழிப்போடு செயல்பட முடியும்?

Jeeva Rajaseker  நம் வாழ்வின் முக்கியமான நபராக நம்மை தவிர வேறு யார் இருக்க முடியும்? வாழ்வின் ஒவ்வொரு தருணங்களிலும் சிலர் முக்கியமானவராக வந்து போவர். "நேற்றைய யாரோ இன்றைய முக்கியமானவர், இன்றைய முக்கியமானவர் நாளைய நினைவில் நின்றவர்". இதில் உறவுகளை வேண்டுமானால் விதிவிலக்காக சொல்லலாம். அதிலும் வயதுக்கு வரும் வரை தாய் முக்கியம், திருமணம் வரை தந்தை முக்கியம், விளையாடும் வயதில் சகோதரர்கள் முக்கியம் (அதிலும் சண்டை போட), சம்பாதிக்கும் வரை கணவர்/மனைவி முக்கியம், வயதான காலத்தில் குழந்தைகள் முக்கியம் (தயவு தேவை படுகிறது). உறவுகளிலும் இந்த முக்கியத்துவம் மாறுபடுகிறது. நேற்றைய நண்பனாய் இருந்தவன் இன்றைய நினைவுகளில் மட்டும், இன்றைய பகைவன் நாளைய உற்ற தோழனாய் மாறக்கூடும்.... மொத்தத்தில் வாழ்வின் நடந்தவை, நடப்பவை, நடக்க போகின்றவை எல்லாவற்றிலும் நாம் இருப்போம், நாம் மட்டுமே இருப்போம்.... என்றும் எப்போதும்...

இது எனது கருத்து...

Shanmuga Murthy ம்ம்ம்..நல்ல கேள்வி.ஆனால்.. 'முக்கியமான' என்ற பதத்தில் பலகேள்விகள் தொக்கி நிற்கிறது. எந்த வகையில் முக்கியமான என்பது அறியப்படவேண்டும்.ஆனால் நமது வாழ்க்கையில் முக்கியமான திருப்பங்களுக்கு காரணமானவர்களை அவ்வாறு கொள்ளலாம். ஆனால் அது எல்லோருக்கும் சாத்தியப்படக்கூடிய ஒன்று அல்ல. சிறுவராய் இருக்கையில் தந்தை ஹீரோ. ஆனால் வளர்ந்த பின் அந்த இமேஜ் கொஞ்சம் குறைந்துவிடும். அதன் பின் நமது வாழ்க்கையில் நமக்கு நிலையான வாழ்க்கையில் பங்கேற்கும் கணவன்/மனைவிதான் முக்கியமான நபர். நமது நலனில் , வாழ்க்கையில், தன் எதிர்பார்த்த வாழ்க்கை கிடைக்காதபோதும் ஒருவருக்கொருவர் புரிந்து வாழத்துவங்கும் அந்த இருவர்..அதாவது கணவனுக்கு மனைவி/மனைவிக்கு கணவன் என்பவர்தான் முக்கியமான நபர். இது பொதுவான விதி. ஆனால் ஒரு இக்கட்டான சூழலில் ,தனக்கு விடிவே இல்லையோ என்று ஒருவர் தடுமாறி நிற்கையில் ..கை கொடுத்து தூக்கிவிட்டு உதவி செய்பவரும் மிகவும் முக்கியமான நபரே. :-)) ஒருவருக்கு காதலி/காதலன் எந்த வகையிலும் முக்கியமான நபர் அல்ல. அக் காதல் வெற்றி பெற்று அவர் கணவன் -மனைவி யாகும் பட்சத்தில்தான் முக்கியத்துவம் பெறுவர் என்பது என் கருத்து.

காதலனோ காதலியோ கணவன் மனைவியாகும் பட்சத்தில் தான் ஒருவொருக்கொருவர் முக்கியமானவர்களாக ஆகிறார்கள் என்பது சிந்தித்து ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம் தான்... 

மொத்தத்தில் இந்த விசயத்தை உங்களுடன் பகிர வேண்டும் என்று தோன்றியதால் பகிர்ந்தேன். தங்களின் கருத்துக்களையும் தெரிவித்தால் மேலும் அறிந்துக்கொள்ள உதவியாக இருக்கும். 

Tuesday 30 October 2012

படித்ததில் பிடித்தது- உறவுகள்.....


ஒரு நாள் ஒரு சிறு பெண்ணும் அவள் தந்தையும் ஒரு பாலத்தை கடக்கவேண்டிய கட்டாயம். தந்தையோ சற்று பயத்தோடு“செல்லமே, இந்த பாலம் கடக்கும் வரை என் கையை பற்றிக்கொண்டிரு, அப்பொழுதுதான் நீ ஆற்றில் விழாமல் இருப்பாய்” என்றார்.

சிறு பெண்ணோ “இல்லை தந்தையே, நீங்கள் என் கையை பற்றி கொள்ளுங்கள்” என்றாள்.

“இரண்டுக்கும் அப்படி என்ன வித்தியாசம் இருக்க போகிறது” என்றார் தந்தை குழப்பத்தோடு.

“பெரிய வித்தியாசம் இருக்கிறது தந்தையே” தொடர்ந்தாள் சிறுமி, “நான் உங்கள் கைகளை பற்றிக்கொண்டிருக்கும் போது எனக்கு ஏதாவது நேர்ந்தால் என் கையை நான் பயத்தில் விட்டுவிட வாய்பிருக்கிறது, ஆனால் நீங்கள் என் கையை பற்றியிருந்தாலோ எனக்கு எதை பற்றியும் பயமில்லை, ஏனெனில் எக்காரணம் கொண்டும் என் கையை நீங்கள் விட மாட்டீர்கள்”

இதுதான் உறவுகள்... உறவுகள் மேல் கொண்ட நம்பிக்கைகள்...

எந்த உறவிலும் நம்பிக்கை என்பது ஒட்டுதலல்ல, பிணைதல். எனவே நம்மை நேசிக்கும் நபர் நம் கைகளை பற்றி கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்காமல் நாம் அவர்கள் கைகளை பற்றிக் கொள்வோம்...


ஜூசி......


ஜூசி பிறந்த போது நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு விலங்கியல் படித்துக் கொண்டிருந்தேன். மறுநாள் எனக்கு மாதாந்திரத்தேர்வு. எனவே இரவில் கொட்ட கொட்ட விழித்து அதுவரை திறக்கப்படாத புத்தகத்திடம் அதன் புதுமை வாசத்தோடு மல்லுக்கட்டி கொண்டிருந்தேன். இரவு மணி பனிரெண்டு இருக்கும், திடீரென சிண்டு அலற ஆரம்பிக்கிறாள். அங்குமிங்குமாய், ஒவ்வொரு அறையாய் சென்று அனைவரின் தூக்கத்தையும் கலைக்கும் நோக்கில் ஏதோ ஒரு ஏக்க குரலில் தளுதளுக்கிறாள். அவள் குரல் கேட்டு என் படுக்கையறையிலிருந்து வெளியே வருகிறேன். என்னை கண்டதும் அவளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. என் கால்களை கட்டிக் கொள்கிறாள். அவளோடு வருமாறு கெஞ்சும் குரலில் இரஞ்சுகிறாள். என்னதான் நடந்து விட போகிறது பார்க்கலாம் என்ற தைரியத்தில் அவளோடு செல்கிறேன். என் தாயின் படுக்கையறையை கடக்கும் போது நடு இரவில் பேய் மாதிரி என்னடி உலவுகிறாய் என்ற கண்டிப்பையும் மீறி சிண்டு பின்னால் சென்றேன்.

அவளின் படுக்கையறை. எனக்கு உதவி செய்யேன் என்ற கெஞ்சல் பார்வையோடு அவள் படுக்கையில் படுக்கிறாள். அவள் குரல் கேட்டு அவளின் தாய் நரியும் அங்கு ஆஜர். நரி என்று அவளுக்கு ஏன் பெயர் வந்தது என்பது தனிக்கதை. அவள் தான் எங்கள் வீட்டு ஜார்ஜ் பெர்னாண்டஸ் (அப்போதைய ராணுவ மந்திரி). அவள் ஒருத்தி இருந்து விட்டால் அனைவருக்கும் ஒரு தைரியம். சரி, கதைக்குள் வருவோம்.

சிண்டுவின் முனங்கல் ஒலி அதிகரிக்க ஆரம்பிக்கிறது, திடீரென அவள் அருகில் ஒரு அழகிய நிலவு. நரி லாவகமாய் அவளை தடவி கொடுத்து தாய்க்கும் சேய்க்குமான தொப்புள் கொடி உறவை துண்டிக்க உதவுகிறாள். சோர்வோடு படுத்துக் கொண்ட சிண்டுவை வாஞ்சையுடன் தலையை வருடிக் கொடுக்கிறாள். எனக்கும் ஒரு பரவசம். நானே தாயானதாய் ஒரு உணர்வு. அதுவரை என்னை போகாதே போகாதே என்று இறைஞ்சி கொண்டிருந்த சிண்டு என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. சேயை கண்ட மகிழ்ச்சியில் அவள் திளைத்து விட்டாள்.

மறுநாள் பரீட்சை நினைவில் வர நானும் என் அறையில் வந்து படுத்துக்கொண்டேன். ஏனோ அந்த புது வரவு என் மனதில் இனம் புரியா ஒரு சந்தோசத்தை விதைத்து விட்டிருந்தது. மேலும் மேலும் தொடர்பரீட்சை என்னை இம்சிக்க ஆறு நாட்கள் ஆறு நொடிகளைப் போல் ஓடி விட்டிருந்தன.

திடீரென அந்த புதுவரவின் நினைவு வெகுவாய் தாக்க சிண்டுவை காணச்சென்றேன். பாலூட்டிக் கொண்டிருந்த அவள் என்னை கண்டதும் சற்றே தலை தூக்கி பார்த்து விட்டு மீண்டும் படுத்துக் கொண்டாள். மெதுவாக அவள் அருகில் சென்று அமர்ந்தேன். என்னை ஓரக்கண்ணால் பார்த்த புதுவரவை மென்மையாக கையிலெடுத்துக் கொண்டேன். “ஜூசி” என் வாய் மெதுவாக அவளுக்கான பெயரை உச்சரித்தது. அவளோடு என் அறைக்குள் நுழைந்தேன். ஏனோ இவள் எனக்காக பிறந்தவளோ என்று தோன்றியது. பின்னாலயே வந்த சிண்டுவிடம் இனி நீ என் அறையிலேயே படுத்துக்கொள் என்றவாறு அவள் படுக்கையை இடமாற்றினேன்.

அதன் பின் வந்த நாட்கள் சுவாரசியமானவை. ஜூசி வளர்ந்து கொண்டிருந்தாள். தாயிடம் பால் குடிக்கும் நேரம் போக மீதி நேரம் என் மடியில் தான். இரவில் போது தாயிடம் தூங்கும் அவள் அதிகாலை ஐந்து மணியளவில் விடியும் நேரம் என் முகத்தருகில் இருப்பாள். என் மூச்சு காற்றை பிடித்து விடும் முயற்சியில் தன் பிஞ்சு கரங்களால் என் முகத்தில் கிச்சு கிச்சு மூட்டுவாள். கல்லூரி முதல் மணி அடித்த பின்பே படுக்கை விட்டு எழும் நான் அவளால் அதிகாலை எழும் நிலைக்கு தள்ளப்பட்டேன். இருந்தும் அவள் மேல் ஒரு தீராத காதல். அவள் என்றும் நன்றாய் இருக்க வேண்டுமென்று மனம் பிரார்த்தித்துக் கொண்டே இருந்தது.

திடீரென என் சித்தப்பா தூத்துக்குடியிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தார்கள். வீட்டில் அங்குமிங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்த ஜூசியை கண்டதும் அவர்களுக்கு பிடித்து விட்டது. என் அம்மா வேறு அவளை பற்றி ஆஹா ஓஹோவெனப் புகழ அவளை தன்னோடு அழைத்து சென்றே தீருவேன் என்று அடம்பிடிக்க ஆரம்பித்தார். அப்பா அம்மாவோடு கலந்து பேசி, அவள் சித்தப்பாவோடு இருந்தால் மிகவும் நன்றாக இருப்பாள் என்று என்னை ஆறுதல் படுத்தினர். மனம் நிறைந்த பாரத்தோடு அவளை அவரிடம் ஒப்படைத்தேன்.

அன்று இரவு எனக்கு தூக்கம் தொலைந்த இரவாய் போய் விட்டது. என் மகள் எங்கே என்று பார்வையாலே கேட்ட சிண்டுவை பார்க்கும் சக்தியற்றவளாய் என் படுக்கையறை கதவை மூடினேன். சிலநாட்கள் அதிகாலை தூக்கம் விழித்து பின் மீண்டும் நெடுநேரம் தூங்க ஆரம்பித்தேன். இதற்கு இடைப்பட்ட நாட்களில் ஜூசியை இருமுறை சந்தித்தேன். சித்தப்பாவின் செல்லப்பிள்ளையாய் அவரோடவே எப்பொழுதும் காரில் பயணிக்கிறாள். அவளை பற்றிய என் கவலை என்னை விட்டு கொஞ்சம் கொஞ்சமாய் விலகி கொண்டிருந்தது.

திடீரென ஒரு வெள்ளி அதிகாலை என் மூக்கில் ஜூசி எப்பொழுதும் கொடுக்கும் முத்தம். அதோடு சேர்த்து என் மூச்சு காற்றை பிடித்துவிடும் முயற்சி.. “ஜூசி” அழைத்தவாறே விழித்துக் கொள்கிறேன். அதிகாலை மணி ஐந்து. கனவா நினைவா என்று சுதாரிப்பதற்குள் என் மூக்கில் நிஜமாய் ஈரம். தூக்கம் தொலைந்து அம்மா பின்னால் போய் அணைத்துகொள்கிறேன். ஆச்சர்ய குறியோடு அம்மா காபியை நீட்டுகிறாள். “வரும் ஞாயிறு சித்தப்பா வீட்டில் வருகிறார்களாம்” அம்மா செய்தியாய் சொல்லி விட்டு போன வார்த்தைகள் என்னுள் மீண்டும் பரவசத்தை ஏற்படுத்தின.

அப்படியானால் நான் ஜூசியை பார்க்கப்போகிறேன். ஞாயிறு எனக்கு சுவர்க்கமாய் விடிந்தது. ஒவ்வொரு மணித்துளியும் ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்க வாசலில் வந்து நின்றது சித்தப்பாவின் கார். ஓடி சென்று காரின் உள் தேடினேன். “ஜூசி வரவில்லை” சோகத்தோடு ஒலித்த சித்தியின் குரலுக்கு ஏன் என்று கண்களாலே வினவினேன். “வியாழன் இரவு அவள் இறந்து விட்டாள்” . அவள் எப்படி இறந்தாள் என்ற விளக்கத்தை சித்தப்பா அம்மாவிடம் சொல்லி கொண்டிருக்க எனக்கோ வெள்ளி காலை அவள் கொடுத்த முத்தம் நினைவிற்கு வந்தது...


Tuesday 23 October 2012

கிறுக்கிய தத்துவங்கள்.... (பகுதி 1)



1. உன் ஒவ்வொரு அசைவும் ஏதோ ஒரு காரணத்திற்காக இருக்க வேண்டும், ஒவ்வொரு நொடியும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்....

2. கோபமும் கண்ணீரும் உணர்வுகளின் சத்ரு. கோபத்தின் போது மவுனம் காப்பதும், கண்ணீரின் போது அமைதி காப்பதும் வாழ்க்கையின் வெற்றி ரகசியங்கள்....

3. நேரம் வரும் போது எல்லாம் கூடி வரும், ஆனால் அந்த "நேரத்தை" உருவாக்கும் முயற்சிகளில் நாம் தான் ஈடுபட வேண்டும்....

4. விடியும் வரை தெரிவதில்லை கண்டது கனவு என்று, வாழ்க்கையும் அப்படி தான், முடியும் வரை தெரிவதில்லை, வாழ்வது எப்படி என்று...

5. வாழ்க்கை என்பது நீ சாகும் வரை இல்லை, மற்றவர் மனதில் நீ வாழும் வரை ....

6. காலம் என்றும் நமக்காக காத்திருப்பதில்லை, காலத்தோடு நாம் தான் அனுசரித்து செல்ல வேண்டும்...

7. வாழ்க்கை - நீ வாழ்வது உன் கையில் தான் என்று சொல்லாமல் சொல்கிறதோ? ....

8. முட்களும் கற்களும் நெருடி கொண்டே தான் இருக்கும், ஆனாலும் வாழ்க்கை அதன் பாதையில் சென்று கொண்டு தான் இருக்கும்...

9. நண்பனேயானாலும் நம் மேல் அவருக்கான சுதந்திரம், நம் சுதந்திரத்தை பாதிக்காத வரை தான்.....

10. சந்தோசம் என்பது உள்ளங்கை அளவு தான், ஆனால் அதையே பிறருடன் பகிர பகிர சுரபியாய் ஊற்றெடுக்கும்...

11. வாழ்க்கை என்பது அனுபவங்களின் தொகுப்பாகும். அவற்றை நல்ல பாடமாக எடுத்து கொண்டு செயல்பட்டால் வெற்றியும் நிம்மதியும் நம் வசமாகும்...

12. சோதனைகளையும் வேதனைககளையும் கடந்து தான் நேர்மை புகழப்படும்...

13. நகைச்சுவை நம் வாழ்வில் மகிழ்ச்சியான தருணங்களை தருகிறது, ஆனால் வாழ்க்கையே நகைச்சுவையாய் போய் விட்டால் நம் மகிழ்ச்சியை அதுவே தொலைத்து விடுகிறது....

14. அன்னைக்கு ஆண் பால் பெண்பால் வேறுபாடு எதுவும் இல்லை...அன்பை பகிரும் யாவரும் அன்னையே....

15. சுதந்திரம் இல்லாத வாழ்க்கை, உயிர் இல்லாத உடலைப் போன்றது...

16. கர்வம் என்பது நமக்கு நாமே வைத்து கொள்ளும் ஆப்பு.....

17. ஆர்வமும் முயற்சியும் முன்னேற்றத்தின் தூண்டுகோல்.....

18. தனியறையில் தூங்கி கொண்டிருப்பது தனிமையல்ல, உறவுகள் மத்தியில் ஒரு நட்பு இல்லாதிருப்பதே தனிமை....

19. எவ்வளவு தான் ஒருவரிடம் நற்பண்புகள் இருந்தாலும் அவரின் கோபம் ஒரு நொடியில் அவற்றை தகுதி இழக்க செய்து விடும்....

20. இந்த உலகில் தான் மட்டுமே புத்திசாலி என்று நினைப்பவன் என்றும் முட்டாளாகவே இருப்பான்....

21. மனசாட்சி சொல்படி வாழ்பவன் என்றும் பயம் கொள்ள தேவையில்லை....

22. ஒருவரின் குறைகளை கூறி கொண்டே இருந்தால் பயனில்லை, அவர்களின் நிறைகளை கண்டுபிடித்து நட்பு பாராட்டுவதே மேன்மை...

23. துன்பங்களும் இன்பங்களும் நம் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் வாழ்க்கை அதன் போக்கில் சென்று கொண்டுதான் இருக்கும் .....

24. விடியல் என்பது தினமும் தான், ஆனால் அதை சரியான முறையில் பயன்படுத்தி கொள்வது நம்மிடம் தான் உள்ளது....

25. அன்பை பகிர்ந்து கொடுக்க கொடுக்க தான் அதிகமாகும்...

26. நமக்கான பாதை எதுவென்று தெரிந்து கொண்டு முன்னேறுவது தான் புத்திசாலித்தனம்...

27. சோம்பல் என்பது கிடைக்க வேண்டியவைகளையும் தடுத்து விடும்...

28. ஒரு சிறு புன்னகை பகைமையை விலக்கி வைக்கும்....

29. மரண படுக்கையில் கூட உன்னால் இயன்றதை செய்யலாம் உனக்குள் ஒரு ஆற்றல் இருந்தால்...

30. குடும்பம் என்பது காற்றடைத்த பலூன் போன்றது, அதிகமாக அழுத்தம் கொடுத்தாலும் வெடித்துவிடும், லூசில் விட்டாலும் காற்று போய் விடும்...

31. நேசம் வெளிப்படும்போதுதான் ஒருவன் மனிதனாகிறான்...

32. அதிகாரம் என்பது ஆணவத்தால் அமைந்து விட கூடாது, அன்பால் ஆளப்பட வேண்டும்....

33. சந்தர்பங்களும் சூழ்நிலையும் ஒருவனுக்கு சிறந்த ஆசான்... அவனின் உண்மை பண்புகளை அது வெளிக்கொண்டு வரும்...

34. வாழ்க்கை என்பது வாழ்வது இல்லை, பிறர் மனதை அன்பால் ஆள்வது ....

35. என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை என்னால் தான் முடியும் என்பது அகம்பாவம்.....

36. ஒரு நிமிடம் தோன்றும் கோபத்தையும் உணர்ச்சிகளையும் அடக்கி ஆள தெரிந்து விட்டால் வாழ்வை வென்று விடலாம்...

37. வாழ்வின் பல்வேறு சம்பவங்கள் மற்றும் அனுபவங்களின் ஒரு பகுதி தான் காதல்.... இருந்தும் முக்கியமானது.....

38. வாழ்க்கை வாழ்ந்துவிட்டு போவதல்ல, வாழ வைத்து பார்ப்பது ...

39. வெற்றியும் தோல்வியும் நம் மன உறுதியை பொறுத்தது....

40. முடியாது என்று ஒதுங்குவதை விட முயன்று பார்த்து தோற்பது மேல்....

41. நட்பின் மொழி வார்த்தைகளிலில்லை , அதன் அர்த்தங்களில் உள்ளது....

42. சொந்தங்களை பிரிக்க வல்லது கொடுக்கல் வாங்கல். கவனத்தோடு செயல் படாவிட்டால் உறவுகள் சிதறி விடும்...

43. மறதி என்பது துன்பத்தை மறக்க இயற்கை நமக்களித்த கொடை. அது மட்டும் இல்லாவிட்டால் உலகம் துன்பத்தில் மூழ்கி இருக்கும்...

44. தன்னால் முடியும் என்ற நம்பிக்கையோடு அதை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளும் தெரிந்தால் மட்டுமே ஒருவருக்கு வாக்கு கொடுக்க வேண்டும்....

45. எத்தனை துன்பங்கள் நேர்ந்தாலும் அடுத்த துன்பத்தை எதிர்நோக்கும் தைரியம் இருந்தால் துன்பம் கண்ணுக்கு தெரிவதில்லை ....

46. அன்பும் நேசமும் இருவழி பாதையாக இருக்க வேண்டும்....

47. நாமே நம்மை கட்டுப்படுத்தும் வித்தையை கற்று விட்டால் உலகம் நம் வசமாகும்....

48. பிடிவாதம் என்னும் வாதம் நம்மை ஆட்கொண்டிருக்கும் வரை விவாதங்கள் நீண்டு கொண்டே தான் போகும்.....

49. சட்டென்று தோன்றும் கோபம் சட்டென மகிழ்ச்சியை மறைத்து விடும் ....

50. ஒரு மனிதனை கவுரவமிக்கவனாக வாழ செய்வதில் கல்விக்கு பெரும் பங்கு உண்டு... 


Tuesday 16 October 2012

தண்ணீர் தண்ணீர்...!



தண்ணீர் நம் உடலுக்கு மிக அத்தியாவசியமான ஒன்று, ஒருவர் ஒரு நாளில் எவ்வளவு தண்ணீர் பருக முடியுமோ அவ்வளவு தண்ணீர் பருக வேண்டும், சராசரியாக மூன்றிலிருந்து நான்கு லிட்டர் வரை அவசியம் பருக வேண்டும் என்ற தகவலை ஆசிரியர்கள் மூலமாகவும், வீட்டின் பெரியவர்கள் மூலமாகவும் தெரிந்து வைத்திருந்தேன்.

ஆனாலும் அதிகமாக வியர்க்கும் எனக்கு அந்த சமயத்தில் மட்டுமே அதிகமாக தண்ணீர் தேவைப்பட்டது. ஓய்வு நேரங்களில் அதிகமாக அதன் பயன்பாடு குறைந்தே இருந்தது. ஒரே சீரான அளவிலான தண்ணீரை நான் எப்பொழுதும் உட்கொண்டதில்லை.

தண்ணீர் பற்றிய தகவலை நான் தேட ஆரம்பித்தது ஒரு கட்டாய சூழ்நிலையில் தான்.

ஏதோ சில பல காரணங்களால் என் உடல் எடை அதிகரித்து கொண்டிருந்தது. தண்ணீர் அதிகம் குடிக்காததினால் தான் இந்த பிரச்சனை என வீட்டில் உள்ளோர் கூறவே, அதுவரை தண்ணீர் பற்றிய எந்த சிந்தனையும் இல்லாமல் தாகமெடுத்தால் மட்டுமே நீர் அருந்தி வந்த நான் அதனை அதிகமாக குடிக்க ஆரம்பித்தேன்.

கொஞ்ச நாட்களிலேயே எனக்கு காலில் நீர் கோர்க்க ஆரம்பித்தது. தலைவலி பாடாய் படுத்தியது. உடலின் எடை இன்னும் அதிகாரித்ததோடு மூச்சு விடவே சிரமமாயிற்று. வீட்டில் உள்ளவர்களோ முருங்கை இலையும், பார்லி தண்ணீரும் கொடுத்து குடிக்க வைத்தனர். பிரச்சனை மேலும் அதிகமாயிற்று.

என் மனதில் தானாகவே நான் அருந்தும் நீரில் அளவின் மேல் சந்தேகம் வர, அவற்றை அதிகமாக பருகுவதை நிறுத்தினேன். கொஞ்ச நாட்களிலேயே கால்களில் நீர் கோர்ப்பது நின்றது. தலைவலியும் படிப்படியாக குறைந்தது.

உடலின் எடை கூடி கொண்டே சென்றாலும், இத்தகைய பிரச்சனையிலிருந்து நான் ஒருவழியாக மீண்டு வந்தேன். பின்னர் தான் இந்த தண்ணீர் பற்றிய தகவலை இணைய தளத்தில் தேட ஆரம்பித்தேன். தண்ணீர் பற்றிய என் தேடல் எனக்கு பலவிதமான ஆச்சர்ய தகவலை அளித்தது.

தண்ணீரின் பயன்கள் பற்றி நீங்கள் அதிகமாக தெரிந்து வைத்திருக்கலாம், ஆனால் அவற்றினால் வரும் பிரச்சனைகள் பற்றி நம்மில் பெரும்பான்மையோருக்கு தெரிவதில்லை. அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

முதலில் நீண்ட நாட்கள் அதிக அளவு தண்ணீர் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்துப் பார்க்கலாம். 

1. உடலின் மொத்த இரத்தத்தின் அளவு அதிகரிக்கப்படுகிறது. குறிப்பிட்ட அளவு இரத்தம் மட்டுமே சுழற்சி முறையில் சுழலும் சூழ்நிலையின் இத்தகைய இரத்த அதிகரிப்பு இதயம் மற்றும் இரத்த வால்வுகளில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

2. நாம் குடிக்கும் தண்ணீரை சுத்திகரிக்கும் வேலையை செய்வது கிட்னியே. அதிகளவு உட்க்கொள்ளப்படும் தண்ணீரால் கிட்னி ஓய்வில்லாமல் சுத்திகரிக்கும் பணிக்கு தள்ளப்படுகிறது. இதனால் அது தளர்ச்சி அடைவதுடன் அதன் மெல்லிய அறிப்பான்கள் (glomeruli) அழுத்தம் காரணமாக சேதமடைகின்றன.

இவ்வாறு தேவையில்லாமல் அதிகளவு அழுத்தங்களால் இதய வால்வுகள் மற்றும் கிட்னிகள் கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்பட்டு நாம் அறியாமலே நீண்ட நாள் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.

இனி மிக குறைந்த கால அளவுக்குள் அதிகளவு தண்ணீரை கட்டாயப்படுத்தி திணித்தால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி பார்க்கலாம்: 

1. அதிக அளவு தண்ணீரின் அழுத்தத்தால் கிட்னி தேவைக்கதிகமான தண்ணீரை வெளியேற்றுவதில் திணறுகிறது.

2. அதிகளவு தண்ணீரால் உடலின் இரத்த ஓட்டம் நீர்த்து போகிறது. இதனால் இரத்தத்திலும் உடலின் செல்களிலும் உள்ள “எலக்ட்ரோலைட்” களின் சமநிலை பாதிக்கப்பட்டு, அதனை சரி செய்யும் முயற்சியில் இரத்தத்தில் உள்ள தண்ணீர் உடலின் செல்களுக்கு தாவுகிறது. இதனால் செல்கள் வீங்க துவங்குகின்றன.

3. இத்தகைய “செல்” வீக்கம் மூளை செல்களில் அதிகரித்தால், கடினமான ஓடுகளுக்குள் இருக்கும் மூளை வீங்கி, அழுத்தப்படுகிறது.

4. இதில் குறுகிய காலத்தில் நாம் எவ்வளவு தண்ணீர் அருந்துகிறோம் என்பதை பொறுத்து பாதிப்புகள் வேறுபடுகிறது. தலைவலியில் ஆரம்பித்து, மூச்சு திணறல் வரை கொண்டு போய் விடுகிறது.

ஏதோ ஒரு உடல்நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு வயிற்று பகுதி ஸ்கேன் செய்ய வேண்டியது வந்தால் வயிறு நிறைய தண்ணீர் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுவார்கள். நம்மில் பெரும்பான்மையோர் செய்யும் தவறு என்னவென்றால் ஸ்கேன் செய்யும் சற்று முன்னர் அதிக அளவு தண்ணீரை கட்டாயபடுத்தி வயிற்றுக்குள் திணிப்பது தான். அவ்வாறு செய்யாமல், ஸ்கேன் செய்வதற்கு இரண்டு மணி நேரம் முன்பே கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை உட்கொண்டு ஸ்கேன் செய்வதற்கு தயாராக வேண்டும். இதனால் பெருமளவு வயிற்றில் அழுத்தம் ஏற்படாமலும் உடனடி சிறுநீர் கழித்தே ஆக வேண்டுமென்ற கட்டாயம் இல்லாமலும் இருக்கும்.



சரி, தண்ணீரால் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறதென்றால், நமக்கு தேவையான அளவு தண்ணீர் எவ்வளவு என நாம் எப்படி தெரிந்து கொள்வது? 

அது நம் ஒவ்வொருவருடைய கீழ்க்கண்ட தனிப்பட்ட சூழ்நிலைகளை பொறுத்தது.

1. உணவு பழக்கவழக்கம்

2. உடற்பயிற்சி முறைகள்

3. சுற்றுப்புற சூழல்

நார்ச்சத்து அதிகமுள்ள இயற்கை உணவான காய்கறிகள், பழங்கள், வேக வைத்த பட்டாணி வகைகள் ஆகியவற்றை உட்கொண்டால் அதிக அளவு தண்ணீர் உடலுக்கு தேவைப்படுவதில்லை. அதேநேரம், காரசாரமான மசால் நிறைந்த உணவு வகைகளை உண்ணும் பழக்கம் உள்ளவர்கள் அதிகளவு தண்ணீர் அருந்த வேண்டியுள்ளது.

உடல் பயிற்சியினாலோ இல்லை வேறு காரணங்களினாலோ வியர்வை அதிகளவு வெளியேறும் போது அதிகளவு தண்ணீர் தேவைபடுகிறது.

குளிர் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு அதிக தண்ணீர் தேவையில்லை, மாறாக வெப்ப மண்டல மக்களின் தண்ணீர் தேவை அதிகமாக இருக்கிறது.

மொத்தத்தில், நமது தாகத்தை பொறுத்து நீர் அருந்துவதே சிறந்தது. உடலின் தேவையை அறியாமல் தண்ணீரை கட்டாயப்படுத்தி உட்கொள்ளும் போது தான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. ஆனாலும் தாகமே இல்லை என்ற நிலை கூட ஆபத்தானது தான். அதனால், இத்தகைய “தண்ணீர் திணித்தலை” நம் குழந்தைகளுக்கு அளிக்காமல், அதைப்பற்றிய விழிப்புணர்வை அவர்களுக்கு ஊட்ட வேண்டியது அவசியமான ஒன்று.

“செயற்கை உணவினை தவிர்ப்போம் 
இயற்கை உணவினை ஏற்போம்”

Thursday 11 October 2012

புட்டிப்பாலும் குழந்தை வளர்ப்பும்...


2003 - நவம்பர் மாதம். அது நான் திருமணம் முடிந்து கணவர் வீட்டில் காலடி எடுத்து வைத்த மாதம். அப்பொழுது என் கணவரின் சகோதரிகளில் ஒருவரின் குழந்தையின் வயது ஆறு மாதம்.

ஒருநாள், வழக்கம் போல் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது திடீரென குழந்தை அழவே, ஏற்கனவே தயாராய் இருந்த புட்டிப் பாலை ஊட்டத் துவங்கினார் என் நாத்தனார்.

"என்ன அண்ணி, தயார் செய்த பாலை அரை மணி நேரத்தில் குழந்தைக்கு ஊட்ட வேண்டுமே, இந்த பால் கெட்டு போயிருக்காதா" என நான் கேட்க, "அதெல்லாம் ஒன்றும் ஆகாது, நான் ஏற்கனவே இப்படி தான் கொடுத்துக்கொண்டிருக்கிறேன்" என பதிலளித்து என்னை பதற வைத்தார்.

பின்னர் வந்த நாட்களில் அந்த பால் புட்டியையும், அதனுள் இருக்கும் பாலையும் கண்காணிக்க துவங்கி விட்டேன் நான்.

முதலில் அந்த பால் புட்டியை அவர்கள் கழுவிய விதம் பார்ப்போம். 

  1. குழந்தை குடித்து முடித்த பால் புட்டியை திறந்து, தண்ணீரில் கழுவாமல் அப்படியே சூடாக இருக்கும் வெந்நீரில் போடுகின்றனர். 
  2. புட்டியில் இருக்கும் பால் வெந்நீரில் கலந்து அது வெண்மையாகிறது.
  3. பின் அந்த புட்டியை எடுத்து பச்சைத்தண்ணீர் விட்டு அலசுகின்றனர்.
  4. புட்டிப்பால் சுத்தப்படுத்துதல் சுபம்.
இனி அவர்களின் பால் தயாரிப்பு முறை பற்றி பார்க்கலாம். 
  1. தண்ணீரை நன்றாக சூடாக்குகிறார்கள்.
  2.  அது கொதித்ததும் குறைந்த அளவு பால் பவுடரை (பால் பவுடர் விலை ஜாஸ்தி, எனவே அதை சிக்கனமாக  (?) பயன்படுத்துகிறார்களாம்) போட்டு நன்றாக நுரை வர அடித்து ஆற்றுகிறார்கள். 
  3. பின் அதனை முன்பே கழுவி எடுத்து வைத்த புட்டியில் அடைத்து வைத்து விடுகின்றனர். 
  4. எவ்வளவு நேரமானாலும் பால் முழுவதையும் குழந்தை குடித்து முடித்த பின்பே மறுபடி புட்டியை கழுவ தயாராகிறார்கள். 
இத்தகைய புட்டிப்பால் புகட்டலை என் உறவினர் மட்டும் தான் செய்தாரா? 

கண்டிப்பாக இல்லை...!

நம்மில் பெரும்பான்மையானோர் இதை தான் செய்துக் கொண்டிருக்கிறோம். 
அதிகம் படிக்காத, கிராம சூழ்நிலையில் வளர்ந்த என் நாத்தனாராவது பரவாயில்லை, இன்று படித்த, நகரத்து சூழ்நிலையில் வளர்ந்த அன்னையரும் கிட்டத்தட்ட இதை தான் செய்துக் கொண்டிருக்கின்றனர். 

சரி, இனி புட்டிப்பால் தயாரிக்கும் சரியான முறையை பார்க்கலாம். 

பால் புட்டி கழுவும் முறை:
  1. குழந்தைக்கான புட்டிப்பால் தயாரிக்கும் முன்பு கைகளை நன்றாக சுத்தம் செய்துக் கொள்ளவும். 
  2. குழந்தை குடித்து முடித்த புட்டியை (பாகங்கள் பிரித்து), அதிலிருக்கும் பால் முற்றிலும் நீங்கும் வரை தண்ணீரில் கழுவவும்.
  3. பின்னர் அவற்றை வெந்நீரில் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். 
  4. பயன்படுத்தும் வரை புட்டியை அப்படியே வெந்நீரில் போட்டு மூடி வைக்கவும். 
புட்டிப்பால் தயாரிக்கும் முறை:
  1. தண்ணீரை ஐந்து நிமிடம் நன்றாக கொதிக்க விடவும்.
  2. உங்கள் குழந்தையின் தேவைக்கேற்ப கொடுக்கப்பட்ட அட்டவணையில் இருந்து அளவான தண்ணீரை தெரிந்துக் கொள்ளவும்.
  3. தண்ணீரை நன்றாக ஆற்றி, மிதமான சூட்டில் தேவையான அளவு பால் புட்டியில் விட்டுக்கொள்ளவும்.
  4. அட்டவணை பார்த்து, தண்ணீருக்கு தேவையான அளவு பால் பவுடரை புட்டியில் போடவும். 
  5. புட்டியை நன்றாக மூடி, பால் பவுடரையும், தண்ணீரையும் கலரும் படி குலுக்கவும். 
  6. உடனடியாக குழந்தைக்கு புகட்டவும். 
  7. அரைமணி நேரம் வரை அந்த பாலை பயன்படுத்தலாம்.

இதில் பலருக்கும் வரும் சந்தேகம்:
  1. பச்சை மாவை நன்றாக அவித்து தானே குழந்தைக்கு கொடுக்க வேண்டும்? இல்லையென்றால் குழந்தைக்கு ஜீரணம் ஆகாதே...!
  2. அரைமணி நேரம் தாண்டி ஏன் அந்த பாலை பயன்படுத்த கூடாது? காசு விரயம் ஆகுமே?
இதோ விளக்கம்:
  1. உங்கள் குழந்தை உணவு மிக மிக பாதுகாப்பாக சுத்தமான முறையில் செரிவூட்டப்பட்டே தயாரிக்கப்படுகிறது.
  2. குழந்தைக்கு தேவையான புரத சத்தும், விட்டமின் சத்துக்களும், ஏனைய தாதுக்களும் கலந்தே அது தயாரிக்கப் படுகிறது. 
  3. கொதிக்கும் வெந்நீரில் அதை ஆற்றினால் அதில் இருக்கும் அத்தனை ஊட்டச் சத்துக்களும் சூட்டில் அழிந்து போகின்றன. 
  4. எனவே அப்படி தயாரிக்கப்பட்ட புட்டி பால், சத்துக்கள் ஏதுமில்லாமல் வலுவிழந்து போகின்றது. 
  5. புட்டி பால் தயாரிக்கப்பட்ட அரைமணி நேரத்தில், பாக்டீரியாக்கள் அதில் வளர ஆரம்பிக்கின்றன. 
  6. பால் பவுடரில் இருக்கும் ஊட்ட சத்துக்கள் அவற்றுக்கு சிறந்த தீனியாகி, இந்த பாட்டீரியாக்கள் பல்கி பெருகுகின்றன. 
  7. இந்த பாக்டீரியாவினால் குழந்தையின் உடலுக்கு தீங்கு ஏற்படுகிறது (உதாரணம்: வயிற்றுப்போக்கு).
எனவே, குழந்தைக்கு புட்டிப் பால் புகட்டும் தாய்மார்கள் கண்டிப்பாக அவர்கள் பயன்படுத்தும் பால் பவுடர் அட்டை மேல் இருக்கும் விபரங்களை தெளிவாக படித்து அதன் படி நடந்துக்கொள்ள வேண்டும். 

எல்லாவற்றிக்கும் மேலாக தாய்ப்பால் இருக்க புட்டிபாலின் அவசியம் எதற்கு என்றும் சிந்திக்க வேண்டும். 


Saturday 6 October 2012

மரியாதைக்குரிய ப்ரின்சிப்பாலும் அவர் மகளும்

சற்று ஓய்வாக இருக்கும் தருணங்களில் நாம் கடந்து வந்த பாதைகளின் நினைவுகள் நம் நினைவுக் குதிரையில் பயணிக்க தான் செய்கின்றன. அந்த நினைவுகளோடு பயணிக்கையில் எப்பொழுதுமே பல சுவாரசிய சம்பவங்கள் நம்மை கடந்தே செல்கின்றன. அவ்வாறு அவற்றை கடக்கும் பொழுது நமது இதழ்கள் சிறு புன்னகையை சிதற விடுவதை யாராலும் மறுக்க முடியாது. 

1995 - ம் வருடம். அப்பொழுது தான் பள்ளி வாழ்வு முடித்து கல்லூரி வாழ்வில் காலடி எடுத்து வைக்க வேண்டும். அப்பொழுது என் தந்தை கன்னியாகுமரி மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு யூனியன் தலைவராக இருந்த தருணம். 

எப்படியாவது இங்கிலீஷ் லிட்டிரேச்சர் படித்து, பின் பி.எல் படித்து ஒரு வக்கீலாகி விட வேண்டும் என்று குறிக்கோள் கொண்டிருந்த தருணம். என் தந்தை "நீ கூட்டுறவு துறையில் சிறந்த ஒரு வக்கீலாக வரலாம்" என்ற ஆசை வார்த்தைகள் கூறி என்னை கூட்டுறவு சார்ந்த பட்டயப் படிப்பான "டிப்ளமோ இன் கோஆப்பெரேடிவ் மானேஜ்மென்ட்டில் (D.Co-op) சேர்த்து விட்டார். 

அதுவரை வீட்டிலிருந்து பள்ளி, பள்ளியிலிருந்து வீடு என ஒரு கூட்டுப்புழு வாழ்க்கை வாழ்ந்த நான், கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து திருநெல்வேலி மாவட்டம் சென்றடைந்தேன்.

பனிரெண்டாம் வகுப்பு வரை மெட்ரிக்குலேசனில் படித்த எனக்கு அங்கு எல்லா பாடங்களும் தமிழில் இருந்தது கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் ஒரு மலைப்பை உருவாக்கி விட்டது. சம்மந்தமே இல்லாத அக்கவுண்டன்சியும் எக்கனாமிக்ஸ்சும் என்னை பார்த்து ஏளனமாய் சிரிப்பது போலவே தோன்றும் எனக்கு.

அத்தனை வேப்பம்பூ கசப்பான பாடங்கள் மத்தியில் எனக்கு பிடித்தது "மேனேஜ்மன்ட் லா" மட்டுமே. அதை மட்டுமே கொஞ்சம் சுவாரசியமாய் கற்றுக்கொண்டேன். ஒரு வருங்கால லாயருக்கு மிகவும் தேவையான சப்ஜெக்ட் அல்லவா...!

அப்பொழுது எங்களுக்கு "மேனேஜ்மன்ட் லா" எடுத்தது எங்கள் இன்ஸ்டிடியூஷன் ப்ரின்சிபால். எப்பொழுதாவது மட்டுமே வகுப்புக்கு வரும் அவர் எப்பொழுதும் எங்களிடம் கேள்விகள் கேட்டு பதிலை எதிர்பார்ப்பது வழக்கம். பதில் தெரியவில்லை என்றால் புத்தகம் பார்த்து பதிலளிக்கலாம். அப்படியாவது ஒரு கேள்விக்கான விடையை மாணவர்கள் தெரிந்து கொள்வார்கள் என்பது அவர் எண்ணம்.

அவருடைய அந்த நடைமுறை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருந்தது. பின்னாளில் நானும் ஒரு கல்லூரி பேராசிரியையாக மாறிய தருணம் அவர் வழியையே என் மாணவர்களிடத்து பின்பற்ற துவங்கினேன்.

சரி, 1995-ம் வருடத்திற்கு திரும்புவோம். எங்கள் முதல்வர் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பெரும்பாலும் சரியாக பதிலளித்து விடுகிற நான் அவர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் தெரியாமல் புக் திறந்து வாசித்து பதிலளித்தேன்.

அவரோ நான் உன்னை புக் பார்த்து பதில் சொல்ல சொல்லவில்லையே என கேட்க, எப்படியும் அதை தானே சொல்ல போகிறீர்கள் என்று நானும் பதில் சொல்ல, உன் பெயர் என்ன? ஊர் என்ன? அப்பா பெயர் என்ன? ப்ளஸ் டூ எங்கு படித்தாய் என அடுக்கடுக்காக கேள்விகளை அடுக்கி கொண்டே சென்றார்.

நானும் பெயர், ஊர், சொல்லி விட்டு அப்பா பெயர் ஸ்ரீதரன், படித்தது குட் ஷெப்பர்ட் மெட்ரிகுலேசன் பள்ளி என்றேன்.

அட, நீ தலைவரோட பொண்ணா என அவர் கேட்க, இல்லை, அவர் தான் என் அப்பா என்று நான் சொன்னதைக் கேட்டு அப்படியே உன் அப்பாவின் அதிகார தோரணை உன்னிடம் இருக்கிறது என்றவாறே சென்று விட்டார்.

மேலும் மூன்று நாள் கழித்து, சனி, ஞாயிறு விடுமுறை முன்னிட்டு சொந்த ஊரில் ஓய்வில் இருக்கும் போது ஒலித்த ஒரு போன் காலை எடுத்து காதில் பொருத்தி ஹெல்லோ என்றேன்.

எதிர் முனை: ஜீவா இருக்காளா?
நான்: நான் தான் பேசுறேன், நீங்க?

அவள் பெயரை கேட்டதும் அவள் என் பனிரெண்டாம் வகுப்பு சக மாணவி என்பதை புரிந்துக் கொண்டேன். அதிகம் பரிட்சயம் இல்லாத அவள் எனக்கு போன் பண்ணியதை கண்டு வியந்து கொண்டே, "என்ன விஷயம்" என வினவினேன்.

"இப்போ என்ன படிச்சுட்டு இருக்க?" அவளின் கேள்விக்கு பதிலளித்ததும், "உங்கள் ப்ரின்சிபால் சரியான முசுடாமே, தொனதொனனு கேள்வி கேட்டு சாகடிப்பாராமே" என்ற அவளின் கேள்விக்கு பதிலாக, அதெல்லாம் ஒன்றுமில்லை, அவர் நடத்தும் பாடம் எனக்கு பிடிக்கும்" என பொதுவாக பதிலளித்தேன்.

"சரி சரி, அவரை நான் ரொம்ப கேட்டேன்னு சொல்லு, ஏன்னா அவர் தான் என் அப்பா" என்றவாறே தொடர்பை துண்டித்து விட்டாள்.

அதன் பின், அவள் நம்பர் தெரியாததால் என்னால் அவளோடு பேச முடியாமலே போய் விட்டது. அவளை பற்றிய எந்த தகவலும் இன்று வரை எனக்கு கிடைக்கவே இல்லை. ஏனோ அவளை பற்றி அறிய ஆர்வமும் இல்லாமலே நாட்கள் வருடங்களாக மாறி, கரைந்து கொண்டே சென்று விட்டது.

அதன் பின், அந்த ஒரு வருட வாழ்க்கை என் நினைவுகளோடு மட்டுமே ஐக்கியமாகி போக, நானோ விலங்கியலோடும் பின் நுண்ணுயிரியலோடும் கலந்து போனேன். நுண்ணுயிரியல் துறை என்னை விடாப்பிடியாய் பிடித்துக் கொள்ள, கல்லூரி விரிவுரையாளராய் பின்பு அதே துறை தலைவராய் வாழ்க்கை சக்கரம் உருண்டு கொண்டே இருக்கிறது.

சில நிமிடங்களே நினைவில் நின்ற என் மரியாதைக்குரிய ப்ரின்சிப்பாலும் அவர் மகளும் அந்த நிமிட உணர்வுகளை மகிழ்ச்சியாய், ஒரு புன்னகையை சிதற விட்டு மறைகின்றனர்.

மற்றுமொரு நினைவுகளோடு மீண்டும் சந்திக்கிறேன்...


Saturday 29 September 2012

சுவாரசிய வாழ்க்கை - சில சவுகர்யங்களும் சங்கடங்களும்



அன்றாடம் நம் வாழ்வில் சந்திக்கும் நபர்கள் என்பது வேறு. அவர்களின் குணாதிசயங்கள் பற்றியோ நடவடிக்கைகள் பற்றியோ நாம் அதிகம் கவலைப்படுவதாக இல்லை. அதே நேரம், நம்மோடு கூடவே தொடர்ந்த/தொடரும் நபர்களின் நடவடிக்கைகள், அவை சுவாரசியமாகவோ இல்லை அசவுகர்யமாகவோ இருந்தால்???

நான் சந்தித்த என் நண்பர்கள் மற்றும் தோழிகள்: 

 (இங்கு நான் எதையும் விவாதிக்கவோ விளக்கவோ முனையவில்லை, அதனை வேறொரு தனிப்பதிவில் வைத்துக் கொள்ளலாம். எனது அன்றைய அனுபவம் மட்டுமே இப்பதிவில் பதிய நினைக்கிறேன்)  

கல்லூரியில் அப்பொழுது தான் வகுப்பறை சென்று விட்டு வந்து அமர்ந்த நேரம், என் அலைபேசி யாரோ என்னை அழைகின்றனர் என்று மவுனமாய் எடுத்துரைத்தது. திரையில் மின்னிய எண் புதிதாய் தெரியவே சற்று அசுவாரசியமாய் ஹெல்லோ என்றேன். எதிர்முனை "ஜீவா நான் தான்டா" என்றது.

அது என் நண்பனின் குரல். சரியாக பத்தொன்பது ஆண்டுகள் பின்னோக்கி பார்த்தால் அவன் என் பத்தாம் வகுப்பு சக தோழன்.

''எனது பெண் பூப்பெய்தி விட்டதால் வரும் வெள்ளிக் கிழமை அதற்கான விழா வைத்திருக்கிறேன், நீ அவசியம் வந்து விடு'' என்றான்.

எனக்கு அதிர்ச்சி. இருபத்தி இரண்டு வயதில் அவனுக்கு திருமணம் முடிந்து விட்டிருந்தாலும் அவன் மகள் சிறியவளாக தானே இருப்பாள்? ''அவள் வயதென்ன" என்ற கேள்வியை என்னால் தவிர்க்க முடியவில்லை.

''பத்தரை வயது'' என்ற அவன் பதில் என்னை ஆழ்ந்து பெருமூச்சு விட வைத்தது. எட்டு வயது நிரம்பிய என் மகள் கண் முன் வந்து சென்றாள்.

விளையாட்டுத்தனமும் அறியாமையும் விட்டு அகலா இந்த பச்சை குழந்தைகளின் இத்தகைய அசாதாரண வளர்ச்சிக்கு காரணம் என்ன?

1. பெருகி வரும் பாஸ்ட் பூட் கலாசாரம் 
2. அறிவியல் வளர்ச்சியினால் மாறி வரும் மனநிலை 

இந்த குழந்தைகளின் அசாதாரண வளர்ச்சி இன்று ஒரு சர்வ சாதாரண நிகழ்வாய் பெருகி விட்டிருந்தாலும், இவர்களை வைத்து சடங்கு, சம்பிரதாயம் என்ற கோட்பாடுகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த பச்சிளம் குழந்தைகளை அலங்கார பதுமைகளாக மாற்றி அவர்களை ஊருக்கு அடையாளம் காட்ட வேண்டிய அவசியம் தான் என்ன?

சரி, நண்பன் அழைத்து விட்டான், சென்று வரலாம், இருபது வருடம் கழித்து சில நண்பர்களை சந்திக்கலாமே என்ற எண்ணம் மனதில் தோன்ற சென்று வருவது என முடிவு செய்தேன். 

அங்கு சென்றதும் ஏதோ வர கூடாத இடத்திற்கு வந்து விட்டோமோ என்று எண்ண வைக்கும் படியான சூழ்நிலை எனக்கு தோன்ற ஆரம்பித்தது. ஒரு சிறு பெண்ணை வைத்து நடத்தப்படும் இத்தகைய சடங்குகள் தேவை தானா? அதை நானும் ஊக்குவிக்கிறேனா? 

 நிற்க கூட முடியாமல் மிகவும் தளர்ச்சியாக தோன்றிய அவள் தன்னை ஆசிர்வதித்தவர்களை புன்னகையோடு எதிர் கொண்ட விதம் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.  இன்றைய இளைய தலைமுறையினருக்கு இத்தகைய சகிப்பு தன்மை எங்கிருந்து வருகிறது?

ஒரு முதிர்ந்த பெண்ணை போல் மற்றவர்களுடன் புன்னகைத்த அவள், அவள் தந்தையிடம் மட்டும் சற்று உரிமையாக கைபிடித்து நின்றுக் கொண்டாள். தளர்ந்து போய் உக்கார நினைக்கும் அவளிடம் என் நண்பன் (அவளது தந்தை) அரவணைப்போடு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான். 

என்னதான் எனக்கு இதில் உடன்பாடு இல்லையென்றாலும் அவர்கள் இருவரின் பாசப்பிணைப்பு என்னை ஆச்சர்ய பட வைத்தது என்னவோ உண்மை. தந்தையின் மனதறிந்து மகளும், மகளின் நிலை அறிந்து தந்தையும்... நெகிழ்ச்சியோடு கூடிய அட்ஜஸ்ட்மென்ட் இருவர் கண்களிளுமே மிளிர்ந்தது. 

வரிசையில் நின்று ஒரு வழியாக அந்த சிறு பெண்ணை நல்லா இரு (வேறு என்ன சொல்வது என அந்த நேரத்தில் தோன்றவில்லை) என ஆசிவதித்து விட்டு நண்பனை பார்த்து புன்னகைத்தோம்  நானும் என் கணவரும்.  எங்களை கண்ட அவன், எங்களை சாப்பிட அழைத்து சென்றான். 

அங்கே சாப்பிட்டு கொண்டிருந்த ஒரு பெண்ணை அழைத்து, யார் என தெரிகிறதா என வினவ, நானோ நெற்றி சுருக்கி அவளை நினைவில் நிறுத்த முயன்று தோற்று கொண்டிருக்க, அவளுக்கும் அதே நிலைமை. பின் எங்கள் பெயர் சொல்லி நண்பன் அறிமுகபடுத்த ஆச்சர்யத்தோடு ஒருவரை ஒருவர் கைகுலுக்கி கொண்டோம். அவள் எங்கள் எட்டாம் வகுப்பு தோழி. 

பரஸ்பர நலவிசாரிப்புகளுக்கு பின், என் குழந்தைகள் பற்றி அவள் விசாரித்தாள். என் இரட்டை குழந்தைகள் பற்றி முன்பே அறிந்திருந்த அவளை பற்றி நான் எதுவும் அறிந்து வைத்திருக்கவில்லை என்பது எனக்குள் கொஞ்சம் வேதனையை தந்தது. அவள் இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கிறாள் என்று அறிந்த உடன் மனம் ஏனோ விரக்தியாய் பெருமூச்சு விட்டுக் கொண்டது. 

பெண்ணீயம் பற்றி அதிகமாக யோசிக்கும் நான் ஏன் அவள் திருமணமாகவில்லை என்று சொன்னதும் வருத்தப்பட வேண்டும்? அப்படியென்றால் ஒரு பெண்ணுக்கு திருமணம் அத்தனை முக்கியமானதா? கேள்விகள் தொக்கி நிற்க சாப்பிட ஆரம்பித்தேன் நான்.

சாப்பிட்டு முடிக்கும் முன் மற்றுமொரு அறிமுகம். இவள் என்னை கண்டதும் ஓடி வந்து கைப்பிடித்துக் கொண்டாள். அவளை சட்டென அடையாளம் கண்டு விட்ட நானும் அவளை பற்றிக் கொண்டேன். 

அவளது சந்தோசம் என்னையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. என் குழந்தைகள் பயிலும் பள்ளியிலேயே அவள் குழந்தைகளும் படிப்பதாக கூறியது இன்னும் ஆச்சர்யம். என்னைப் பற்றி எதுவும் தெரிந்து வைத்திருக்காத அவள், தான் ஒரு கல்லூரியில் அட்மினிஸ்ட்ரேசனில் பணியாற்றுவதாக கூறினாள். பின் விடைபெற தயாராக இருந்த அவளிடம் என் கணவர் என்னை அறிமுகப்படுத்த நினைத்து இவளும் கல்லூரியில் பணியாற்றுகிறாள் என்ற உடன் அவளுக்கு ஆச்சர்யம். 

எனது நிலைமையும், உடலையும் பார்த்து அவள் நான் குடும்ப தலைவியாக தான் இருக்க வேண்டுமென்று முடிவு எடுத்து விட்டாளோ என்னமோ? நான் கல்லூரி விரிவுரையாளர், அதுவும் ஒரு துறையின் தலைமை பொறுப்பில் இருக்கிறேன் என்றதும் மீண்டும் அவளிடம் ஆச்சர்யம். கல்லூரிக்கு நானே காரில் சென்று விடுவேன் என்றதும் அடுத்தக்கட்ட அதிர்ச்சி அவளுக்கு. என் கன்னம் பிடித்து செல்லம் கொஞ்ச ஆரம்பித்து விட்டாள் அவள். 

ஒருவழியாக வீடு திரும்பிய நான் யோசித்துக் கொண்டேன். எத்தனை வருடங்கள் நட்புக்களை பிரிந்து இருந்து விட்டேன். வாழ்க்கை சுழற்சி என்பது எப்படி எல்லாம் நம்மோடு சேர்த்து நம் மனங்களையும் புரட்டிப் போட்டு விடுகிறது. 

இத்தகைய பூப்புனித நீராட்டு விழா தேவை தானா என்ற என் கேள்விக்கு நிச்சயம் என் மகளுக்கு தேவையில்லை என்ற பதில் மட்டுமே என்னால் கொடுக்க முடிந்தது. அதுவும் தற்காலிகமானதே. கணவர் மற்றும் உறவுகளின் வற்புறுத்தல்களுக்கு நான் பணிந்து போவேனோ என்னவோ?

எப்படியாயினும்  என் முந்தைய பதிவில் தான் என் எட்டாம் வகுப்பு நண்பர்களை பற்றி எழுதி இருந்தேன், இப்பொழுது அவர்களில் நான்கு பேரை சந்தித்து விட்ட மகிழ்ச்சி. ஆனாலும் அதில் நான் சொல்லாமல் விட்ட நண்பன் ஒருவன் என்னை பார்த்தும் பாராமுகம் காட்டியபடி சென்று விட்டான். மனங்களில் தான் எத்தனை நிறங்கள். நண்பர்களோடு இணைந்திருந்த காலங்களில் இருந்த பூரிப்பும் பரவசமும் இப்பொழுது ஏனோ குறைவது போன்றே தோன்றுகிறது.

எங்களுக்குள் பரிமாறிக் கொண்ட அலைபேசி எண்கள் இன்னமும் அழுதப்படாமலே விரல்களின் ஸ்பரிசதிற்காக காத்துக் கிடக்கின்றன.

சரி, வீட்டு வேலை அப்படியே இருக்கிறது, குழந்தைகளை கவனிக்க வேண்டும், அவர்களின் சண்டைகளை நானும் அனுபவிக்கவேண்டும். இனி ஒரு பதிவில் சந்திக்கிறேன். 


Thursday 27 September 2012

அன்னையை கண்டேன்....


May 8, 2011 அன்று எதேர்ச்சையாக என் கல்லூரி ஜூனியரும் தற்போதைய சக பேராசிரியையுமான பாக்கிய லெட்சுமியின் முகநூல் சுவரை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது... அங்கு அவளின் தோழியும், எனது ஜூனியருமான பால சுந்தரியின் செய்தி ஒன்றை படித்தேன்......

அந்த செய்தி:

சென்னை “Dr.K.M.Cherian Heart Foundation” பணி புரியும் அவள் கடந்த ஏப்ரல் 26ல் அதிகாரப்பூர்வமாக ஒரு பெண் குழந்தையை தன் மூன்றாவது குழந்தையாக தத்தெடுத்துள்ளாள். அக்குழந்தை 34 வார குறைமாத குழந்தையாக ஒரு திருமணம் ஆகாத 22 வயதான பெண்ணிற்கு ஏப்ரல் 24 ல் பிறந்திருக்கின்றது. ஏற்கனவே அந்த குழந்தையை கருவிலேயே அழிக்கும் முயற்சியில் ஈடுபட்ட அந்த தாய், தனக்கு அந்த குழந்தை வேண்டவே வேண்டாம் என்று தனக்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவரிடம் திட்டவட்டமாக மறுத்திருக்கிறாள். அந்த பெண்ணின் மருத்துவரின் கீழ் தனது ஆராய்ச்சி படிப்பை (Ph.D) தொடரும் பால சுந்தரி, அந்த மருத்துவரிடம் அக்குழந்தையை எந்த பாதிப்பும் இல்லாமல் (குறைமாத குழந்தைகளுக்கு அதன் சுவாச உறுப்பு (lungs) சரிவர வளர்ச்சி அடையாத நிலையினால் ஏற்படும் மூச்சடைப்பு) பிரசவிக்க செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளாள். தானே முன்நின்று பிரசவத்தில் உதவியதோடு அந்த குழந்தையின் முதல் அழுகையை உணர்வுபூர்வமான மகிழ்ச்சியோடு வரவேற்றிருக்கிறாள். அக்குழந்தையை இழக்க விரும்பாத அவள், தனது கணவர் மற்றும் குடும்பத்தார் அனைவரின் எதிர்ப்புகளையும் எதிர்த்து கண்ணீரோடு போராடி இருக்கிறாள். ஏற்கனவே ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைக்கு தாயான அவள் தன் போராட்டத்தில் வெற்றி பெற்றதோடு அதிகாரபூர்வமாக அக்குழந்தையை தத்தும் எடுத்துள்ளாள். குறைமாத குழந்தையான அக்குழந்தையை கனிவோடு கவனித்து தற்போது முழு ஆரோக்கியத்தோடு அக்குழந்தை அவள் வீட்டில் வளர்ந்து வருகிறது. அக்குழந்தையை வெறுத்த அவள் வீட்டாரும் தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக மனம் மாறி வருவதோடு அவள் மகளும் அக்குழந்தையை தனது மடியில் வைத்து ஆசையோடு கொஞ்சுவதாக மகிழ்கிறாள். மேலும் தம்பி தான் வேண்டும் என்று அடம்பிடிக்கும் தன் மகன், அக்குழந்தையையை திரும்பிக்கூட பார்க்காமல் இருக்கும் நிலை மாறி அவளை தன் தங்கையாக விரைவில் ஏற்று கொள்வான் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளாள். தன் வாழ்நாளின் மீதி நாட்களில் அவளின் இந்த குட்டி தேவதையை பாதுகாப்பதாக உறுதியும் எடுத்துள்ளாள்.

இந்த அன்னையர் தினத்தில் இரு வகையான தாயை எனக்கு காட்டிய இறைவனுக்கு நன்றி. பால சுந்தரி மாதிரியான தாய் இருப்பதால் தான் இன்றும் நம் தேசம் அன்புக்கு இலக்கணமாய் திகழ்கிறது. இவளை பாராட்ட என் மனதில் வார்த்தைகள் இல்லை. கனத்த இதயத்தோடு அவளுக்கு என் நன்றி......

----- ஜீவா. எஸ் ------



புரட்டி போட்ட நட்பு...


நண்பர்கள் என்றால் வேப்பம்பூ கசப்பாய் இருந்தது என் குழந்தை பருவம். அதிலும் பசங்க என்றால் கேட்கவே வேண்டாம், அவர்கள் பக்கம் திரும்புவது கூட கிடையாது. ஏனோ தனிமை மட்டுமே எனக்கு உற்ற தோழியாய் இருந்தது. யாரிடமும் பேசுவதில்லை, ஒரே ஒரு தோழி, அவளும் பல சமயம் பராமுகம் தான், நான் பேசினால் தானே அவளும் பேசுவாள், தவறு என்மேல் தான்.

மீண்டும் அதே பள்ளியில் தொடரமுடியா வண்ணம் அங்கு அதற்குமேல் வகுப்புகள் அங்கு இல்லை. எனவே வேறு பள்ளியில் எட்டாம் வகுப்பில் அடியெடுத்து வைத்தேன்.

முதல் நாள் பள்ளி வாகனத்தில் வைத்து என் முதல் தோழி அறிமுகம் ஆனாள். வகுப்பறையில் நுழைந்தவுடன் அதிர்ச்சி. அவள் அதிகம் சென்று உரையாடியது மாணவர்களிடம் தான். அவள் என்னை தோழியாக அறிமுகபடுத்தியதால் என்னையும் சூழ்ந்து கொண்டனர் அவர்கள். கைகுலுக்க நீட்டிய அவர்களின் கை பார்த்து பின்னால் ஒளிந்த என் கை வலுக்கட்டாயமாக குலுக்கப்பட்டது.

பின்வந்த நாட்கள் சற்று பதற்றம் நிறைந்ததுதான். தினமும் எங்களுக்கு வாசலில் வரவேற்பு. என் தோழியோ அவர்களோடு ஒன்றி விடுவாள். தனித்திருக்கும் நான் அவர்களுக்கு பொழுதுபோக்காகி விடுவேன்.

என் முன்னால் இருக்கும் இருக்கையில் என்னை நோக்கி அமர்ந்தபடி என் முகத்தையே பார்த்து கொண்டிருப்பான் ஒருவன், ஏண்டா இப்படி செய்கிறாய் என்று கேட்டால் நீ சிரித்தால் அழகாய் இருக்கிறாய், உன் சிரிப்பை காண தவமிருக்கிறேன் என்பான். என் உள்மனதில் மிகப் பெரிய யுத்தம் நடந்து கொண்டிருந்தது.

 யாரிடம் இதை சொல்லி அழுவது என்று அந்த வயதில் எதுவும் புரியவில்லை. அதே நிலை மேலும் பத்து நாட்கள் நீடிக்கவே, கவலையோடு வீட்டுக்கு வந்தேன். வீட்டில் அப்பா வேறு என்னை திட்டவே வேதனையோடு என் அறையில் சென்று அமர்ந்தேன்.

இனியும் நான் உயிர் வாழ தான் செய்யணுமா? ஏன் இறைவா என்னை சோதிக்கிறாய் என்று அதுவரை வணங்காத தெய்வத்திடம் முறையிட்டேன். இனியும் நான் வாழ்வது சரியில்லை என்று முடிவு மனதில் விஸ்வரூபம் எடுத்தது.

எங்கள் வீட்டு கழிவறையில் ஆசிட் இருப்பது நினைவு வர ஒரு முடிவோடு ஓடி சென்று கழிவறை கதவை மூடினேன். பின்னாலேயே ஓடி வந்த என் தாய் தடுப்பதற்குள் ஆசிட் என் வாய்க்குள், பின் வயிற்றுக்குள்.

ஒருவாரம் கஷ்டப்பட்டு காப்பாற்றப்பட்ட நான் அம்மாவிடம் நடந்தவைகளை கூறி அழுதேன், அம்மா சிரித்து கொண்டே சொன்னார்கள், உன் வகுப்பு தோழர்கள் தானே, அவர்கள் சிரிக்க சொன்னால் சிரித்து விட்டு போ, அதனால் உனக்கு எந்த பாதிப்பும் வரபோவதில்லை என்று.

மீண்டும் அதே பள்ளி. தனிமையில் அமர்ந்தபடி எதையோ வெறித்து கொண்டிருந்த என் தோள்களில் நான்கைந்து கைகள். என் தோழியும், கூடவே அவள் தோழர்களும். என் கைகளை பற்றியபடி என் காலருகே அமர்ந்து கொண்டனர். சற்று நேரம் யாரும் பேசவில்லை. அவர்கள் கண்களில் கண்ணீர்.

உன்னை வேதனை படுத்த நாங்கள் உன்னை கிண்டல் பண்ணவில்லை. நிஜமாகவே நீ சிரித்தால் அழகாக இருக்கிறாய். நீ என்றும் சிரித்து கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை, எங்களை மன்னித்து விடு என்று கண்களில் கண்ணீரோடு கலங்கி நின்றனர்.

மறுநாள் என்னை பார்த்தவுடன் தலைகுனிந்து ஒதுங்கி செல்லும் அவர்களை பார்த்து முதல்முதலாக சிரிப்பு வந்தது. அந்த சிரிப்பு என் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க போவதை அறியாமலே அவர்களை பார்த்து மீண்டும் புன்னகைத்தேன்.

அன்று ஆரம்பித்த புன்னகை, பின் கிண்டல், கலாட்டா, பக்கத்து பள்ளி மாணவர்களுடன் அடிதடி சண்டை, பள்ளி முதல்வரின் தண்டனை, பெற்றோர்களிடத்து புகார், எங்களுக்காக வாதாடிய பெற்றோர் என்று மறக்க முடியாத நினைவுகளை தன்னுள் புதைத்து கொண்டது. நண்பர்கள் இல்லாத ஒரு உலகை கற்பனை கூட செய்து பார்க்க முடியாத ஒரு பட்டாம்பூச்சி பருவமாக அது மாறி போனது.

சிரிக்கவே தெரியாத உயிருள்ள ஜடமாய் இருந்த நான் இவர்களின் அறிமுகத்தால் என் வாழ்வை அர்த்தமுளதாக்கி கொண்டேன். பின்னாளில் நண்பன் ஒருவன் இவள் எங்கள் தோழியாய் கிடைத்ததற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் அப்பா என்று சொன்ன போது என் அப்பாவின் முகத்தில் தெரிந்த அந்த பிரகாசம் என் எட்டாம் வகுப்பு நண்பர்கள் எனக்கு கொடுத்த பொக்கிஷம்.