Pages

Sunday 21 July 2013

மவுன சாட்சிகள்...!



அது ஒரு இருட்டு கிராமம்....
வெளிச்சமிருக்கிறது, ஆனால் பச்சையம் இல்லை...!

நாசி நுழையும் காற்றோ... புழுதியோடு
கருகல் வாசத்தையும் சேர்ந்தே சுமக்கிறது...!
குழந்தைகள் இருக்கிறார்கள்,
பெண்கள் இருக்கிறார்கள்,
வாலிபர்களும் வயோதிகர்களும் கூடவே இருக்கிறார்கள்...!
ஆனால்... உடலிலோ உயிர் மட்டுமில்லை...!
அவர்களோ நடப்பவை யாவும் அறியா மவுனமாய்
கருகல் ஆடை பூண்டு கட்டையாய் கிடக்கிறார்கள்...!
ச்சே, என்ன வாடை இது?
மூக்கை பொத்தியவாறு ஒவ்வொரு அடியாய்
கவனமாய், விரைந்து கடக்கிறார்கள் பத்திரிகை வியாபாரிகள்...!

என் மதுகோப்பைகளில்...
உன் ரெத்தம் நிரம்பி வழியட்டும்...
மவுனமாய் நீயும்
எதிர்ப்பில்லாமல் மரணித்துப் போ...! வென
நெற்றிப்பொட்டை குறிவைக்கிறான் ஒருவன்...

காட்சி மாற்றம்...! அழகியல் மாறுகிறது...
மெல்லிசையும் இடையின உரசல்களோடும்...
அது ஒரு வெற்றி அறிவிப்பு விழா...!
எதிர்த்தடிக்க ஆட்களே இல்லாமல்...
இனம் அழித்து இனம் பெருக்கும்
இராஜதந்திரிகளின் அரசாங்க கோட்டையது...!
ஒவ்வொருவரின் முகத்தில் தான் என்ன ஒரு தேஜஸ்...!
அவர்களின் வெற்றிகளில் பங்கெடுத்து
கொக்கரித்து குதூகலிகின்றனர் மனித வேட்டையாடும்
அரசாங்க சுகவாசிகள்...!

இதோ இங்கே....
தொலைக்காட்சி பெட்டிகளும் இணைய தளங்களும்
அலறிக்கொண்டிருக்கின்றன...!
சும்மாவா? நாட்டை ஆளும் அதிபரின் ஜலதோஷம் அல்லவா?
பலியாகிக் கொண்டிருக்கும் கருவறைக் குழந்தைகளின்
சாம்பல்கள் மேல் ஆங்காங்கே எழுப்படுகின்றன
அவர் ஆயுள் நீட்டிப்பிற்கான பிரார்த்தனை கூட்டங்கள்...!
கோடிக்கணக்கில் அவர் உயிருக்காய்
உயிர்விட்டுக் கொண்டிருக்கும் மெழுகுவர்த்திகளோடு
கண்ணீர் உருகி தொழுகின்றனர் மக்களின் பெரும்தொகையினர்...!

திடீரென பொழியும் குண்டு மழை...
அய்யோ, அங்கே எரிந்து கொண்டிருப்பது என் சகோதரியா?
என் தாயெங்கே? தந்தையங்கே?
தனியாய் தவித்துக் கொண்டிருந்தது தனயனின் இதயக்கூடு...!
தெருவோரம் கூறுகளாக சிதறிக் கிடக்கின்றனர்...
முந்தைய நொடி வரை கூட்டமாய் உறவாடிய உறவுகள்...!
யாராவது கைகொடுங்களேன்...!
யாராவது காப்பாற்றுங்களேன்...!
கதறும் வாய்களுக்குள் அமிலம் வார்த்துச் செல்லும்
குரூர மனித நேயம்(?)...
வால் மிதித்தால் கோபம் கொண்டு சீறிபொங்கும்
பூனையின் அதிகாரம் கூட உன்னிடத்தில் இருக்கலாகாது...
என்று கொக்கரிக்கிறான் நரவேட்டை நடத்தும் வேட்டைக்காரன்...!

ஹப்பா... என்ன ஒரு பயங்கரமான கனவு அது...
கலைந்திருக்கும் கூந்தல் அள்ளி முடித்து,
இன்றைய சமையலுக்கான கோழியை அறுக்கிறேன்...
அங்கே என் கனவு கதாபாத்திரங்கள்
அடுக்கடுக்காய் சதையிழந்து கொண்டிருக்கிறார்கள்...!

அரூபமாய் ஒரு தேன்சிட்டு...!



இப்பொழுதெல்லாம் உன்னை
தொலைக்காட்சியில்
மட்டுமே காண்கிறேன்...!

கவலைகள் என்றொன்று
அறியா பருவத்தில்
படுக்கையறை ஜன்னல் வழியே
தினமும் உன் தரிசனம்...!

வேப்பங்குச்சி வாயிலிருக்க
குறுகுறுவென உன்னையே
உற்றுப்பார்த்தபடி எத்தனையோ நாள்
மலைத்துப்போயிருக்கிறேன்...

சிறுதுரும்புகள் கொண்டு
நீ கூடு நெய்யும் நேர்த்தி கண்டு
நானும் துரும்பு தேடி அலைந்த காலங்கள்...
வாழ்வின் அறியா வசந்தங்கள்...

இணையாக பறக்கும் அழகும்
இணைந்தே இசைக்கும் கீதமும்
நான் அறிந்திரா காதலுக்கு
முகவரி எழுதி செல்லும்...

ஓர்நாள் கீச் கீச் ஒலியொன்று
புதிதாய் கேட்க...
ஒரு திருடி போல் பதுங்கி
உன்னிடம் நோக்குகிறேன்...
தாயாய் உன் சேய்க்கு
உணவளித்த அழகு, என்னையும்
தாயாய் உணர்மாற்றம் செய்தது...

ஒவ்வொரு நாளும் கைநீட்டி
உன்னை தொட்டுப் பார்க்க ஆசை,
ஆனாலும் உன் சுதந்திரம் பறிபோகுமென
அன்றே கட்டிப்போட்டேன்
என் கைகளை...

கூட்டமாய் பறக்கும் நேர்த்தியும்,
பறந்து பிடித்து விளையாடும் ரசனையும்
சொந்தங்களை காதலித்துப் பாரென
பாடம் நடத்திச் சென்றது...

இன்று நீயும் இல்லை,
மனித உறவுகளின்
இணக்கங்களும் இங்கில்லை...
உன்னோடு சேர்த்து
அவைகளையும் எங்கே கொண்டு சென்றாய்?

பல்கிப்பெருகிய வளர்சிதை மாற்றம்...
ஏனோ காணா அரூபமாய்
உன்னை மாற்றி விட்டு
மனதுக்குள் வெறுமை புகுத்தி
வேடிக்கைப்பார்க்கிறது...!

இன்றும் என் ஜன்னல்கள் திறந்திருக்கின்றன...
உன்னை தாலாட்டிய மாமரம் கூட
இப்பொழுதும் அழகாய் தலையசைத்தபடி ...
கிளைகள் மட்டும் நீயில்லாத வெறுமையாய்...

உன்னை தேடிக்கொண்டிருக்கிறேன் நான்...
வாழ்வியல் மாற்றங்களால்
எதை எதையோ தொலைத்தபடி...

மாறிட வேண்டும்
ஓர் நாள் நானும் இப்படியாக..

ஊவா நாளாய் மனம்...!



மூலக்கூற்று முகில்களால் பிரசவிக்கப்பட்ட
விண்மீன் கூட்டங்கள்...

பரந்து விரிந்த பால்வெளியில்
மின்மப்பந்துகளாய் கண்சிமிட்டுகின்றன...

ஒளிகள் அடக்கி... ராட்சச கரம் விரிக்கும்
கருந்துளை நோக்கி பயணப்படுகிறது...
உள்ளிருப்பு விசைக்குள் உணர்வுகள் அடக்கி
வெடித்துச் சிதற காத்திருக்கும்
அழுத்தமான மனம் ஒன்று...

ஈரம் தேடி அலையும் நெஞ்சுக்குள்
வெற்றிடங்கள் ஈர்த்துக்கொள்ள...
கருமை சூழ்ந்து, விரக்தி ஒன்று
மொத்தமாய் குத்தகை கொள்ளத் துடிக்கிறது...

எரிகல் ஒன்று வலுவிழந்து வீழ்கிறது,
புவியிருப்பு விசைநோக்கி...
காற்றில் கரையும் அதன் கார்பன் துகள்கள்
கண்காணாமல் மறைந்து போகின்றன...

திசைகள் மறைக்கும் அமானுஷ்ய இருட்டுக்குள்
பளிச்சென வெளிச்சம் உதிர்க்கிறது,
நேர்வடக்கில் உறைந்திருக்கும்
ஒற்றை துருவ நட்சத்திரம்...

சிறுக சிறுக தேய்ந்து ஊவா நாள் காண்தல்
நிலவுக்கு மட்டுமே சொந்தமுமில்லை...
பின் பிறைவிட்டு பவுர்ணமி காண்தல்
சொற்பக்கால மனித வாழ்விலும் புதியதல்ல...

கொதிக்கும் ஆழ்மனம் அடங்கத் துவங்க
அடுத்த நிலைக்கு பயணிக்கிறது உள்ளுணர்வு...
பீடிக்க துவங்கிய கிரகணம் ஒன்றோ
விடியலை கொஞ்சம் கொஞ்சமாய்
விடுவித்துக் கொண்டிருக்கிறது...

பெண்ணீயம்



மனம் விரும்பும் தனிமை கூட கிடைப்பதில்லை
ஆழ்மன அடிவாரத்தில் கூடாரமிடும்
முகவரி இல்லா முகாரி ராகமொன்று
வெளிவர துடித்து அடங்கி வீழ்கிறது....

தனக்கென ஏதுமில்லா
எல்லாம் நிறைந்த வாழ்க்கை…
அறியாமலே வாழ்ந்து வீழ்வது
பிறந்த பிறப்பின் மேல் எழுதப்பட்ட சதி...

நாட்களின் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை
விடியலில் சுறுசுறுப்புக்கும் குறைவில்லை...
அழகாய் தான் தோன்றுகிறது வாழ்க்கை...

காலில் கட்டிய சக்கரமாய்,
தலைமை தாங்கும்
ராணுவ வீரனின் மனநிலை...
இங்கு நானின்றி ஓரணுவும் அசையாதென
மார்த்தட்டிக் கொள்கிறது...

உனக்கு என்ன தெரியும் என்ற கேள்வியை
ஆம், எனக்கு ஒன்றும் தெரியாது
என விடை காணும் மனம்....

சுதந்திரம் என்பது எதுவரை?
தாண்டி விட துடிக்கும் வேகத்தில்
அடிபட்டு வீழும் மனம்...
தடையாய் பிறர் கண்படா கண்ணாடி சுவர்....

அவளுக்கென்ன மகாராணி,
சொகுசு வாழ்க்கை என்பர்களுக்கு
எப்படி புரிய வைப்பது?
உள்ளுக்குள் தொலைத்துக்
கொண்டிருக்கும் தேடலை?

ஒவ்வொரு நாளின் விடியலும்
தொலைத்து விட்ட
குழந்தை மனமொன்றை தேடிக் கொண்டே,
பெண்ணீயம் மீண்டும் தன்
கூட்டுக்குள் சென்று கதவடைத்துக் கொள்கிறது...