Pages

Saturday 24 August 2013

தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியா


பாக்டீரியாக்களால் தங்கம் உருவாக்க முடியுமா???? இது நமக்கு வேண்டுமென்றால் புதுமையான கேள்வியாக இருக்கலாம், ஆனால் மேக்குயரி பல்கலைகழகத்தின் (Macquarie University) விஞ்ஞானிகள் வெனின்சுலாவில் காணப்படும் தங்க படிமானங்கள் பெரும்பாலும் பாக்டீரியாக்களால் உருவாக்கப்பட்டவை என்கின்றனர்... அதுமட்டுமில்லை இதற்கான ஆதாரத்தை ஜான்.ஆர்.வாட்டர்சன் தலைமையிலான அமெரிக்க நில ஆய்வு குழு (US Geological Survey) அலாஸ்கா மாநிலத்தில் உறுதிப் படுத்தியுள்ளது. ஜான்.ஆர்.வாட்டர்சன் அலாஸ்க்காவில் கிடைத்த தங்க துகள்களை நுண்ணோக்கியில் (scanning electron microscope) பார்க்கும் போது அது தட்டையான உருளை வடிவத்தை கொண்டிருந்தது. இத்தகைய வடிவம் பிடோமைக்ரோப்பியம் பாக்டீரியாவை (Pedomicrobium bacteria ) ஒத்திருந்தது.


அறிவியல் கூற்றின் படி தங்கம் பாக்டீரியாவின் செல் சுவரில் உள்ள நுண்துளைகளை அடைத்து அதன் உணவு சுழற்சியையும் கழிவு வெளியேறுதலையும் தடுத்து அதனை மரணமடைய செய்கிறது. பெரும்பாலான பாக்டீரியாக்கள் இரண்டாக பிரிந்தே தன் இனத்தை விருத்தி செய்கின்றன.

ஆனால் பிடோமைக்ரோப்பியம் அரும்புதல் (budding ) முறையில் இனவிருத்தி செய்கிறது. அது தன் செல்லில் இருந்து ஒரு நெடிய காம்பை உருவாக்கி, தாய் பாக்டீரியாவிலிருந்து தொலைவில் தனது புதிய பாக்டீரியாவை உருவாக்குகிறது. இந்த புதிய உயிர், இறந்து போன தாய் பாக்டீரியாவிற்கு வெளியே புதிதாக உதிக்கிறது. இத்தகைய வளர்ச்சி மிக மெதுவாகவே நடை பெறுகிறது. நமது தலைமுடியின் திண்ணம் அளவு ( சராசரி 0.1 mm) தங்கம் வளர வேண்டுமென்றால் ஒரு வருடம் ஆகிறது. (இத்தகைய வளர்ச்சியை ஜெனிடிக் இஞ்சிநியரிங் மூலம் துரித படுத்த இயலும்).

கனடாவை சார்ந்த அறிவியலாளர்கள் சிலர் உலோக தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியாவை கண்டுப்பிடித்துள்ளனர். அவர்களின் கூற்றுப்படி அவை தங்க அணுக்களை துகள்களாய் உறைய வைத்து தங்க பாளமாக மாற்றுகின்றன. டெல்ப்டியாஅசிடோவோரன்ஸ் (Delftia acidovorans) விஷத்தன்மை வாய்ந்த கரையும் தங்கத்திடம் (soluble gold) இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள தன்னை சுற்றி உலோக தங்கத்தை உருவாக்கி கொள்கிறதாம். உலோகத் தங்கம் பொதுவாக ஒப்பீட்டளவில் மந்த தன்மை வாய்ந்தது. அவற்றை நாம் ஆபரணமாக அணிந்து கொள்ளலாம். அவற்றை உரசி பருகியும் கொள்ளலாம். அதே நேரம் தங்க அயனிகள் விஷத்தன்மை ஆனவை.  தங்க அயனிகளை உலோகமாக மாற்ற காரணமான டெல்ப்ட்டிபேக்டின் (delftibactin) ஜீன்களை
  கனட அறிவியலாளர்கள் இந்த பாக்டீரியத்தில் இருந்து கண்டறிந்துள்ளனர்.




இதே மாதிரியான பழமையான தங்க பாளங்களை தென் ஆப்பிரிக்காவிலும் (2.8 பில்லியன் வருட பழமை), சீனாவிலும் (220 மில்லியன் பழமை) கண்டெடுக்கப் பட்டுள்ளது. ஆம், இத்தகைய தங்க பாளங்களை உருக்கினால் பாக்டீரியாவில் இருந்து கார்பன், கார்பன்-டை-ஆக்சைட்டாக மாறி, தூய தங்கத்தை நமக்கு விட்டுச் செல்கிறது.

சிலர், பாக்டீரியா தங்கத்தை உருவாக்குவதில்லை, மாறாக நிலத்தடி நீரில் உள்ள தங்கத்தை ஈர்த்துக் கொள்கிறது என்கின்றனர். இத்தகைய கண்டுபிடிப்புகள் தங்கச் சுரங்கங்களின் கழிவிலிருந்து மேலும் தங்கத்தை பிரித்தெடுக்க உதவும்.

நமக்கெல்லாம் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் எப்படி இந்த பாக்டீரியாக்களால் தங்கத்தை 24 காரட் அளவு தூய்மை படுத்த முடிகிறது?  இத்தகைய பாக்டீரியாக்களை அறிவியல் கூடங்களில் வளர்க்க ஆரம்பித்து விட்டால், ஒரே இரவில் பெரும்பணக்காரர் ஆகி விடலாம். இப்பொழுது நமக்கு கிரேக்க பேராசைக்காரன் மைதாஸ் தான் நினைவுக்கு வருகிறான். ஒருவேளை அவன் இந்த பிடோமைக்ரோபியமால் பீடிக்கப் பட்டிருப்பானோ? எது எப்படியோ, தங்கம் என்றாலே கலகம் தானோ? அதுவும் அளவுக்கு மீறினால்???

Sunday 4 August 2013

அக்றிணையில் ஒரு நேசம்...!


அக்றிணையில் ஒரு நேசமென
தலைப்பிட்டு காத்திருந்தேன்
கவியொன்று படைக்க...!

கண்முன் வந்து சென்றது
நேற்று தெருவோரம்
பார்த்த பூனைக்குட்டி...!
மியாவ்வென மிழற்றியபடியும்
அகதியாய் இருப்பிடம் தேடியபடியும்...!

ஆசையாய் அணைத்துக் கொண்டே
அதற்கோர் ஆதரவை
வேண்டிய ஆசை மகள்
மனம் கலங்கலாகாதென
தலையசைத்திருந்தேன் நானும்...!

கண்டெடுத்த பூனைக்குட்டி
காணாமல் போனதென
காலை முதல் அரற்ற துவங்கியிருந்தாள்
என் உதிரத்தில் உதித்தவள்...!

கண்கள் குளமாகி அழுதுதழுது
தேம்பிய அவள் முகம் பார்த்து
எனக்குள் எதுவோ பிசைய துவங்கியது...!

அட! திடீரென அவள் கையில்
தொலைந்து போன பூனைக் குட்டி...!

“ஏண்டா விட்டுட்டு போன?”
வண்டியில அடிபட்டா நசுங்கி
போய் செத்திருப்ப...
நாயும் கடிச்சிருந்தா
நார் நாரா கிளிஞ்சிருப்ப...

வாய் புலம்பல் தொடர்ந்த படி
ஒரு கையால் பிடித்துக் கொண்டு
மறுகையால் அது மிரள
தலை மேலே ஒரு குட்டு...!
மறுநிமிடம் வலிக்குமென பதறி
அடித்த இடம் தடவியபடி
தொடர்ந்து கொண்டிருந்தது அவள் புலம்பல்...!

ஏன் அழுகிறாள்? எதற்கு அடிக்கிறாள்?
புரியாமலே அவள் மடி சுருண்டது
பூனைக் குட்டி, அடைக்கலம் தேடி...!
கண்டுகொண்டேன் நானும்
அக்ரிணையில் ஒரு நேசத்தை...!

வசப்படும் உணர்வுகள்...!



உணர்வுகள் உரசப்படா
வெற்றுக் காகிதத்தின் மற்றுமோர்
பக்கமாய் வாழ்க்கை சுழற்சி...!

ஆழியின் ஆக்கிரமிப்பு
மனசெல்லாம் சுழலச் செய்து
அஹிம்சை வெல்ல சபதமிடும்...!

வலிகள் சுமந்தே கதறிட்ட மனம்
கானல் கண்டு மயங்கிட துணியும்
காரணங்களே வேண்டாமல்...!

மனங்கள் மயங்கிடும் மாய
வலைக்குள் எதிர்ப்புகள் இல்லாமல்
வீழ்ந்து விடலாம், எழுர்ச்சி என்றோ?

நிலவு மறைக்கும் கார்மேகம் போலே
மறைந்தே கிடக்கின்றன
நமக்கான விடியல்...!

மழை பொழிந்ததும்
விடுபடும் நிலவாய்
வசப்படட்டும் வாழ்க்கை என்றும்...!

கனவு காதலனும்... கைப்பிடித்த கணவனும்...

வாய் வரை நீண்டுயர்ந்த கை
ஏனோ உணவூட்ட மறக்கிறது...
வெறித்து முறைக்கும் விழிகள்
எங்கும் பார்வை கொடுக்க மறுக்கிறது ...

இன்னதென்று அறிந்துவிட துடிக்கும்
இனமறியா உணர்வுக் கலவை
உயிர்நாடி தொட்டு
ஊடுருவி பாய்கிறது.....

வியர்வை ஊற்றில்
நீராடும் காலமுமாய்....
நீ வரும் நொடி வரை
எதிர்பார்ப்புகள் பொய்யாய்...
வந்து விட்ட நொடியோ
தூண்டில்புழு கவ்விய மீனாய்....

காதலாகி, காமமாகி
பின் அதுவே பயமுமாகி...
வெறித்து விட்டப் பார்வையும்
பதில் சொல்லா மவுனமும்
இன்று வரை தொடர்கதையே...

யாரோ யாரிவரோ...!


என் கல்லூரி வாழ்க்கை
ஆரம்பித்த போது துவங்கியது
எனக்கும் அவருக்குமான பந்தம்...!

வழக்கமாக நான் செல்லும் சாலை வழியே
கால்களையே துணையாக்கி வேக வேகமாக
நடை பயிலும் அறுபதை தாண்டிய முதியவர் அவர்...

எங்கு செல்கிறார் நானறியேன்,
எப்போது திரும்புவார்? அதுவும் அறியேன்...
ஆனால்... தினம் தினம்
அவர் பயணம் ஒரே இலக்கை நோக்கி...

சவரம் செய்யப்படா தாடி
நெஞ்சு குழி தாண்டி நீண்டிருக்க...
தலைவாரி வகிடெடுக்க வழியில்லாமல்
பாலைவனம் ஒன்று
தலை மேலே தோன்றியிருக்க...
இடது தோளிலே ஒரு பை...
வலது கையிலோ நீண்ட நெடிய ஒரு குச்சி...!

அந்த தாடிக்குள் ஒளிந்திருக்கும்
கதை என்னவென்று நான் அறியேன்...
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்...
அது சவரம் செய்ய காசில்லாமல்
வளர்ந்து கொண்டே செல்கிறது...!

எண்ணை வளம் காணா
வட்ட நிலாவாய் அவர் முன்வழுக்கை
அழகாகவே தோன்றியது எனக்கு...!

என்னதான் இருக்குமென்ற
ஆவல் கூட தோன்றவிடாமல்
அழுக்கு படிந்ததாய் அந்த பை
நிரந்தர கர்ப்பம் தாங்கி
அவர் தோள் வழியே சவாரி செய்யும்...!

அவரின் நடை பயணத்திற்கு பாதைவகுத்து
புதிதாய் ரோடு போட்டு
அவர் நடையின் வீரியத்தை கம்பீரமாக்கும்
அவர் கூடவே நடைபயிலும் அந்த குச்சி...!

அவர் உண்பாரா? யார் அவருக்கு உணவளிப்பர்?
தொக்கி நின்ற கேள்விக்கொரு
விடை கிடைத்தது ஓர் நாள்...!

வெளிர் நரை மூதாட்டி ஒருவர்
பழயென கழிதலை அலுமினிய தட்டில்
ஊற்றி பசியாற்றிக் கொண்டிருந்தார்,
அருகிலேயே தன் முறை வருமென
முறைத்துக் கொண்டே ஒரு நாலு கால் ஜீவன்...!

தினமும் நான் அவரை கடந்து செல்கையில்
திரும்பி பார்ப்பதும், பரஸ்பரம் புன்சிரிப்பமாய்
கடந்து சென்றது எங்கள் மூன்று வருட பந்தம்...!

காலத்தின் ஓட்டத்திலே உறவுகள் அறுந்ததாய்
விடுபட்டு போனது என் கல்லூரி மட்டுமல்ல
கூடவே நான் தினமும்
ரசித்த அந்த பெரியவரும் தான்...!

இரண்டு வருட இடைவெளியில் மீண்டும்
அதே பாதையில் பயணிக்க துவங்கி
ஆறு மாதமாய் நானும் அவரை காணாமல் தேடியலைய
இதோ என் வீட்டு வாசலை வேகமாய் கடக்கிறார் அவர்...!

பதிலுரைப்பார் எங்கே???

சந்ததி வேண்டி
பிள்ளையாரை சுற்றிய நான்...
சந்ததி சொல்லியதால்
தெருக்கோடியில் இன்று...
முற்றுபெற்று விட்டதாம் என் வாழ்க்கை...!
முடிந்து போனதென
எதை வைத்து கணித்தார்கள்???

ஏக்கங்கள் நிறைந்த மனதுக்குள்
காரணங்கள் அறிய...
என் வெள்ளிவிழா வாழ்க்கைக்கு
பதிலுரைப்பார் எங்கே???
கொதித்து கொண்டிருந்த குருதியில்
குளிர் காய்ந்தவர்கள்...
இவர்கள் இன்று வற்றிய
மனித நேயத்தின் காரணகர்த்தாக்கள்...

பெருகும் மக்கட்தொகை நடுவே
மலையாய் பெருகும் தேவைகள்...
பெருகி வரும் எண்ணிக்கைகளில்
சொந்தங்கள் மட்டும் அருகுவதேனோ???

சுருங்கி கொண்டிருக்கும் என் தோல்
காட்டுவது என் வயதையல்ல...
நான் பெற்றவனின் மனதை...!
தேவைகளுக்கிடையில் நடந்த போட்டியில்
நான் தேவையில்லாமல் போய்விட்டேன்...!!!

காலத்தின் காயம் (அவரவர் பார்வையில் நான்)...!



கவிழ்ந்திருந்த என் தலையின்
நொடிக்கொரு அசைவு
உணர்த்தி செல்லும்
என் விசும்பல்களின் ஆக்ரோஷத்தை...!

உன்னை தேடித் தேடி
தோய்ந்து போன கண்கள்
கண்ணீர் வற்றி அரைமயக்கத்தில்
ஒரே புள்ளியில் நிலைத்து நிற்கின்றன...!

உன் கைகள் பற்றத் துடிக்கும்
என் கரங்கள்
காற்றிலும் அலைபாய தெம்பில்லாமல்
வெற்றுத்தரையில்
ஜீவனற்று வீழ்ந்து கிடக்கின்றன...!

காத்திருந்த காலங்கள்
வாழ்வின் வசந்தம் பறித்து...
வெப்பச் சிந்தனைகளை நெருஞ்சி முட்களாய்
காலடி கீழ் சிதற விட்டுச் செல்கின்றன...!

வந்துவிட மாட்டாயா? என்ற
எதிர்பார்ப்பு நொடிக்கொரு முறை
உயிர்பித்து பின் மரணம் தழுவுகிறது...!

தொண்டை குழிக்குள் ஒரு கேவல் மட்டும்
உன் பெயரை சொல்லியே விக்கித்து
உயிர் மிச்சமிருப்பதை
நிலைநாட்டிச் செல்கிறது...!

இங்கு இறுதிப் புள்ளியில் காத்திருக்கும் நான்
வரமாய் பெற்ற காதலனையோ...
இல்லை...
தவமாய் பெற்ற மகனையோ...
எதிர்பார்த்து உயிர்த்திருக்கிறேன்...!

“அவரவர் பார்வையில் நான்”

வாழ்வியல் நந்தவனம்...!


அழகாய் பூத்திருக்கும் நந்தவனம் அது...
பலவகை வாசங்களின் குவியலாய்
அங்கு கலந்தே நிறைந்திருக்கும்
ஒவ்வொருவரின் சுவாசங்களும்...

தகிப்பின் வீரியம் குறைத்து
பூமி மகளோடு சீண்டி விளையாடயெண்ணி
வெப்பக்கரங்களால் அவள் ஈரமேனி தீண்டி
இரவெல்லாம் அவளோடு களித்து கிடந்த
பனித்துளிகளை ஊடல் கொள்ளச் செய்கிறான் ஆதவன்...!

மைனாக்களின் கீச்சுக்குரலின் இனிமையோசை
காற்றுக்கும் கிளர்ச்சியூட்டி
மறைந்திருக்கும் குயிலை வெளிப்படச் செய்து
ஒரு ஸ்வரக் கச்சேரியை துவக்குகிறது...!

மாதத்தின் முடிவில் உயிர் பிரியுமென
நாட்களை எண்ணி சோர்ந்திட முயலாமல்
அங்கு பறந்து திரியும் வண்ணத்துப் பூச்சிகள்
தேன்களின் மேலான ஈர்ப்பில் லயித்துக் கிடக்கும்...!

நாளை துளிர்க்க போகும் சந்ததியை
சுமக்கப் போகும் பூமித்தாயை...
இன்றே முத்தமிட்டு வரவேற்க தயாராகின்றன
ஆயுள் முடிந்ததாய் அறிந்து விட்ட மலர்களும்...!

பழுத்த இலைகளும் உரமாய் போய்விட
அவைகளின் மேலே அஸ்திவாரமெழுப்புகின்றன
விதைத் துளைத்து… புது உலகம் காணும்
பச்சையக் குழந்தைகள்...!

இருண்டு விட்டதென உயிரினங்கள் எதுவும்
பிரபஞ்ச பந்தினை சபித்திடாமல்...
விடியும் என்ற நம்பிக்கையை நெஞ்சுள் கொண்டு
சற்றுநேரம் நிம்மதியாய் இமையுறக்கம் கொள்கின்றன...!

மரணிப்போம் என்று தெரிந்தும்
விட்டில் பூச்சி... விளக்கினை விடுவதாய் இல்லை,
எரிவதால்... சுமக்கும் திரியும் கருகுமேயென
ஒளிதரும் சுடரும் சோர்வதாய் இல்லை...!

பகலும் இருளில் மூழ்கித்தான் போகிறது
இரவும் விடியலை அணிந்துதான் கொள்கிறது...
நிதம் நிதம் தொடரும் கண்ணாமூச்சியில்
சிலரின் அஸ்தமனம், சிலரின் விடியல்...
ஆனாலும் அந்த நந்தவனம்
மறுநாளும் அழகாய் தான் பூத்திருக்கிறது...!

Saturday 3 August 2013

நான் ஒரு சராசரி பெண்..

"இவள் என் ஆண் பிள்ளை" என்று தான் அறிமுகப்படுத்துவார் என் தந்தை தன் நண்பர்களிடத்து. யாராவது வீட்டுக்கு தேடி வந்தால் கதவின் பின் மறையும் அம்மாவின் முந்தானையின் பின்னே ஒளிவான் என் தம்பி. நானோ அப்பாவுக்கு சமமாய் அவர் அருகில் கம்பீரமாக அமர்ந்திருப்பேன்.

ஊரில் பண்ணையார் குடும்பம் என்று எங்கள் குடும்பத்தை எல்லோரும் சொன்னாலும் அந்த பண்ணையாருக்குரிய மிடுக்கு என் பெரியப்பாவிடம் தான் பார்த்திருக்கிறேன். "எலேய்..." என்று அவர் ஒரு குரல் கொடுத்தால் ஊரில் உள்ள அத்தனை வயசு பையன்களும் கை கட்டி நிற்பர். எல்லோருக்கும் அவர் என்றால் மரியாதை. அவர் பேச்சுக்கு எதிர் பேச்சு இல்லை. சிறு குழந்தைகள் ஏதாவது வம்பு பண்ணினால் இவர் பெயரை சொல்லி தான் அடக்கி வைப்பார்கள். என்னிடத்தில் இவர் பெயரை சொன்னாலோ, அவர் தானே, என்னோட மூத்தப்பா தானே, எனக்கென்ன பயம் என்று சாதாரணமாக சொல்வதோடு விடாமல் அவரை எங்கு பார்த்தாலும் மடியில் சென்று அமர்ந்து விடுவேன். அவரும் "என் பொண்ணுலே" என்றே அனைவரிடமும் சொல்வார்.



எங்கு சென்றாலும் அன்பும் மரியாதையும். சில நேரங்களில் எனக்கு கிடைக்கும் அன்பும் மரியாதையும் அப்பாவை சார்ந்ததாகவே தோன்றும் எனக்கு. அதனாலேயே நான் இன்னார் மகள் என்று சொல்லப்படுவதை வெறுப்பேன். எனக்கென தனித்துவம் எப்பொழுதும் வேண்டுமென்ற எண்ணம், என்னை மற்றவர்களிடத்து இருந்து வேறுபடுத்தி காட்டிக்கொண்டே இருக்கும்.

பள்ளியாகட்டும், கல்லூரியாகட்டும், கட்டுரை, கவிதை, கதை என்று எல்லா போட்டிகளிலும் பரிசு வாங்கி விடுவேன். ஓரளவு நன்றாக ஓவியம் வரைவேன், கைவினை பொருட்கள் செய்வேன். எதையும் முறையாக படித்ததில்லை என்றாலும் அதில் ஒரு நேர்த்தியை கடைபிடிப்பேன்.

என்னை சுற்றி பொருட்கள் இறைந்து கிடக்கும். அப்பொழுது அம்மா, "அவள் ஒரு செருப்பை பார்த்தால் கூட கலைநயத்தோடு தான் பார்ப்பாள்" என்று நண்பர்களிடத்து பெருமையோடு சொல்வதை கேட்டு தலை நிமிர்ந்து நின்றிருக்கிறேன். இப்பொழுது அதே அம்மாவிடம் இருந்து திட்டு வாங்கி கொண்டிருக்கிறேன் என்பது தனிக் கதை.

எனக்கு பலரை தெரியாது போனாலும் பலருக்கும் நான் தெரிந்தவளாக இருந்தேன்.

தோழி ஒருத்தியின் உதவியால் நாகர்கோவில் ரேடியோ ஸ்டேசனில் இளைஞர் பாரதம் நிகழ்ச்சிகளை மூன்று மாதத்திற்கு ஒரு முறை சிறு நாடகம், சிறுகதை, உரையாடல், கட்டுரை வழி நானே எழுதி, தொகுத்து தோழிகளோடு சேர்ந்து பேசியும் இருக்கிறேன். எனக்கு வரும் நேயர் கடிதங்களை பார்த்து ஒரு பெருமிதம் என்றால், "நீங்கள் தான் ஜீவாவா, நான் உங்கள் தீவிர ரசிகை" என்று என்னை அடையாளம் கண்டு ஓடி வந்து கட்டிக் கொண்ட சக கல்லூரி மாணவியை கண்ட போது தலைகால் புரியவில்லை எனக்கு.

சிறு வயது முதல் என் சுற்றமும் நட்பும் என் குறையை சுட்டி காட்டுவதே இல்லை. எல்லோரும் என் நிறைகளையே மிகவும் சிலாகித்திருந்தனர். அதுதான் என்னை தன்னம்பிக்கையோடு நிமிர்ந்து நிற்க உதவியது. பல நேரங்களிலும் தன்னம்பிக்கைக்கும் தைரியத்திற்கும் என்னையே உதாரணமாக சுட்டிக் காட்டுவர்.

நண்பர்கள் புடைசூழ வலம் வந்தே பழக்கம் அதிகம் எனக்கு. கல்லூரியில் ஆரம்பிக்கும் எங்கள் அரட்டைகள், சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் யாராவது ஒருவர் மொட்டை மாடியில் தொடரும். பெரும்பான்மையான நாட்கள் எங்கள் வீட்டு தண்ணீர் தொட்டியின் மேல் ஏறி அமர்ந்துக் கொண்டு அரட்டையடித்துக் கொண்டிருப்போம். என் தந்தையும் வயது மறந்து அவர்களோடு பேசி கொண்டிருப்பார். அம்மாவோ அவர்களுக்கு பிடித்தவற்றை சமைத்துக் கொடுத்து இன்னும் என்ன தேவையென கவனித்துக் கொண்டிருப்பார்.

எப்பொழுதும் மனம் மனதிற்கு பிடித்தவைகளையே அசை போடும். வாய் விட்டு மனதிற்கு பிடித்த பாடலை பாடிக்கொண்டே இருப்பேன். என் குரல் இனிமையாக இருக்கிறது என்றே அனைவரும் சொல்லியிருக்கின்றனர். என்னை பாடச்சொல்லி சுற்றி இருந்து ரசித்த நண்பர்களும் உண்டு. திருமணம் ஆன புதிதில் அதே மாதிரி நான் பாட ஆரம்பித்தால் "கழுதை வருகிறது, வாயை திறக்காதே" என்று முதல் அடி கிடைத்தது.

மத மதவென எப்பொழுதும் பொங்கிய பாலை போலவே உற்சாகமாக இருக்கும் என் மனம் வடிய ஆரம்பித்தது அப்பொழுது தான் என்றே நினைக்க தோன்றுகிறது.

எவ்வளவோ ஆசைகளும் கனவுகளும் கொண்ட நான் திருமணம் என்ற ஒன்றை பற்றி சிந்தித்ததே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். எனக்கு வர வேண்டியவர் இப்படி இப்படி இருக்க வேண்டும் என்ற கற்பனைகள் எதுவுமே இருந்ததில்லை என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.

திருமணம் எனக்கு அப்படியே ஒரு தலைகீழ் சமூகத்தை எனக்கு அடையாளப் படுத்தியது. பொறுப்பே இல்லாமல் சுற்றுகிறாள் என்ற அடைமொழி கணவர் வழி கிடைத்தது கூட சகித்துக் கொள்ளலாம், என்னை எப்பொழுதும் கொண்டாடிய தந்தை கூட என்னை கட்டுபடுத்த துவங்கி விட்டிருந்தார். என் வாழ்க்கை மேலான பயம் அனைவரையும் சூழ்ந்து கொண்டது. அந்த பயத்தினாலேயே நான் என்னை, என் தேடல்களை இழக்க ஆரம்பித்திருந்தேன்.

யதார்த்தம் என்னவென்று புரிய ஆரம்பித்த பிறகு மற்றவர்களுக்கு சிரமம் என்று என்னை நானே ஒடுக்கி கொள்ள ஆரம்பித்து விட்டேன்.

என்னை சுற்றி இருக்கும் உறவு கூட்டமாகட்டும், நட்பு வட்டமாகட்டும் எல்லோருமே இப்பொழுது எங்கோ வெகு தொலைவு போய் விட்டனர்.

வருடங்கள் பத்து கடந்து விட்ட சூழ்நிலையில் எதிர்பார்ப்புகள், ஏமாற்றம், துரோகங்கள், பொருளாதார தடுமாற்றங்கள் என பலவகை அனுபவங்களை மட்டுமே துணையாய் கொண்டு இன்று நானும் ஒரு சராசரி பெண்ணாகி வாழ்க்கை போக்கில் நானும் போய் கொண்டிருக்கிறேன்.