Pages

Monday 30 September 2013

கருப்பை வீக்கமும் (எண்டோமெட்ரோசிஸ்) மாதவிடாய் கோளாறுகளும்...

பெண்ணாய் பிறந்து விட்டாலே அவள் வாழ்வில் ஒருகட்டத்தில் அவளோடு இணைந்து பின் குறிப்பிட்ட காலம் வரை அவள் சந்திக்கும் ஒரு மாதாந்திர நிகழ்வு என்றால் அது மாதவிடாய் தான். எல்லா பெண்கள் வாழ்விலும் இதற்கான காலகட்டங்கள் உண்டு என்றாலும் இன்று பெரும்பான்மையானோர் இதனால் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.

சரி, முதலில் மாதவிடாய் என்றால் என்னவென்று பார்ப்போம்

ஒரு பெண் பூப்பெய்திய நாளிலிருந்து அவளின் மாதாந்திர சுழற்சியில் மூன்றிலிருந்து ஏழு நாட்கள் வரை உதிரப்போக்கு இருந்தால் அது முறையான அல்லது ஒழுங்கான மாதவிடாய் எனப்படுகிறது. ஒரு பெண் கருத்தரிக்க அவசியமாக அவள் இனபெருக்க சுழற்சியின் ஒரு அங்கமாகவே இந்த மாதவிடாய் நிகழ்கிறது.

பொதுவாக மாதவிடாய் காலமாக 24-29 நாட்களை சொன்னாலும் 23-35 நாட்களுக்குள் வரும் மாதவிடாயை சாதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.

உதிரப்போக்கை பொருத்தவரை அது பெண்களுக்கு பெண்கள் மாறுபடுகிறது. இதில் வலிகளும் உதிரப்போக்கும் தாங்கிக்கொள்ளத்தக்க வகையில் இருந்தால் அதில் பிரச்சனை இல்லை.

ஆனால் இன்றோ பெரும்பாலான பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னையை சந்திக்கின்றனர். அவர்களுக்கு ஒரு மாதத்திற்குள்ளாகவே இரண்டிலிருந்து மூன்று முறை மாதவிடாய் வருகிறது. அல்லது வருடத்திற்கு நான்கு அல்லது ஐந்து மாதவிடாய் சுழற்சியை மட்டுமே சந்திக்கின்றனர்.

இதற்கான காரணங்கள் என்னவாய் இருக்கின்றன? 
  1. அதிகபடியான உடல் பருமன் / உடல் இளைப்பு 
  2. நீண்ட நேர உடற்பயிற்சி 
  3. சத்துணவு குறைவு (அல்லது) மாவு சத்து அதிகமுள்ள உணவு உட்கொள்ளுதல் 
  4. மது பழக்கம் 
  5. புகைப் பழக்கம் 
  6. போதை மருந்து பழக்கம் 
  7. அதிகப்படியான மன அழுத்தம் 
  8. சீதோசன நிலை மாற்றங்கள் 
  9. ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோஜெஸ்ட்டிரான் ஹார்மோன்களின் அளவு மாறுபடுதல் 
  10. ஒன்றுக்கும் மேற்பட்ட சூலக கட்டிகள் (பாலி சிஸ்ரானிக் ஓவரி) 
  11. கர்ப்பப்பை கோளாறுகள் (கர்ப்பப்பை கட்டிகள் (fibroids/cysts/polyps), கருப்பை வீக்கம் (endometriosis) 
  12. பிற நோய்களுக்கான மருந்துண்ணல் 
  13. புற்றுநோயாளிகளுக்கான கீமோதெரபி 
  14. குழந்தை பெற்ற சில மாதங்கள், கருகலைப்பு, தவறான இடத்தில் கருத்தங்கல் 
  15. குழந்தைகளுக்கு பாலூட்டல் 
இவற்றில் ஏதாவது ஒரு காரணத்தால் இந்த ஒழுங்கற்ற மாதவிடாய் வருகிறது. இவற்றில் கர்ப்பம் சார்ந்த காரணங்களால் மாதவிடாய் தள்ளிப்போனாலோ இல்லை ஒழுங்கற்று இருந்தாலோ சில மாதங்களில் சரி ஆகி விடும், அதே போலத்தான் பிற நோய்களுக்காக மருந்து உட்கொள்வதால் வரும் ஒழுங்கீன்மை சில மாதங்களில் சரியாகி விடும்.

மன அழுத்தம் ஒரு பெண்ணின் உடலின் ஹார்மோன் சுரத்தலை ஓன்று அதிகரிக்கிறது இல்லை மட்டுப்படுத்துகிறது. மேலும் கார்டிசால் என்னும் ஹார்மோன் அதிகம் சுரக்கிறது. இந்த கார்டிசால் செக்ஸ் ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜனையும் ப்ரோஜெஸ்ட்டிரானையும் சரி விகிதத்தில் சுரக்க விடாமல் தடுக்கிறது. எனவே தான் ஒழுங்கற்ற மாதவிடாய் வருகிறது.

அடுத்து பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது பாலி சிஸ்ரானிக் ஓவரி (Polycystic ovary syndrome ) எனப்படும் சூலக கட்டிகள். இவை ஒரு பெண்ணின் கருமுட்டை உருவாவதில் பிரச்னையை உண்டு பண்ணுகின்றன. இதனால் அவளின் சராசரி மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படுகிறது. இதனால் அப்பெண் பொடுகு, அதிகபட்ச உடல் பருமன், முகம் மற்றும் உடலில் அதிக முடி வளர்த்தல், மற்றும் மலட்டுதன்மையால் பாதிக்கப்படுகிறாள். மேலும் இந்நிலை நீடிக்கும் போது கர்ப்பப்பை வீக்கம், கர்பப்பை புற்றுநோய், இதய நோய் போன்றவையும் ஏற்பட வாய்ப்புள்ளது.

சில பெண்களுக்கு இந்த பாலி சிஸ்ரானிக் ஓவரி எனப்படும் சூலக கட்டிகள் தோன்றாமலே கர்ப்பபை வீக்கம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனை நாம் இடமகல் கருப்பை அல்லது எண்டோமெட்ரோசிஸ் (endometriosis) என்கிறோம்.

பொதுவாக எண்டோமெட்ரோசிஸ் இருந்தால் அறிகுறிகள் எதைவும் தோன்றுவதில்லை. மாதவிடாய் நேரங்களில் வலிகளும் வருவதில்லை. அதிகபடியான உதிரப்போக்கே இதன் அறிகுறியாக உள்ளது. அதையும் தாண்டி சிலருக்கு இது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.

இந்த எண்டோமெட்ரோசிஸ் என்றால் என்ன?

எண்டோமெட்ரியம் (endometrium) எனபது கர்ப்பப்பையின் உள்ளே வளரும் ஜவ்வு போன்ற தசை செல்களாகும். இது மாதாந்திர சுழற்சியின் போது கருவுறும்
வாய்ப்புற்றால் கருவை தாங்கி பிடிக்கும் சக்திக்காக கர்ப்பப்பையின் உட்புறம் உருவாகுகின்றன. அவ்வாறு உருவாகும் போது கர்ப்பப்பையின் சுவர் திண்ணமாகிறது. கரு உருவாகாது போகும் பட்சத்தில் இவை சிதைந்து உதிரப்போக்கோடு வெளியேறுகின்றன. இந்த எண்டோமெட்ரியம் சில நேரங்களில் எதிர்பாராவிதமாக கருப்பையின் வெளிசுவரிலும் வளரத் துவங்குகின்றன. இத்தகைய நிலையை தான் நாம் எண்டோமெட்ரோசிஸ் என்கிறோம்.

இந்த எண்டோமெட்ரோசிஸ் ஏற்பட என்ன காரணமாக இருக்கும்? 

எண்டோமெட்ரியம் கருப்பையின் வெளிச்சுவர்களிலும் இடுப்பு மற்றும் அடிவயிற்றிலும் சில சமயங்களில் மூளையை சுற்றியும் வளர்வதற்கு இது தான் காரணம் என்று இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனாலும் சில காரணங்களை கூறலாம்
  1. மாதவிடாய் நேரங்களில் வெளிப்படும் உதிரம், கருக்குழாய் வழியாக பின்னோக்கி பாய்வதால் எண்டோமெட்ரியம் செல்கள் கர்ப்பப்பை விட்டு வெளித்தள்ளப்படுகின்றன. அப்படி வெளியேற்றப்பட்ட செல்கள் கர்ப்பப்பையின் வெளியே வளர்கின்றன. 
  2. இடுப்பை சுற்றியுள்ள மரபியல் செல்கள் (primitive cells) ஒரு கட்டத்தில் எண்டோமெட்ரியம் செல்களாக வளர்ச்சியடைகின்றன 
  3. அறுவை சிகிச்சை செய்யும் போது எண்டோமெட்ரியம் செல்கள் வெளியாகி அறுவை சிகிச்சை நடந்த இடத்தை சுற்றி வளரலாம் 
  4. எலும்பு மஜ்ஜையிலிருந்தும் வெளியேறி இவை தனியாக வளரலாம் 
இறுதியாக இந்த எண்டோமெட்ரியம் செல்கள் பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தியினையே மாற்றி அமைக்கவும் செய்யலாம். இதனால் தவறுதலாய் இடமாறி வெளித்தங்கும் எண்டோமெட்ரியம் செல்கள் அழிக்கப்படாமல் உறைந்து போகவும் வாய்ப்புள்ளது.

கருப்பை வீக்கம் இருக்கும் பெண்களுக்கு வரும் பிரச்சனைகள்: 
  1. அதிகப்படியான வயிற்றுப்போக்கு 
  2. முதுகு வலி 
  3. சிறுநீரில் ரெத்தம் 
  4. கருமுட்டை வெளிப்படும் போதும் மாதவிடாய் நாட்களிலும் தாங்க முடியாத வயிற்று வலி (இதில் பலருக்கு மாதாந்திர வலியின் வீரியம் மாதத்திற்கு மாதம் வேறுபடவும் செய்யும்) 
  5. ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி 
  6. அதிக உதிரப்போக்கு 
  7. அவ்வபோது அடி வயிற்றில் வலி (கை பட்டாலே சிலருக்கு அதிக வலி இருக்கும்) 
  8. குழந்தையின்மை 
  9. அபூர்வமாக நெஞ்சு வலி, இருமும் போது ரத்தம், தலைவலி, உடல் சோர்வு போன்றவையும் ஏற்படும் 
சில பெண்களுக்கு மாதவிடாய் நேரம் நடக்கவே இயலாமல் கால்கள் இழுத்து வைத்துக் கொள்ளுவதும், இன்ன இடத்தில் தான் வலிக்கிறது என்றே சொல்ல முடியாத படி உடல் முழுவதுமாக அதிகபட்ச வலியும் வந்து துடித்துடித்து போவார்கள். இன்னும் சிலருக்கோ மேற்புற கருப்பை புற்றுநோய் அல்லது கருக்குழாய் புற்றுநோய் வரவும் வாய்ப்புள்ளது.

இந்த எண்டோமெட்ரோசிஸ்சை கண்டறியும் வழி என்ன?

பெரும்பாலான நேரங்களின் அதிகப்படியான உதிரப்போக்கும், தாங்க முடியாத வயிற்று வலியும் இருந்தால் மருத்துவருக்கு எண்டோமெட்ரோசிஸ் கருப்பை இருக்குமோ என்ற சந்தேகத்தை கொடுக்கிறது. அல்ட்ராசவுண்ட் இமேஜிங் ஆய்வுகள் மூலம் இதனை கண்டறிந்தாலும் இடுப்பு மற்றும் வயிற்று பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திசு ஆய்வு செய்து எண்டோமெட்ரியம் செல்கள் இருக்கிறதா என்று பார்கின்றனர். ஆனாலும் லாப்ரோஸ்கோப்பி மூலம் நேரடி ஆய்வு செய்தே இதனை உறுதி செய்ய முடியும்.

எண்டோமெட்ரோசிஸ் கருப்பைக்கான சிகிச்சை முறைகள் 

பொதுவாக எண்டோமெட்ரோசிஸ் முற்றிலும் குணப்படுத்த முடியாதென்றாலும் மருந்துக்கள் மூலமாக சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். இந்த சிகிச்சை நோயாளியின் தேவை பொருத்து மாறுபடுகிறது. அதாவது வலி மட்டும் குறைய வேறு விதமாகவும் கருவுற்றல் நிகழ வேறு முறையிலும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பலதரப்பட்ட சிகிச்சை முறைகள் இருந்தாலும் முக்கியமானவற்றை மட்டும் இங்கு காண்போம்

1. வீக்கத்துக்கு எதிரான ஸ்டீராய்டு அல்லாத மருந்துகள் (Nonsteroidal anti-inflammatory drugs) 

பொதுவாக இவை எண்டோமெட்ரியம் செல்கள் மேலான எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. மாறாக ப்ராஸ்டாகிளான்ட்டின் (prostaglandin) உற்பத்தியை மட்டுபடுத்தி வலியின் வீரியத்தை குறைக்கின்றன. வலிகளை தூண்டி விடுவதில் இந்த ப்ராஸ்டாகிளான்ட்டினுக்கு பெரும்பங்கு உண்டு. பொதுவாக நாப்ரோசென் அல்லது இபுப்ரோபன் (naproxen or ibuprofen) வலிநிவாரணியாக அளிக்கப்படுகிறது.

2. கோனாடோட்ரோபின் வெளியீட்டு நொதி ஒப்புமைகள் (Gonadotropin-releasing hormone analogs (GnRH analogs))
இவை நிவாரணியாக மட்டும் செயல் படாமல் எண்டோமெட்ரியம் செல்களை கட்டுபடுத்தவும் செய்கின்றன. இவை ஈஸ்ட்ரோஜன் சுரப்பை நிறுத்தி மாதவிடாயை தடுக்கிறது. இதனை உட்கொள்வதால் சிலருக்கு பக்க விளைவுகளாக ஒழுங்கற்ற ரெத்தப்போக்கு, மனநிலை மாற்றங்கள், சோர்வு போன்றவை ஏற்படலாம். ஆனாலும் சிறிதளவு ஈஸ்ட்ரோஜன், ப்ரோஜெஸ்டிரோன் கலவைகளை மாத்திரையாக உட்கொண்டால் இந்த பக்க விளைவுகள் சரி செய்யப்படும்.

3. வாய்வழி கருத்தடை மாத்திரைகள் (ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன்)

இவை மாதவிடாய் சுழற்சியை கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்ட கருத்தடை மாத்திரைகளாகும். இவற்றை குறிப்பிட்ட கால அளவு (21 நாட்கள்) எடுத்து சிறிது இடைவெளி விட்டால், நான்காம் நாளிலிருந்து மாதவிடாய் வரும். பின் மாதவிடாய் வந்த ஐந்தாம் நாளிலிருந்து மீண்டும் தொடர்ச்சியாக 21 நாட்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். எண்டோமெட்ரோசிஸ்க்கான மிக சிறந்த சிகிச்சையாக இது இருக்கிறது. ஆனால் இது கருத்தரித்தலை தடுக்கும். சிலருக்கு இதனால் உடல் பருமன், உடல் சோர்வு, தலைசுற்றல், வாந்தி போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

4. அறுவை சிகிச்சை

எண்டோமெட்ரோசிஸ்க்கான மருந்து சிகிச்சைகள் பலனளிக்காமல் போனாலோ அல்லது அதன் பாதிப்பின் தாக்கம் அதிகமாக இருந்தாலோ கர்ப்பப்பையில் அறுவை சிட்சை செய்யலாம். இது இரண்டு விதமானது. ஒன்று, கருப்பையையும் அது சார்ந்த சூல் பைகளையும் எந்தவிதத்திலும் பாதித்து விடாமல் எண்டோமெட்ரியம் செல்களை நீக்குவது. இரண்டாவது, சூல் பைகளோடவோ அல்லாமலோ கருப்பையை முற்றிலுமாக அகற்றுவது. குழந்தை பேறு வேண்டும் பெண்களுக்கு முதலில் குறிப்பிட்ட அறுவை சிகிச்சை சாலச் சிறந்தது.


எது எப்படியாக இருந்தாலும் எண்டோமெட்ரியம் செல்கள் ஒரு பெண்ணின் தாய்மை பேறு நிறைவேற மிகப்பெரிய உதவியாக இருகின்றன. அவை இருக்கும் இடத்துக்குள் இருந்து விட்டால் எப்பொழுதும் கவலையில்லை. அப்படியே எண்டோமெட்ரோசிஸ் கருப்பை வந்துவிட்டாலும் சிகிச்சை முறைகளும் நிறையவே வந்துவிட்டன. இளம் வயதிலேயே இதனால் அவதியுறும் பெண்கள் முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் தாய்மை அடைவதிலும் வெற்றிபெற முடியும்.

13 comments:

  1. ரொம்ப நல்ல பதிவு மேடம், நிறைய தெரிஞ்சுக்கலாம் இத படிச்சா...

    ReplyDelete
  2. அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்... Followers ஆகி விட்டேன்... தொடர்கிறேன்...


    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க.... சகோ...

      Delete
  3. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_18.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா சென்று பார்கிறேன் சகோ... நன்றி

      Delete
  4. வணக்கம்
    அறிந்து கொள்ள வேண்டி தகவல் பதிவு நன்று வாழ்த்துக்கள்
    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி சகோ

      Delete
  5. நல்ல விளக்கம்..நன்றிகள் பல பெண்கள் பலனடைவர்கள்

    ReplyDelete
  6. இந்த பிரச்சனைக்கு ஆயுர்வேத முறையில் மருத்துவம் செய்யலாமா...?

    ReplyDelete
  7. கற்பபை வீக்கத்தை குணப்படுத்த அறுவை சிகிச்சை அவசியமா டாக்டர் ?

    ReplyDelete