Pages

Sunday 4 August 2013

காலத்தின் காயம் (அவரவர் பார்வையில் நான்)...!



கவிழ்ந்திருந்த என் தலையின்
நொடிக்கொரு அசைவு
உணர்த்தி செல்லும்
என் விசும்பல்களின் ஆக்ரோஷத்தை...!

உன்னை தேடித் தேடி
தோய்ந்து போன கண்கள்
கண்ணீர் வற்றி அரைமயக்கத்தில்
ஒரே புள்ளியில் நிலைத்து நிற்கின்றன...!

உன் கைகள் பற்றத் துடிக்கும்
என் கரங்கள்
காற்றிலும் அலைபாய தெம்பில்லாமல்
வெற்றுத்தரையில்
ஜீவனற்று வீழ்ந்து கிடக்கின்றன...!

காத்திருந்த காலங்கள்
வாழ்வின் வசந்தம் பறித்து...
வெப்பச் சிந்தனைகளை நெருஞ்சி முட்களாய்
காலடி கீழ் சிதற விட்டுச் செல்கின்றன...!

வந்துவிட மாட்டாயா? என்ற
எதிர்பார்ப்பு நொடிக்கொரு முறை
உயிர்பித்து பின் மரணம் தழுவுகிறது...!

தொண்டை குழிக்குள் ஒரு கேவல் மட்டும்
உன் பெயரை சொல்லியே விக்கித்து
உயிர் மிச்சமிருப்பதை
நிலைநாட்டிச் செல்கிறது...!

இங்கு இறுதிப் புள்ளியில் காத்திருக்கும் நான்
வரமாய் பெற்ற காதலனையோ...
இல்லை...
தவமாய் பெற்ற மகனையோ...
எதிர்பார்த்து உயிர்த்திருக்கிறேன்...!

“அவரவர் பார்வையில் நான்”

No comments:

Post a Comment