Pages

Saturday 29 September 2012

சுவாரசிய வாழ்க்கை - சில சவுகர்யங்களும் சங்கடங்களும்



அன்றாடம் நம் வாழ்வில் சந்திக்கும் நபர்கள் என்பது வேறு. அவர்களின் குணாதிசயங்கள் பற்றியோ நடவடிக்கைகள் பற்றியோ நாம் அதிகம் கவலைப்படுவதாக இல்லை. அதே நேரம், நம்மோடு கூடவே தொடர்ந்த/தொடரும் நபர்களின் நடவடிக்கைகள், அவை சுவாரசியமாகவோ இல்லை அசவுகர்யமாகவோ இருந்தால்???

நான் சந்தித்த என் நண்பர்கள் மற்றும் தோழிகள்: 

 (இங்கு நான் எதையும் விவாதிக்கவோ விளக்கவோ முனையவில்லை, அதனை வேறொரு தனிப்பதிவில் வைத்துக் கொள்ளலாம். எனது அன்றைய அனுபவம் மட்டுமே இப்பதிவில் பதிய நினைக்கிறேன்)  

கல்லூரியில் அப்பொழுது தான் வகுப்பறை சென்று விட்டு வந்து அமர்ந்த நேரம், என் அலைபேசி யாரோ என்னை அழைகின்றனர் என்று மவுனமாய் எடுத்துரைத்தது. திரையில் மின்னிய எண் புதிதாய் தெரியவே சற்று அசுவாரசியமாய் ஹெல்லோ என்றேன். எதிர்முனை "ஜீவா நான் தான்டா" என்றது.

அது என் நண்பனின் குரல். சரியாக பத்தொன்பது ஆண்டுகள் பின்னோக்கி பார்த்தால் அவன் என் பத்தாம் வகுப்பு சக தோழன்.

''எனது பெண் பூப்பெய்தி விட்டதால் வரும் வெள்ளிக் கிழமை அதற்கான விழா வைத்திருக்கிறேன், நீ அவசியம் வந்து விடு'' என்றான்.

எனக்கு அதிர்ச்சி. இருபத்தி இரண்டு வயதில் அவனுக்கு திருமணம் முடிந்து விட்டிருந்தாலும் அவன் மகள் சிறியவளாக தானே இருப்பாள்? ''அவள் வயதென்ன" என்ற கேள்வியை என்னால் தவிர்க்க முடியவில்லை.

''பத்தரை வயது'' என்ற அவன் பதில் என்னை ஆழ்ந்து பெருமூச்சு விட வைத்தது. எட்டு வயது நிரம்பிய என் மகள் கண் முன் வந்து சென்றாள்.

விளையாட்டுத்தனமும் அறியாமையும் விட்டு அகலா இந்த பச்சை குழந்தைகளின் இத்தகைய அசாதாரண வளர்ச்சிக்கு காரணம் என்ன?

1. பெருகி வரும் பாஸ்ட் பூட் கலாசாரம் 
2. அறிவியல் வளர்ச்சியினால் மாறி வரும் மனநிலை 

இந்த குழந்தைகளின் அசாதாரண வளர்ச்சி இன்று ஒரு சர்வ சாதாரண நிகழ்வாய் பெருகி விட்டிருந்தாலும், இவர்களை வைத்து சடங்கு, சம்பிரதாயம் என்ற கோட்பாடுகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த பச்சிளம் குழந்தைகளை அலங்கார பதுமைகளாக மாற்றி அவர்களை ஊருக்கு அடையாளம் காட்ட வேண்டிய அவசியம் தான் என்ன?

சரி, நண்பன் அழைத்து விட்டான், சென்று வரலாம், இருபது வருடம் கழித்து சில நண்பர்களை சந்திக்கலாமே என்ற எண்ணம் மனதில் தோன்ற சென்று வருவது என முடிவு செய்தேன். 

அங்கு சென்றதும் ஏதோ வர கூடாத இடத்திற்கு வந்து விட்டோமோ என்று எண்ண வைக்கும் படியான சூழ்நிலை எனக்கு தோன்ற ஆரம்பித்தது. ஒரு சிறு பெண்ணை வைத்து நடத்தப்படும் இத்தகைய சடங்குகள் தேவை தானா? அதை நானும் ஊக்குவிக்கிறேனா? 

 நிற்க கூட முடியாமல் மிகவும் தளர்ச்சியாக தோன்றிய அவள் தன்னை ஆசிர்வதித்தவர்களை புன்னகையோடு எதிர் கொண்ட விதம் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.  இன்றைய இளைய தலைமுறையினருக்கு இத்தகைய சகிப்பு தன்மை எங்கிருந்து வருகிறது?

ஒரு முதிர்ந்த பெண்ணை போல் மற்றவர்களுடன் புன்னகைத்த அவள், அவள் தந்தையிடம் மட்டும் சற்று உரிமையாக கைபிடித்து நின்றுக் கொண்டாள். தளர்ந்து போய் உக்கார நினைக்கும் அவளிடம் என் நண்பன் (அவளது தந்தை) அரவணைப்போடு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான். 

என்னதான் எனக்கு இதில் உடன்பாடு இல்லையென்றாலும் அவர்கள் இருவரின் பாசப்பிணைப்பு என்னை ஆச்சர்ய பட வைத்தது என்னவோ உண்மை. தந்தையின் மனதறிந்து மகளும், மகளின் நிலை அறிந்து தந்தையும்... நெகிழ்ச்சியோடு கூடிய அட்ஜஸ்ட்மென்ட் இருவர் கண்களிளுமே மிளிர்ந்தது. 

வரிசையில் நின்று ஒரு வழியாக அந்த சிறு பெண்ணை நல்லா இரு (வேறு என்ன சொல்வது என அந்த நேரத்தில் தோன்றவில்லை) என ஆசிவதித்து விட்டு நண்பனை பார்த்து புன்னகைத்தோம்  நானும் என் கணவரும்.  எங்களை கண்ட அவன், எங்களை சாப்பிட அழைத்து சென்றான். 

அங்கே சாப்பிட்டு கொண்டிருந்த ஒரு பெண்ணை அழைத்து, யார் என தெரிகிறதா என வினவ, நானோ நெற்றி சுருக்கி அவளை நினைவில் நிறுத்த முயன்று தோற்று கொண்டிருக்க, அவளுக்கும் அதே நிலைமை. பின் எங்கள் பெயர் சொல்லி நண்பன் அறிமுகபடுத்த ஆச்சர்யத்தோடு ஒருவரை ஒருவர் கைகுலுக்கி கொண்டோம். அவள் எங்கள் எட்டாம் வகுப்பு தோழி. 

பரஸ்பர நலவிசாரிப்புகளுக்கு பின், என் குழந்தைகள் பற்றி அவள் விசாரித்தாள். என் இரட்டை குழந்தைகள் பற்றி முன்பே அறிந்திருந்த அவளை பற்றி நான் எதுவும் அறிந்து வைத்திருக்கவில்லை என்பது எனக்குள் கொஞ்சம் வேதனையை தந்தது. அவள் இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கிறாள் என்று அறிந்த உடன் மனம் ஏனோ விரக்தியாய் பெருமூச்சு விட்டுக் கொண்டது. 

பெண்ணீயம் பற்றி அதிகமாக யோசிக்கும் நான் ஏன் அவள் திருமணமாகவில்லை என்று சொன்னதும் வருத்தப்பட வேண்டும்? அப்படியென்றால் ஒரு பெண்ணுக்கு திருமணம் அத்தனை முக்கியமானதா? கேள்விகள் தொக்கி நிற்க சாப்பிட ஆரம்பித்தேன் நான்.

சாப்பிட்டு முடிக்கும் முன் மற்றுமொரு அறிமுகம். இவள் என்னை கண்டதும் ஓடி வந்து கைப்பிடித்துக் கொண்டாள். அவளை சட்டென அடையாளம் கண்டு விட்ட நானும் அவளை பற்றிக் கொண்டேன். 

அவளது சந்தோசம் என்னையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. என் குழந்தைகள் பயிலும் பள்ளியிலேயே அவள் குழந்தைகளும் படிப்பதாக கூறியது இன்னும் ஆச்சர்யம். என்னைப் பற்றி எதுவும் தெரிந்து வைத்திருக்காத அவள், தான் ஒரு கல்லூரியில் அட்மினிஸ்ட்ரேசனில் பணியாற்றுவதாக கூறினாள். பின் விடைபெற தயாராக இருந்த அவளிடம் என் கணவர் என்னை அறிமுகப்படுத்த நினைத்து இவளும் கல்லூரியில் பணியாற்றுகிறாள் என்ற உடன் அவளுக்கு ஆச்சர்யம். 

எனது நிலைமையும், உடலையும் பார்த்து அவள் நான் குடும்ப தலைவியாக தான் இருக்க வேண்டுமென்று முடிவு எடுத்து விட்டாளோ என்னமோ? நான் கல்லூரி விரிவுரையாளர், அதுவும் ஒரு துறையின் தலைமை பொறுப்பில் இருக்கிறேன் என்றதும் மீண்டும் அவளிடம் ஆச்சர்யம். கல்லூரிக்கு நானே காரில் சென்று விடுவேன் என்றதும் அடுத்தக்கட்ட அதிர்ச்சி அவளுக்கு. என் கன்னம் பிடித்து செல்லம் கொஞ்ச ஆரம்பித்து விட்டாள் அவள். 

ஒருவழியாக வீடு திரும்பிய நான் யோசித்துக் கொண்டேன். எத்தனை வருடங்கள் நட்புக்களை பிரிந்து இருந்து விட்டேன். வாழ்க்கை சுழற்சி என்பது எப்படி எல்லாம் நம்மோடு சேர்த்து நம் மனங்களையும் புரட்டிப் போட்டு விடுகிறது. 

இத்தகைய பூப்புனித நீராட்டு விழா தேவை தானா என்ற என் கேள்விக்கு நிச்சயம் என் மகளுக்கு தேவையில்லை என்ற பதில் மட்டுமே என்னால் கொடுக்க முடிந்தது. அதுவும் தற்காலிகமானதே. கணவர் மற்றும் உறவுகளின் வற்புறுத்தல்களுக்கு நான் பணிந்து போவேனோ என்னவோ?

எப்படியாயினும்  என் முந்தைய பதிவில் தான் என் எட்டாம் வகுப்பு நண்பர்களை பற்றி எழுதி இருந்தேன், இப்பொழுது அவர்களில் நான்கு பேரை சந்தித்து விட்ட மகிழ்ச்சி. ஆனாலும் அதில் நான் சொல்லாமல் விட்ட நண்பன் ஒருவன் என்னை பார்த்தும் பாராமுகம் காட்டியபடி சென்று விட்டான். மனங்களில் தான் எத்தனை நிறங்கள். நண்பர்களோடு இணைந்திருந்த காலங்களில் இருந்த பூரிப்பும் பரவசமும் இப்பொழுது ஏனோ குறைவது போன்றே தோன்றுகிறது.

எங்களுக்குள் பரிமாறிக் கொண்ட அலைபேசி எண்கள் இன்னமும் அழுதப்படாமலே விரல்களின் ஸ்பரிசதிற்காக காத்துக் கிடக்கின்றன.

சரி, வீட்டு வேலை அப்படியே இருக்கிறது, குழந்தைகளை கவனிக்க வேண்டும், அவர்களின் சண்டைகளை நானும் அனுபவிக்கவேண்டும். இனி ஒரு பதிவில் சந்திக்கிறேன். 


4 comments:

  1. அருமையான பதிவு. ஒவ்வொருவருடைய பழைய நினைவுகள் ஓரு போகிஷம்தான். அதை மறுக்க முடியாத ஒன்று. பழைய பள்ளிக்கூட நினைவுகளை அசை போடும்போது கிடக்கும் சுகமும் தனிதான்.

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சார், ஆம், பழைய பள்ளி தோழமைகளை நினைத்துப் பார்த்தல் ஒரு தனி சுகம் தான்.

      Delete
  2. நல்ல பதிவு. உங்கள் டைரியின் பக்கத்தை படித்த உணர்வு..எழுத்து நடை அருமை. வாழ்த்துக்கள்.. இன்னும் பதிவிடுங்கள்.

    அன்புடன், திருவட்டாறு சிந்துகுமார், நிருபர் குமுதம் வார இதழ்ழ்,கன்னியாகுமரி

    ReplyDelete
  3. மிக்க நன்றி .....

    ReplyDelete