Pages

Saturday 6 October 2012

மரியாதைக்குரிய ப்ரின்சிப்பாலும் அவர் மகளும்

சற்று ஓய்வாக இருக்கும் தருணங்களில் நாம் கடந்து வந்த பாதைகளின் நினைவுகள் நம் நினைவுக் குதிரையில் பயணிக்க தான் செய்கின்றன. அந்த நினைவுகளோடு பயணிக்கையில் எப்பொழுதுமே பல சுவாரசிய சம்பவங்கள் நம்மை கடந்தே செல்கின்றன. அவ்வாறு அவற்றை கடக்கும் பொழுது நமது இதழ்கள் சிறு புன்னகையை சிதற விடுவதை யாராலும் மறுக்க முடியாது. 

1995 - ம் வருடம். அப்பொழுது தான் பள்ளி வாழ்வு முடித்து கல்லூரி வாழ்வில் காலடி எடுத்து வைக்க வேண்டும். அப்பொழுது என் தந்தை கன்னியாகுமரி மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு யூனியன் தலைவராக இருந்த தருணம். 

எப்படியாவது இங்கிலீஷ் லிட்டிரேச்சர் படித்து, பின் பி.எல் படித்து ஒரு வக்கீலாகி விட வேண்டும் என்று குறிக்கோள் கொண்டிருந்த தருணம். என் தந்தை "நீ கூட்டுறவு துறையில் சிறந்த ஒரு வக்கீலாக வரலாம்" என்ற ஆசை வார்த்தைகள் கூறி என்னை கூட்டுறவு சார்ந்த பட்டயப் படிப்பான "டிப்ளமோ இன் கோஆப்பெரேடிவ் மானேஜ்மென்ட்டில் (D.Co-op) சேர்த்து விட்டார். 

அதுவரை வீட்டிலிருந்து பள்ளி, பள்ளியிலிருந்து வீடு என ஒரு கூட்டுப்புழு வாழ்க்கை வாழ்ந்த நான், கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து திருநெல்வேலி மாவட்டம் சென்றடைந்தேன்.

பனிரெண்டாம் வகுப்பு வரை மெட்ரிக்குலேசனில் படித்த எனக்கு அங்கு எல்லா பாடங்களும் தமிழில் இருந்தது கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் ஒரு மலைப்பை உருவாக்கி விட்டது. சம்மந்தமே இல்லாத அக்கவுண்டன்சியும் எக்கனாமிக்ஸ்சும் என்னை பார்த்து ஏளனமாய் சிரிப்பது போலவே தோன்றும் எனக்கு.

அத்தனை வேப்பம்பூ கசப்பான பாடங்கள் மத்தியில் எனக்கு பிடித்தது "மேனேஜ்மன்ட் லா" மட்டுமே. அதை மட்டுமே கொஞ்சம் சுவாரசியமாய் கற்றுக்கொண்டேன். ஒரு வருங்கால லாயருக்கு மிகவும் தேவையான சப்ஜெக்ட் அல்லவா...!

அப்பொழுது எங்களுக்கு "மேனேஜ்மன்ட் லா" எடுத்தது எங்கள் இன்ஸ்டிடியூஷன் ப்ரின்சிபால். எப்பொழுதாவது மட்டுமே வகுப்புக்கு வரும் அவர் எப்பொழுதும் எங்களிடம் கேள்விகள் கேட்டு பதிலை எதிர்பார்ப்பது வழக்கம். பதில் தெரியவில்லை என்றால் புத்தகம் பார்த்து பதிலளிக்கலாம். அப்படியாவது ஒரு கேள்விக்கான விடையை மாணவர்கள் தெரிந்து கொள்வார்கள் என்பது அவர் எண்ணம்.

அவருடைய அந்த நடைமுறை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருந்தது. பின்னாளில் நானும் ஒரு கல்லூரி பேராசிரியையாக மாறிய தருணம் அவர் வழியையே என் மாணவர்களிடத்து பின்பற்ற துவங்கினேன்.

சரி, 1995-ம் வருடத்திற்கு திரும்புவோம். எங்கள் முதல்வர் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பெரும்பாலும் சரியாக பதிலளித்து விடுகிற நான் அவர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் தெரியாமல் புக் திறந்து வாசித்து பதிலளித்தேன்.

அவரோ நான் உன்னை புக் பார்த்து பதில் சொல்ல சொல்லவில்லையே என கேட்க, எப்படியும் அதை தானே சொல்ல போகிறீர்கள் என்று நானும் பதில் சொல்ல, உன் பெயர் என்ன? ஊர் என்ன? அப்பா பெயர் என்ன? ப்ளஸ் டூ எங்கு படித்தாய் என அடுக்கடுக்காக கேள்விகளை அடுக்கி கொண்டே சென்றார்.

நானும் பெயர், ஊர், சொல்லி விட்டு அப்பா பெயர் ஸ்ரீதரன், படித்தது குட் ஷெப்பர்ட் மெட்ரிகுலேசன் பள்ளி என்றேன்.

அட, நீ தலைவரோட பொண்ணா என அவர் கேட்க, இல்லை, அவர் தான் என் அப்பா என்று நான் சொன்னதைக் கேட்டு அப்படியே உன் அப்பாவின் அதிகார தோரணை உன்னிடம் இருக்கிறது என்றவாறே சென்று விட்டார்.

மேலும் மூன்று நாள் கழித்து, சனி, ஞாயிறு விடுமுறை முன்னிட்டு சொந்த ஊரில் ஓய்வில் இருக்கும் போது ஒலித்த ஒரு போன் காலை எடுத்து காதில் பொருத்தி ஹெல்லோ என்றேன்.

எதிர் முனை: ஜீவா இருக்காளா?
நான்: நான் தான் பேசுறேன், நீங்க?

அவள் பெயரை கேட்டதும் அவள் என் பனிரெண்டாம் வகுப்பு சக மாணவி என்பதை புரிந்துக் கொண்டேன். அதிகம் பரிட்சயம் இல்லாத அவள் எனக்கு போன் பண்ணியதை கண்டு வியந்து கொண்டே, "என்ன விஷயம்" என வினவினேன்.

"இப்போ என்ன படிச்சுட்டு இருக்க?" அவளின் கேள்விக்கு பதிலளித்ததும், "உங்கள் ப்ரின்சிபால் சரியான முசுடாமே, தொனதொனனு கேள்வி கேட்டு சாகடிப்பாராமே" என்ற அவளின் கேள்விக்கு பதிலாக, அதெல்லாம் ஒன்றுமில்லை, அவர் நடத்தும் பாடம் எனக்கு பிடிக்கும்" என பொதுவாக பதிலளித்தேன்.

"சரி சரி, அவரை நான் ரொம்ப கேட்டேன்னு சொல்லு, ஏன்னா அவர் தான் என் அப்பா" என்றவாறே தொடர்பை துண்டித்து விட்டாள்.

அதன் பின், அவள் நம்பர் தெரியாததால் என்னால் அவளோடு பேச முடியாமலே போய் விட்டது. அவளை பற்றிய எந்த தகவலும் இன்று வரை எனக்கு கிடைக்கவே இல்லை. ஏனோ அவளை பற்றி அறிய ஆர்வமும் இல்லாமலே நாட்கள் வருடங்களாக மாறி, கரைந்து கொண்டே சென்று விட்டது.

அதன் பின், அந்த ஒரு வருட வாழ்க்கை என் நினைவுகளோடு மட்டுமே ஐக்கியமாகி போக, நானோ விலங்கியலோடும் பின் நுண்ணுயிரியலோடும் கலந்து போனேன். நுண்ணுயிரியல் துறை என்னை விடாப்பிடியாய் பிடித்துக் கொள்ள, கல்லூரி விரிவுரையாளராய் பின்பு அதே துறை தலைவராய் வாழ்க்கை சக்கரம் உருண்டு கொண்டே இருக்கிறது.

சில நிமிடங்களே நினைவில் நின்ற என் மரியாதைக்குரிய ப்ரின்சிப்பாலும் அவர் மகளும் அந்த நிமிட உணர்வுகளை மகிழ்ச்சியாய், ஒரு புன்னகையை சிதற விட்டு மறைகின்றனர்.

மற்றுமொரு நினைவுகளோடு மீண்டும் சந்திக்கிறேன்...


No comments:

Post a Comment