Pages

Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Tuesday, 27 May 2014

கழுமரக் கதறல்...!


காற்றின் சுழற்சியோ,
இல்லை விதியின் சதியோ,
திசைமாறி போய் விட்ட
கட்டுமரத்தின் நுனியொன்றில்
படபடத்துக் கொண்டிருக்கிறது
அந்த வெள்ளைக் கொடி...!

இன்றாவது ரட்சிக்கப்பட்டுவிட
மாட்டோமாவென தகித்த
அந்த ஆத்மாக்களின் கண்களுக்குள்
குளுமையாய் தென்பட்டன
மூங்கில் காடுகள்...!

இதோ கரை தட்டுப்படுகிறதென
சற்றே ஆசுவாசப்படுத்திய
நேரத்திலே தான்
சமாதானத்தின் தூதுவன்
கழுமரத்தின் உச்சியிலிருந்து
கொடிப் பற்ற கை நீட்டுகிறான்...!

இது அலங்கரிக்கப்பட்ட
கொலைக்களமென்றறியாத
ஆத்மாக்களின் கூக்குரல்
தூரத்தே தேயத் துவங்கியது...!

கொஞ்சம் கொஞ்சமாய்
இடம் விட்டு
நழுவிக் கொண்டிருக்கிறது கட்டுமரம்.
வீசியெறியப்படும்
செங்குருதிகளின் வழித்தடத்தோடு...! 

Sunday, 4 August 2013

அக்றிணையில் ஒரு நேசம்...!


அக்றிணையில் ஒரு நேசமென
தலைப்பிட்டு காத்திருந்தேன்
கவியொன்று படைக்க...!

கண்முன் வந்து சென்றது
நேற்று தெருவோரம்
பார்த்த பூனைக்குட்டி...!
மியாவ்வென மிழற்றியபடியும்
அகதியாய் இருப்பிடம் தேடியபடியும்...!

ஆசையாய் அணைத்துக் கொண்டே
அதற்கோர் ஆதரவை
வேண்டிய ஆசை மகள்
மனம் கலங்கலாகாதென
தலையசைத்திருந்தேன் நானும்...!

கண்டெடுத்த பூனைக்குட்டி
காணாமல் போனதென
காலை முதல் அரற்ற துவங்கியிருந்தாள்
என் உதிரத்தில் உதித்தவள்...!

கண்கள் குளமாகி அழுதுதழுது
தேம்பிய அவள் முகம் பார்த்து
எனக்குள் எதுவோ பிசைய துவங்கியது...!

அட! திடீரென அவள் கையில்
தொலைந்து போன பூனைக் குட்டி...!

“ஏண்டா விட்டுட்டு போன?”
வண்டியில அடிபட்டா நசுங்கி
போய் செத்திருப்ப...
நாயும் கடிச்சிருந்தா
நார் நாரா கிளிஞ்சிருப்ப...

வாய் புலம்பல் தொடர்ந்த படி
ஒரு கையால் பிடித்துக் கொண்டு
மறுகையால் அது மிரள
தலை மேலே ஒரு குட்டு...!
மறுநிமிடம் வலிக்குமென பதறி
அடித்த இடம் தடவியபடி
தொடர்ந்து கொண்டிருந்தது அவள் புலம்பல்...!

ஏன் அழுகிறாள்? எதற்கு அடிக்கிறாள்?
புரியாமலே அவள் மடி சுருண்டது
பூனைக் குட்டி, அடைக்கலம் தேடி...!
கண்டுகொண்டேன் நானும்
அக்ரிணையில் ஒரு நேசத்தை...!

வசப்படும் உணர்வுகள்...!



உணர்வுகள் உரசப்படா
வெற்றுக் காகிதத்தின் மற்றுமோர்
பக்கமாய் வாழ்க்கை சுழற்சி...!

ஆழியின் ஆக்கிரமிப்பு
மனசெல்லாம் சுழலச் செய்து
அஹிம்சை வெல்ல சபதமிடும்...!

வலிகள் சுமந்தே கதறிட்ட மனம்
கானல் கண்டு மயங்கிட துணியும்
காரணங்களே வேண்டாமல்...!

மனங்கள் மயங்கிடும் மாய
வலைக்குள் எதிர்ப்புகள் இல்லாமல்
வீழ்ந்து விடலாம், எழுர்ச்சி என்றோ?

நிலவு மறைக்கும் கார்மேகம் போலே
மறைந்தே கிடக்கின்றன
நமக்கான விடியல்...!

மழை பொழிந்ததும்
விடுபடும் நிலவாய்
வசப்படட்டும் வாழ்க்கை என்றும்...!

கனவு காதலனும்... கைப்பிடித்த கணவனும்...

வாய் வரை நீண்டுயர்ந்த கை
ஏனோ உணவூட்ட மறக்கிறது...
வெறித்து முறைக்கும் விழிகள்
எங்கும் பார்வை கொடுக்க மறுக்கிறது ...

இன்னதென்று அறிந்துவிட துடிக்கும்
இனமறியா உணர்வுக் கலவை
உயிர்நாடி தொட்டு
ஊடுருவி பாய்கிறது.....

வியர்வை ஊற்றில்
நீராடும் காலமுமாய்....
நீ வரும் நொடி வரை
எதிர்பார்ப்புகள் பொய்யாய்...
வந்து விட்ட நொடியோ
தூண்டில்புழு கவ்விய மீனாய்....

காதலாகி, காமமாகி
பின் அதுவே பயமுமாகி...
வெறித்து விட்டப் பார்வையும்
பதில் சொல்லா மவுனமும்
இன்று வரை தொடர்கதையே...

யாரோ யாரிவரோ...!


என் கல்லூரி வாழ்க்கை
ஆரம்பித்த போது துவங்கியது
எனக்கும் அவருக்குமான பந்தம்...!

வழக்கமாக நான் செல்லும் சாலை வழியே
கால்களையே துணையாக்கி வேக வேகமாக
நடை பயிலும் அறுபதை தாண்டிய முதியவர் அவர்...

எங்கு செல்கிறார் நானறியேன்,
எப்போது திரும்புவார்? அதுவும் அறியேன்...
ஆனால்... தினம் தினம்
அவர் பயணம் ஒரே இலக்கை நோக்கி...

சவரம் செய்யப்படா தாடி
நெஞ்சு குழி தாண்டி நீண்டிருக்க...
தலைவாரி வகிடெடுக்க வழியில்லாமல்
பாலைவனம் ஒன்று
தலை மேலே தோன்றியிருக்க...
இடது தோளிலே ஒரு பை...
வலது கையிலோ நீண்ட நெடிய ஒரு குச்சி...!

அந்த தாடிக்குள் ஒளிந்திருக்கும்
கதை என்னவென்று நான் அறியேன்...
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்...
அது சவரம் செய்ய காசில்லாமல்
வளர்ந்து கொண்டே செல்கிறது...!

எண்ணை வளம் காணா
வட்ட நிலாவாய் அவர் முன்வழுக்கை
அழகாகவே தோன்றியது எனக்கு...!

என்னதான் இருக்குமென்ற
ஆவல் கூட தோன்றவிடாமல்
அழுக்கு படிந்ததாய் அந்த பை
நிரந்தர கர்ப்பம் தாங்கி
அவர் தோள் வழியே சவாரி செய்யும்...!

அவரின் நடை பயணத்திற்கு பாதைவகுத்து
புதிதாய் ரோடு போட்டு
அவர் நடையின் வீரியத்தை கம்பீரமாக்கும்
அவர் கூடவே நடைபயிலும் அந்த குச்சி...!

அவர் உண்பாரா? யார் அவருக்கு உணவளிப்பர்?
தொக்கி நின்ற கேள்விக்கொரு
விடை கிடைத்தது ஓர் நாள்...!

வெளிர் நரை மூதாட்டி ஒருவர்
பழயென கழிதலை அலுமினிய தட்டில்
ஊற்றி பசியாற்றிக் கொண்டிருந்தார்,
அருகிலேயே தன் முறை வருமென
முறைத்துக் கொண்டே ஒரு நாலு கால் ஜீவன்...!

தினமும் நான் அவரை கடந்து செல்கையில்
திரும்பி பார்ப்பதும், பரஸ்பரம் புன்சிரிப்பமாய்
கடந்து சென்றது எங்கள் மூன்று வருட பந்தம்...!

காலத்தின் ஓட்டத்திலே உறவுகள் அறுந்ததாய்
விடுபட்டு போனது என் கல்லூரி மட்டுமல்ல
கூடவே நான் தினமும்
ரசித்த அந்த பெரியவரும் தான்...!

இரண்டு வருட இடைவெளியில் மீண்டும்
அதே பாதையில் பயணிக்க துவங்கி
ஆறு மாதமாய் நானும் அவரை காணாமல் தேடியலைய
இதோ என் வீட்டு வாசலை வேகமாய் கடக்கிறார் அவர்...!

பதிலுரைப்பார் எங்கே???

சந்ததி வேண்டி
பிள்ளையாரை சுற்றிய நான்...
சந்ததி சொல்லியதால்
தெருக்கோடியில் இன்று...
முற்றுபெற்று விட்டதாம் என் வாழ்க்கை...!
முடிந்து போனதென
எதை வைத்து கணித்தார்கள்???

ஏக்கங்கள் நிறைந்த மனதுக்குள்
காரணங்கள் அறிய...
என் வெள்ளிவிழா வாழ்க்கைக்கு
பதிலுரைப்பார் எங்கே???
கொதித்து கொண்டிருந்த குருதியில்
குளிர் காய்ந்தவர்கள்...
இவர்கள் இன்று வற்றிய
மனித நேயத்தின் காரணகர்த்தாக்கள்...

பெருகும் மக்கட்தொகை நடுவே
மலையாய் பெருகும் தேவைகள்...
பெருகி வரும் எண்ணிக்கைகளில்
சொந்தங்கள் மட்டும் அருகுவதேனோ???

சுருங்கி கொண்டிருக்கும் என் தோல்
காட்டுவது என் வயதையல்ல...
நான் பெற்றவனின் மனதை...!
தேவைகளுக்கிடையில் நடந்த போட்டியில்
நான் தேவையில்லாமல் போய்விட்டேன்...!!!

காலத்தின் காயம் (அவரவர் பார்வையில் நான்)...!



கவிழ்ந்திருந்த என் தலையின்
நொடிக்கொரு அசைவு
உணர்த்தி செல்லும்
என் விசும்பல்களின் ஆக்ரோஷத்தை...!

உன்னை தேடித் தேடி
தோய்ந்து போன கண்கள்
கண்ணீர் வற்றி அரைமயக்கத்தில்
ஒரே புள்ளியில் நிலைத்து நிற்கின்றன...!

உன் கைகள் பற்றத் துடிக்கும்
என் கரங்கள்
காற்றிலும் அலைபாய தெம்பில்லாமல்
வெற்றுத்தரையில்
ஜீவனற்று வீழ்ந்து கிடக்கின்றன...!

காத்திருந்த காலங்கள்
வாழ்வின் வசந்தம் பறித்து...
வெப்பச் சிந்தனைகளை நெருஞ்சி முட்களாய்
காலடி கீழ் சிதற விட்டுச் செல்கின்றன...!

வந்துவிட மாட்டாயா? என்ற
எதிர்பார்ப்பு நொடிக்கொரு முறை
உயிர்பித்து பின் மரணம் தழுவுகிறது...!

தொண்டை குழிக்குள் ஒரு கேவல் மட்டும்
உன் பெயரை சொல்லியே விக்கித்து
உயிர் மிச்சமிருப்பதை
நிலைநாட்டிச் செல்கிறது...!

இங்கு இறுதிப் புள்ளியில் காத்திருக்கும் நான்
வரமாய் பெற்ற காதலனையோ...
இல்லை...
தவமாய் பெற்ற மகனையோ...
எதிர்பார்த்து உயிர்த்திருக்கிறேன்...!

“அவரவர் பார்வையில் நான்”

வாழ்வியல் நந்தவனம்...!


அழகாய் பூத்திருக்கும் நந்தவனம் அது...
பலவகை வாசங்களின் குவியலாய்
அங்கு கலந்தே நிறைந்திருக்கும்
ஒவ்வொருவரின் சுவாசங்களும்...

தகிப்பின் வீரியம் குறைத்து
பூமி மகளோடு சீண்டி விளையாடயெண்ணி
வெப்பக்கரங்களால் அவள் ஈரமேனி தீண்டி
இரவெல்லாம் அவளோடு களித்து கிடந்த
பனித்துளிகளை ஊடல் கொள்ளச் செய்கிறான் ஆதவன்...!

மைனாக்களின் கீச்சுக்குரலின் இனிமையோசை
காற்றுக்கும் கிளர்ச்சியூட்டி
மறைந்திருக்கும் குயிலை வெளிப்படச் செய்து
ஒரு ஸ்வரக் கச்சேரியை துவக்குகிறது...!

மாதத்தின் முடிவில் உயிர் பிரியுமென
நாட்களை எண்ணி சோர்ந்திட முயலாமல்
அங்கு பறந்து திரியும் வண்ணத்துப் பூச்சிகள்
தேன்களின் மேலான ஈர்ப்பில் லயித்துக் கிடக்கும்...!

நாளை துளிர்க்க போகும் சந்ததியை
சுமக்கப் போகும் பூமித்தாயை...
இன்றே முத்தமிட்டு வரவேற்க தயாராகின்றன
ஆயுள் முடிந்ததாய் அறிந்து விட்ட மலர்களும்...!

பழுத்த இலைகளும் உரமாய் போய்விட
அவைகளின் மேலே அஸ்திவாரமெழுப்புகின்றன
விதைத் துளைத்து… புது உலகம் காணும்
பச்சையக் குழந்தைகள்...!

இருண்டு விட்டதென உயிரினங்கள் எதுவும்
பிரபஞ்ச பந்தினை சபித்திடாமல்...
விடியும் என்ற நம்பிக்கையை நெஞ்சுள் கொண்டு
சற்றுநேரம் நிம்மதியாய் இமையுறக்கம் கொள்கின்றன...!

மரணிப்போம் என்று தெரிந்தும்
விட்டில் பூச்சி... விளக்கினை விடுவதாய் இல்லை,
எரிவதால்... சுமக்கும் திரியும் கருகுமேயென
ஒளிதரும் சுடரும் சோர்வதாய் இல்லை...!

பகலும் இருளில் மூழ்கித்தான் போகிறது
இரவும் விடியலை அணிந்துதான் கொள்கிறது...
நிதம் நிதம் தொடரும் கண்ணாமூச்சியில்
சிலரின் அஸ்தமனம், சிலரின் விடியல்...
ஆனாலும் அந்த நந்தவனம்
மறுநாளும் அழகாய் தான் பூத்திருக்கிறது...!

Sunday, 21 July 2013

மவுன சாட்சிகள்...!



அது ஒரு இருட்டு கிராமம்....
வெளிச்சமிருக்கிறது, ஆனால் பச்சையம் இல்லை...!

நாசி நுழையும் காற்றோ... புழுதியோடு
கருகல் வாசத்தையும் சேர்ந்தே சுமக்கிறது...!
குழந்தைகள் இருக்கிறார்கள்,
பெண்கள் இருக்கிறார்கள்,
வாலிபர்களும் வயோதிகர்களும் கூடவே இருக்கிறார்கள்...!
ஆனால்... உடலிலோ உயிர் மட்டுமில்லை...!
அவர்களோ நடப்பவை யாவும் அறியா மவுனமாய்
கருகல் ஆடை பூண்டு கட்டையாய் கிடக்கிறார்கள்...!
ச்சே, என்ன வாடை இது?
மூக்கை பொத்தியவாறு ஒவ்வொரு அடியாய்
கவனமாய், விரைந்து கடக்கிறார்கள் பத்திரிகை வியாபாரிகள்...!

என் மதுகோப்பைகளில்...
உன் ரெத்தம் நிரம்பி வழியட்டும்...
மவுனமாய் நீயும்
எதிர்ப்பில்லாமல் மரணித்துப் போ...! வென
நெற்றிப்பொட்டை குறிவைக்கிறான் ஒருவன்...

காட்சி மாற்றம்...! அழகியல் மாறுகிறது...
மெல்லிசையும் இடையின உரசல்களோடும்...
அது ஒரு வெற்றி அறிவிப்பு விழா...!
எதிர்த்தடிக்க ஆட்களே இல்லாமல்...
இனம் அழித்து இனம் பெருக்கும்
இராஜதந்திரிகளின் அரசாங்க கோட்டையது...!
ஒவ்வொருவரின் முகத்தில் தான் என்ன ஒரு தேஜஸ்...!
அவர்களின் வெற்றிகளில் பங்கெடுத்து
கொக்கரித்து குதூகலிகின்றனர் மனித வேட்டையாடும்
அரசாங்க சுகவாசிகள்...!

இதோ இங்கே....
தொலைக்காட்சி பெட்டிகளும் இணைய தளங்களும்
அலறிக்கொண்டிருக்கின்றன...!
சும்மாவா? நாட்டை ஆளும் அதிபரின் ஜலதோஷம் அல்லவா?
பலியாகிக் கொண்டிருக்கும் கருவறைக் குழந்தைகளின்
சாம்பல்கள் மேல் ஆங்காங்கே எழுப்படுகின்றன
அவர் ஆயுள் நீட்டிப்பிற்கான பிரார்த்தனை கூட்டங்கள்...!
கோடிக்கணக்கில் அவர் உயிருக்காய்
உயிர்விட்டுக் கொண்டிருக்கும் மெழுகுவர்த்திகளோடு
கண்ணீர் உருகி தொழுகின்றனர் மக்களின் பெரும்தொகையினர்...!

திடீரென பொழியும் குண்டு மழை...
அய்யோ, அங்கே எரிந்து கொண்டிருப்பது என் சகோதரியா?
என் தாயெங்கே? தந்தையங்கே?
தனியாய் தவித்துக் கொண்டிருந்தது தனயனின் இதயக்கூடு...!
தெருவோரம் கூறுகளாக சிதறிக் கிடக்கின்றனர்...
முந்தைய நொடி வரை கூட்டமாய் உறவாடிய உறவுகள்...!
யாராவது கைகொடுங்களேன்...!
யாராவது காப்பாற்றுங்களேன்...!
கதறும் வாய்களுக்குள் அமிலம் வார்த்துச் செல்லும்
குரூர மனித நேயம்(?)...
வால் மிதித்தால் கோபம் கொண்டு சீறிபொங்கும்
பூனையின் அதிகாரம் கூட உன்னிடத்தில் இருக்கலாகாது...
என்று கொக்கரிக்கிறான் நரவேட்டை நடத்தும் வேட்டைக்காரன்...!

ஹப்பா... என்ன ஒரு பயங்கரமான கனவு அது...
கலைந்திருக்கும் கூந்தல் அள்ளி முடித்து,
இன்றைய சமையலுக்கான கோழியை அறுக்கிறேன்...
அங்கே என் கனவு கதாபாத்திரங்கள்
அடுக்கடுக்காய் சதையிழந்து கொண்டிருக்கிறார்கள்...!

அரூபமாய் ஒரு தேன்சிட்டு...!



இப்பொழுதெல்லாம் உன்னை
தொலைக்காட்சியில்
மட்டுமே காண்கிறேன்...!

கவலைகள் என்றொன்று
அறியா பருவத்தில்
படுக்கையறை ஜன்னல் வழியே
தினமும் உன் தரிசனம்...!

வேப்பங்குச்சி வாயிலிருக்க
குறுகுறுவென உன்னையே
உற்றுப்பார்த்தபடி எத்தனையோ நாள்
மலைத்துப்போயிருக்கிறேன்...

சிறுதுரும்புகள் கொண்டு
நீ கூடு நெய்யும் நேர்த்தி கண்டு
நானும் துரும்பு தேடி அலைந்த காலங்கள்...
வாழ்வின் அறியா வசந்தங்கள்...

இணையாக பறக்கும் அழகும்
இணைந்தே இசைக்கும் கீதமும்
நான் அறிந்திரா காதலுக்கு
முகவரி எழுதி செல்லும்...

ஓர்நாள் கீச் கீச் ஒலியொன்று
புதிதாய் கேட்க...
ஒரு திருடி போல் பதுங்கி
உன்னிடம் நோக்குகிறேன்...
தாயாய் உன் சேய்க்கு
உணவளித்த அழகு, என்னையும்
தாயாய் உணர்மாற்றம் செய்தது...

ஒவ்வொரு நாளும் கைநீட்டி
உன்னை தொட்டுப் பார்க்க ஆசை,
ஆனாலும் உன் சுதந்திரம் பறிபோகுமென
அன்றே கட்டிப்போட்டேன்
என் கைகளை...

கூட்டமாய் பறக்கும் நேர்த்தியும்,
பறந்து பிடித்து விளையாடும் ரசனையும்
சொந்தங்களை காதலித்துப் பாரென
பாடம் நடத்திச் சென்றது...

இன்று நீயும் இல்லை,
மனித உறவுகளின்
இணக்கங்களும் இங்கில்லை...
உன்னோடு சேர்த்து
அவைகளையும் எங்கே கொண்டு சென்றாய்?

பல்கிப்பெருகிய வளர்சிதை மாற்றம்...
ஏனோ காணா அரூபமாய்
உன்னை மாற்றி விட்டு
மனதுக்குள் வெறுமை புகுத்தி
வேடிக்கைப்பார்க்கிறது...!

இன்றும் என் ஜன்னல்கள் திறந்திருக்கின்றன...
உன்னை தாலாட்டிய மாமரம் கூட
இப்பொழுதும் அழகாய் தலையசைத்தபடி ...
கிளைகள் மட்டும் நீயில்லாத வெறுமையாய்...

உன்னை தேடிக்கொண்டிருக்கிறேன் நான்...
வாழ்வியல் மாற்றங்களால்
எதை எதையோ தொலைத்தபடி...

மாறிட வேண்டும்
ஓர் நாள் நானும் இப்படியாக..

ஊவா நாளாய் மனம்...!



மூலக்கூற்று முகில்களால் பிரசவிக்கப்பட்ட
விண்மீன் கூட்டங்கள்...

பரந்து விரிந்த பால்வெளியில்
மின்மப்பந்துகளாய் கண்சிமிட்டுகின்றன...

ஒளிகள் அடக்கி... ராட்சச கரம் விரிக்கும்
கருந்துளை நோக்கி பயணப்படுகிறது...
உள்ளிருப்பு விசைக்குள் உணர்வுகள் அடக்கி
வெடித்துச் சிதற காத்திருக்கும்
அழுத்தமான மனம் ஒன்று...

ஈரம் தேடி அலையும் நெஞ்சுக்குள்
வெற்றிடங்கள் ஈர்த்துக்கொள்ள...
கருமை சூழ்ந்து, விரக்தி ஒன்று
மொத்தமாய் குத்தகை கொள்ளத் துடிக்கிறது...

எரிகல் ஒன்று வலுவிழந்து வீழ்கிறது,
புவியிருப்பு விசைநோக்கி...
காற்றில் கரையும் அதன் கார்பன் துகள்கள்
கண்காணாமல் மறைந்து போகின்றன...

திசைகள் மறைக்கும் அமானுஷ்ய இருட்டுக்குள்
பளிச்சென வெளிச்சம் உதிர்க்கிறது,
நேர்வடக்கில் உறைந்திருக்கும்
ஒற்றை துருவ நட்சத்திரம்...

சிறுக சிறுக தேய்ந்து ஊவா நாள் காண்தல்
நிலவுக்கு மட்டுமே சொந்தமுமில்லை...
பின் பிறைவிட்டு பவுர்ணமி காண்தல்
சொற்பக்கால மனித வாழ்விலும் புதியதல்ல...

கொதிக்கும் ஆழ்மனம் அடங்கத் துவங்க
அடுத்த நிலைக்கு பயணிக்கிறது உள்ளுணர்வு...
பீடிக்க துவங்கிய கிரகணம் ஒன்றோ
விடியலை கொஞ்சம் கொஞ்சமாய்
விடுவித்துக் கொண்டிருக்கிறது...

பெண்ணீயம்



மனம் விரும்பும் தனிமை கூட கிடைப்பதில்லை
ஆழ்மன அடிவாரத்தில் கூடாரமிடும்
முகவரி இல்லா முகாரி ராகமொன்று
வெளிவர துடித்து அடங்கி வீழ்கிறது....

தனக்கென ஏதுமில்லா
எல்லாம் நிறைந்த வாழ்க்கை…
அறியாமலே வாழ்ந்து வீழ்வது
பிறந்த பிறப்பின் மேல் எழுதப்பட்ட சதி...

நாட்களின் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை
விடியலில் சுறுசுறுப்புக்கும் குறைவில்லை...
அழகாய் தான் தோன்றுகிறது வாழ்க்கை...

காலில் கட்டிய சக்கரமாய்,
தலைமை தாங்கும்
ராணுவ வீரனின் மனநிலை...
இங்கு நானின்றி ஓரணுவும் அசையாதென
மார்த்தட்டிக் கொள்கிறது...

உனக்கு என்ன தெரியும் என்ற கேள்வியை
ஆம், எனக்கு ஒன்றும் தெரியாது
என விடை காணும் மனம்....

சுதந்திரம் என்பது எதுவரை?
தாண்டி விட துடிக்கும் வேகத்தில்
அடிபட்டு வீழும் மனம்...
தடையாய் பிறர் கண்படா கண்ணாடி சுவர்....

அவளுக்கென்ன மகாராணி,
சொகுசு வாழ்க்கை என்பர்களுக்கு
எப்படி புரிய வைப்பது?
உள்ளுக்குள் தொலைத்துக்
கொண்டிருக்கும் தேடலை?

ஒவ்வொரு நாளின் விடியலும்
தொலைத்து விட்ட
குழந்தை மனமொன்றை தேடிக் கொண்டே,
பெண்ணீயம் மீண்டும் தன்
கூட்டுக்குள் சென்று கதவடைத்துக் கொள்கிறது...