Pages

Monday 28 October 2013

போலியோ என்னும் இளம்பிள்ளைவாதம்...!

போலியோ என்பது சிறு குழந்தைகளை தாக்கும் ஒருவகை வாத நோய் ஆகும். போலியோமைலிட்டிஸ் எனப்படும் இந்த இளம்பிள்ளைவாத நோய் மிக கடுமையான தொற்றுநோய் ஆகும். இது “போலியோ வைரஸ்” எனப்படும் வைரஸினால் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு வாய் வழியாக பரப்பப்படுகிறது. குறிப்பாக இந்த வைரஸ், பாதிக்கப்பட்டவரின் மலம் மூலமாக வெளியேறி, மாசுபடுத்தப்பட்ட நீர்நிலைகள், சுகாதாரமற்ற வாழ்வாதார இடங்களில் கலந்து பின் மற்றொருவரை தாக்குகிறது. 

போலியோ எவ்வாறு நம் உடலை பாதிக்கிறது?

சுகாதாரமற்ற உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் குழந்தைகள் அவ்விடத்தில் புழங்கும் முறைகளினால் மிக சுலபமாக இந்த வைரஸ் அவர்களின் குடல் பகுதியை சென்றடைந்து விடுகிறது. குடல் பகுதியில் இந்த வைரஸ் பல்லாயிரக்கணக்கில் பல்கி பெருகுகிறது. பின் படிப்படியாக இரத்த ஓட்டத்தில் கலக்க ஆரம்பிக்கிறது.

இந்த போலியோ வைரஸ் நம் உடலின் எந்த பாகத்தை தாக்குகிறது? அல்லது எத்தகைய அறிகுறிகளை உருவாக்குகிறது?

அறிகுறிகள்:

பெரும்பான்மையான போலியோ வைரஸ் தாக்குதலில் அறிகுறிகள் சுலபமாக வெளிப்படுவதில்லை. ஆனாலும் சிறிய அளவுகளிலிருந்து பெரிய அளவிலான பல்வேறு அறிகுறிகளை இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படுத்துகிறது.

1. பெரும்பாலும் குடற்பகுதியில் பெருகும் தருணங்களில் தொண்டை கரகரப்பு, காய்ச்சல், வாந்தி, வயிற்று வலி, மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கை உண்டாகுகிறது.

2. இந்த வைரஸ், மத்திய நரம்பு மண்டலத்துக்குள் நுழைந்து விட்டால் தலைவலி, கழுத்து மற்றும் முதுகுவலி, வயிற்று வலி, காய்ச்சல், எரிச்சல், வாந்தி ஆகிய அறிகுறிகள் தோன்றுகின்றன.

இதன் தாக்கம் தான் என்ன?

இதில் பாதிக்கப்படும் நரம்புகள் பொறுத்து தாக்கங்கள் மாறுபடுகின்றன.

1. சுமார் ஒரு சதவித மக்களிடையில், இந்த வைரஸ், மத்திய நரம்பு தொகுதியை (Central Nervous System - CNS) தாக்கி, இயக்குத்தசைகளை பாதித்து, பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது.

2. இந்த வைரஸ்கள் தண்டுவடத்தை பாதித்து உறுப்புகளை செயலிழக்கச் செய்கின்றன. குறிப்பாக இவை ஒருவரின் கால்களை முடக்குகின்றன.

3. அல்லது சதைப்பகுதிகளில் ஊடுருவி, அவற்றை மிருதுவாக்கி சதைப்பகுதியை சீரழிக்கின்றன.

4. மிகவும் அரிதாக, இவை மூளை செல்களை தாக்கி தலைவலி, மனநிலை பாதிப்பு, மற்றும் மூளை வாதத்தை ஏற்படுத்துகிறது.

இவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்று பார்த்தால் உடல்நிலை சார்ந்த பாதிப்புகள் மற்றும் மனநிலை சார்ந்த பாதிப்புகளோடு சமுதாய பாதிப்புகள் அதிக அளவில் இருக்கும்.

1. நரம்பியல் இயக்க பாதிப்பினால் நடப்பதில் சிரமம்
2. மூளை செல்கள் பாதிப்பினால் சுய சிந்தனை இழத்தல்
3. தசை நார்களின் பாதிப்பினால் உடல் நிலை தளர்வு
என இவர்கள் வளர வளர பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகுகிறார்கள்.

இத்தகைய போலியோ வைரஸ் தாக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்வியல் முறை முற்றிலுமாக மாறி விடுகிறது.

1. இவர்கள் சராசரி வாழ்க்கை முறையை இழக்கிறார்கள்.
2. மற்றவர்களின் கேலி கிண்டல்களுக்கு ஆளாகிறார்கள்.
3. ஒரே இடத்தில் முடக்கப்பட்டு தன்னம்பிக்கையை தொலைக்கிறார்கள்.
4. சுய இரக்கம், சுய பச்சாதாபம் கொண்டு அடுத்தவர்களை நம்பி வாழ்கையை நகர்த்தும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.


சரி, இவர்களுக்கான தீர்வு தான் என்ன?

இந்த நோயை முற்றிலும் குணப்படுத்த முடியுமா என்று கேட்டால் முடியாது என்பது தான் பெரும்பாலான பதிலாக இருக்கிறது. நோயின் வீரியத்தை வேண்டுமென்றால் மிகவும் சிரமப்பட்டு குறைத்துக்கொள்ள முடியும்.

எவ்வாறு அதன் வீரியத்தை குறைக்கலாம்?

இது பாதிப்பின் தன்மையை பொறுத்தது.

1. வலுவிழந்த தசைகளில் நோய் தொற்றை தடுக்க மருந்து/ ஆன்டிபையாட்டிக்ஸ் (antibiotics) கொடுப்பது.
2. மிகுதியான வலிகளுக்கு வலி நிவாரணி கொடுத்தல்.
3. மிதமான உடற்பயிற்சி.
4. சத்தான உணவு பழக்க வழக்கங்கள்.
5. செயற்கை உறுப்பு மாட்டுதல்.
6. தேவைபட்டால் அறுவைசிகிச்சை.

இவற்றின் ஏதாவது ஒன்றின் மூலமாகவோ, இல்லை தேவைக்கேற்ற சிகிட்சை மூலமாகவோ குறைந்தபட்ச மீட்சியை காணலாம்.

இத்தனை சிரமங்கள் கொடுக்கும் இந்த இளம்பிள்ளை வாதத்தை வராமலே தடுத்து விட்டால் தான் என்ன? அப்படி நம்மால் தடுக்க முடியுமா?

ஆம், கண்டிப்பாக நம்மால் தடுக்க முடியும். எப்படி?

1. சுகாதாரம் பேணுதல் – நம்மை சுற்றி இருக்கும் சூழலை சுகாதாரமாக வைத்துக்கொள்வோம்.

2. ஆரோக்கியம் காத்தல் – நல்ல சத்தான உணவுகள் கொடுத்து குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம்.

3. நோய் தடுப்பு முறை – தடுப்பூசி அல்லது தடுப்பு சொட்டு மருந்து போடுவது.

நோய் தடுப்பு முறை:

இந்த நோய் தடுப்பு முறை பற்றி நாம் கொஞ்சம் விரிவாக காணலாம்.

வருமுன் காப்பதே இதன் தாரகமந்திரமாகும். போலியோ பற்றி இங்கு குறிப்பிடுவோமானால் நம் குழந்தைகளை இந்த கொடிய வைரஸ் தாக்கும் முன்பே அதே வைரஸ் கொண்டு தற்காத்துக்கொள்ளலாம்.

எப்படி?

இளம்பிள்ளைவாதம் உருவாக்கும் இந்த போலியோ வைரஸின், நோய் உருவாகும் காரணியை நீக்கி விட்டு அதன் எதிரான எதிர்பாற்றலை அதிகபடுத்தும் முறையே இந்த நோய் தடுப்பு முறை. இதனை ஊசி மூலமாகவோ இல்லை சொட்டு மருந்து மூலமாகவோ குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

வகைகள்:
1. பலகீனப்படுத்தப்பட்ட வைரஸ்
2. செயலிக்க செய்யப்பட்ட வைரஸ்

இப்படி நோயினை உருவாக்க முடியாத வைரஸை குழந்தைகளின் உடலுக்குள் செலுத்தி, அவற்றிக்கு எதிரான நோய் தடுப்பாற்றலை தூண்டுவதன் மூலம் வீரியமிக்க போலியோ வைரஸ்கள் அவர்களை அணுக விடாது தடுத்து விடலாம்.

இப்பொழுது மிகவும் பிரபலமான முறையாக Oral Polio Vaccine (OPV) அதாவது வாய்வழி சொட்டு மருந்து உள்ளது.

1. இதனை அறிமுகபடுத்தியவர் யார்?
2. இதனை எப்படி கொடுக்க வேண்டும்?
3. யாருக்கு கொடுக்க வேண்டும்?

1961-ம் ஆண்டு இந்த போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் முறையை முதன்முதலில் அறிமுகபடுத்தியவர் ஆல்பர்ட் சாபின் (Albert Sabin). இதில் போலியோவை ஏற்படுத்தும் மூன்று வகையான வைரஸ்களும் சரியான விகிதத்தில் பலகீனப்படுத்தப்பட்டு குழந்தைகளுக்கு வாய் வழி சொட்டு மருந்தாக கொடுக்கப்படுகிறது.

இதில் அப்படி என்ன விசேசம்?

இப்படி கொடுக்கப்படும் இந்த பலகீனப்படுத்தபட்ட வைரஸ், குழந்தைகளின் வாய்வழியாக குடல் பகுதியை சென்றடைகிறது. அங்கு இது நான்கில் இருந்து ஆறு வாரம் வரை உயிர்த்திருந்து குழந்தைகளின் நோய் எதிர்ப்பாற்றலை தூண்டுகிறது. இதனால் மூன்று விதமான போலியோ வைரஸ்களுக்கு எதிரான பிறப்பொருள் எதிரியை (antibodies) நோய் தடுப்பு மண்டலம் (immune system) உற்பத்தி செய்கிறது. இதனால் போலியோவிற்கு எதிரான நோய்தடுப்பாற்றல் வலுபடுத்தப்படுகிறது. அதன் பின் வீரியமிக்க வைரசுகள் உடலில் நுழைந்தால் அவை நுழைந்த வேகத்திலேயே அழிக்கப்படுகின்றன. போலியோ வராமல் மனித உயிர்களும் பாதுகாக்கப்படுகின்றன.

இவற்றின் மற்றைய விசேஷமாக:

1. கொடுப்பது சுலபம் – வாய் வழியாக சுலபமாக கொடுக்கலாம்
2. திறமையான மருத்துவர் துணை தேவையில்லை – செவிலி தாயோ இல்லை சுகாதாரத்துறை பணியாளரோ போதும்.
3. சுத்திகரிக்கப்பட்ட ஊசிகளின் தேவைகள் இல்லை
4. வலிகள் இல்லாத உட்புகுத்தல் முறை
5. மிக மிக மலிவானது.
6. பாதுகாப்பானது
7. நீண்ட நாள் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்க வல்லது.
8. மிக மிக பாதுகாப்பானது என்று உலக சுகாதார மையத்தால் சான்று அளிக்கப் பட்டது.

போலியோ சொட்டு மருந்து முகாம்:

இந்தியாவில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ நோய் வராமல் தடுப்பதற்கான சொட்டு மருந்து அளிக்கும் திட்டம் அனைத்து மாநிலங்களிலும், இந்திய ஆட்சிப்பகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இலவச சொட்டு மருந்து அளிக்கும் திட்டத்தை குறிப்பிட்ட நாளில் மாநில அரசுகள் அல்லது ஆட்சிப் பகுதி நிர்வாகங்கள் செயல்படுத்துகின்றன. மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், பேருந்து நிலையம், தொடருந்து நிலையம், விமான நிலையம், வழிபாட்டுத் தலம், பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்கள் போன்ற பகுதிகளில் இதற்கான சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து அளிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்தப் போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழ்நாட்டில் 40 ஆயிரத்து 399 மையங்களில், சுமார் 2 லட்சம் ஊழியர் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. இந்த மையங்கள் மற்றும் பணியாளர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் மாறுபடக்கூடும்.

இதனை எத்தனை தடவை யாருக்கு கொடுக்கலாம்?

பெரும்பாலும் இதனால் பக்க விளைவுகள் இல்லையென்பதால் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் யாருக்கு வேண்டுமென்றாலும் (சில மருத்துவ ஆலோசனைகள் தவிர்த்து) எத்தனை தடவை வேண்டுமென்றாலும் கொடுக்கலாம்.

கிளம்பி விட்டீர்களா?

போலியோவை பற்றி இத்தனை தெரிந்து கொண்டோம். இதனை நீங்கள் மட்டும் அறிந்து கொண்டால் போதுமா? முடிந்தவரை மற்றவர்களுக்கும் இதனை சொல்லிக் கொடுங்கள். உங்கள் குழந்தைகளை அருகில் உள்ள போலியோ தடுப்பு முகாமுக்கு எடுத்து சென்று சொட்டு மருந்து கொடுத்து அவர்களின் ஆரோக்கியமான பிரகாசமான வாழ்க்கைக்கு வழி செய்யுங்கள்.

ஒரு நிமிடம் கவனியுங்கள்:

ஏற்கனவே இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களை ஒரு நோயாளியாக பார்க்காமல் சக மனிதராக பார்க்கும் பக்குவம் நம் அனைவருக்கும் வேண்டும். இதன் மூலம் போலியோ என்னும் கொடிய நோயை இந்த உலகத்தை விட்டு விரட்டுவோம் என்று உறுதி எடுப்போம். வாழ்க மனிதம்.

9 comments:

  1. பகிர்ந்து கொண்டேன்... எனது வட்டத்தில் g+... நன்றி...

    ReplyDelete
  2. நல்ல தகவல் மேடம்...

    ReplyDelete
  3. போலியோ தடுப்புக்கு உகந்த கட்டுரை;நன்றி.

    ReplyDelete
  4. வணக்கம்
    நல்ல விழிப்புணர்வுப்பதிவு அருமை வாழத்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_3396.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  6. Today also :

    Visit : http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_30.html

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. அருமையான தகவல் ... அம்மா

    ReplyDelete
  8. வணக்கம் !
    அருமையான பயனுள்ள நல்ல தகவலுக்கு மிக்க நன்றி தோழி .
    தொடர்ந்தும் இது போன்ற விழிப்புணர்வு தரும் பகிர்வுகளைத்
    தொடரும் படி கேட்டுக் கொள்கின்றேன் .

    ReplyDelete
  9. Excellent article.
    Happy new year.
    subbu thatha.
    www.subbuthatha.blogspot.com
    www.vazhvuneri.blogspot.com

    ReplyDelete